Skip to main content

"எடப்பாடி பழனிசாமிக்கு எழுத படிக்க தெரிந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார்.." - மனுஷ்யபுத்திரன் விமர்சனம்

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

dfg

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக கொடுத்திருந்த நிலையில், நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே தற்போதுவரை நிறைவேற்றியுள்ளது" என குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எல்லா பிரச்சாரங்களிலும் கூறிவருகிறார். இதுதொடர்பாக திமுக செய்தித்தொடர்பாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரது அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் தற்போது தொடங்கியுள்ளது. அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். பிரச்சாரத்தில் பேசும் அவர், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், தற்போது நான்கைந்து வாக்குறுதிகளை மட்டுமே அது நிறைவேற்றியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை அனைத்து பிரச்சாரங்களிலும் தொடர்ந்து கூறிவருகிறாரே? 

 

நியாயமான கேள்விகளை எழுப்பு வேண்டியது ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதற்குப் பதில் சொல்ல ஆளும் கட்சியும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி எழுப்பும் கேள்வி முறையானதா என்று பார்க்க வேண்டும். பொய் கூறுவதே அவரின் தொடர் வேலையாக இருந்துவருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி என்னை கொடநாடு வழக்கில் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்கான ஆதாரத்தைக் கேட்டபோது எதையும் கூற முடியாமல் அமைதியானார். ஒன்பது மாவட்டங்களில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக நிச்சயம் படுதோல்வி அடையப்போகிறது. 

 

எனவே, அவ்வாறு நடைபெற்றால் அது அவரின் தலைமைக்கு மிகப் பெரிய பிரச்சனையாக முடியும் என்பதால் இத்தகைய பொய்களைக் கட்டவிழ்த்துவிடுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொடுக்க முடியாத ஒரு ஆட்சியை தளபதி கொடுத்துவருகிறார். அதை இவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவர்களால் முடிந்த அளவுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பது அவருக்குத் தெரியவில்லை என்றால், அவர் வாக்குறுதிகளை எண்ணத் தெரியாதவராக இருக்க வேண்டும் அல்லது எழுதப் படிக்க தெரியாதவராக இருக்க வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருந்ததைப் போல் வாக்குறுதிகளை நாங்கள் காற்றில் பறக்கவிட மாட்டோம். 

 

நீங்கள் ஆதாரப்பூர்வமாக பேச வேண்டும். திமுக இந்த வாக்குறுதி எல்லாம் தந்துள்ளது, ஆனால் நிறைவேற்றவில்லை. நாங்கள் கடந்த ஆட்சியில் இந்த வாக்குறுதிகளை தேர்தலின்போது கொடுத்தோம், இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என பேசுங்கள். அதை விட்டுவிட்டு வாயில் வரும் பொய்களை எல்லாம் அவிழ்த்துவிடுவது என்பது எந்த விதத்தில் நியாயம். வாட்சப் வதந்தி பரப்புபவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. தன்னுடைய இயலாமையை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி முழித்துக்கொண்டிருக்கிறார். தான் ஒரு பொய்யர் என்பதை எடப்பாடி பழனிசாமி தற்போது நிரூபித்துவருகிறார் என்பது மட்டுமே உண்மை. கொடுத்த வாக்குறுதிகளில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம், இன்னும் 5 ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது, அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்றால், இல்லை எங்களுக்கு மிச்சம் இருக்கிற வாக்குறுதிகள்தான் முக்கியம் என்று கேட்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை  நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

 

நகைக்கடன் தள்ளுபடியில் நிறைய கண்டிஷன் போடுகிறார்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இப்படி கண்டிஷன் போடுவோம் என்று சொன்னார்களா?  ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு மாற்றி பேசுவது ஏன் என்று அதிமுக தரப்பில் கேள்வி எழுப்பப்படுவதைப் பற்றி?

 

இதில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று ஆட்சிக்கு வந்த பிறகுதானே தெரியவந்துள்ளது. ஒரே நபர் 50 பேருக்கு கடன் வாங்குவது, கவரிங் நகைகளை வைத்துக் கடன் பெறுவது, குடும்பத்தில் அனைவருக்கும் கடன் வாங்குவது என பல்வேறு முறைகேடுகள் அங்கு நடைபெற்றுள்ளது. ஆட்சிக்கு வந்து ஆய்வு செய்ததில்தானே அதை எங்களால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரிகள் முறையான விசாரணை செய்துவருகிறார்கள். அதே நேரத்தில் சரியான முறையில் நகைக்கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாக இவர்களின் பேச்சுக்கள் இருக்கிறது. இவர்களும் அதில் கூட்டுக்கொள்ளை அடித்தவர்கள்தானே? அதனால் அவர்களின் போக்கு அரசை ஏமாற்றியவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இதில் வியப்பேதுமில்லை. 

 

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னீர்செல்வம் அறிக்கைக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை பற்றி? 

 

ஒரு ரவுடி நான்கு மாதங்களில் டெவலப் ஆகிவிட முடியுமா? திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கு மாதங்களில் இத்தனை ரவுடிகள் உருவாகிவிட்டார்களா? கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் யார், அவர்கள் ஆட்சியில் உருவானவர்கள்தானே இவர்கள் அனைவரும். அதிமுக ஆட்சியில் உருவான, உருவாக்கப்பட்ட ரவுடிகளை நாங்கள் கைது செய்துவருகிறோம். இதற்கு யாரும் காரணமில்லை. சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். 

 

 

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.