Skip to main content

லஞ்ச பணத்தில் ரூ.100 கோடி சொத்து; அதிரவைக்கும் கே.பி. அன்பழகனின் பினாமி

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

KP Anbazhagan assistant  had up to Rs 100 crore assets

 

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் அரசியல் பினாமிகள் மட்டுமே சிக்கியுள்ள நிலையில், தற்போது அரசு அலுவலர்கள் மட்டத்திலுள்ள பினாமிகளும் சிக்கியுள்ளனர். கே.பி.அன்பழகனின் ஆல் இன் ஆலாக இருப்பது பேராசிரியர் மாறவர்மன்தான் என்கிறார்கள் பேராசிரியர்கள். உயர்கல்வித் துறையில் எதுவாக இருந்தாலும் இவர் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்ற அளவிற்கு அமைச்சரின் விசுவாசியாக இருந்துள்ளார்.

 

உயர்கல்வித் துறை இயக்குநர் பதவிக்கு 2013-லிருந்து 2021-ம் ஆண்டுவரை நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாறவர்மன் மூலமாக ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து பணிக்கு வந்தவர்களே என்று பேராசிரியர்கள் குமுறுகிறார்கள். அன்பழகனுக்கு முன்பாக இருந்த அமைச்சர் பழனியப்பன், செந்தமிழ் செல்வி மற்றும் மாறவர்மன் செய்த ஊழல்களைக் கண்டறிந்து மாறவர்மனின் மீது நடவடிக்கை எடுத்தார். அதன்பிறகு வந்த அமைச்சரான கே.பி.அன்பழகனுடன் கைகோர்த்த மாறவர்மன், மீண்டும் வேலையைக் காட்டத் தொடங்கினார்.

 

அந்த வகையில், தமிழகம் முழுவதுமுள்ள அரசுக் கல்லூரிகளில் 3,900 கௌரவ விரிவுரையாளர்கள் இருந்த நிலையில், மேலும் 600-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரை யாளர்களை, ஒருவருக்கு 15 லட்சம் ரூபாயை நிர்ணயித்து பணி நியமனம் செய்துள்ளனர். மொத்தமுள்ள 4,500 கௌரவ விரிவுரையாளர்களில் 1000 பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும் பாடப்பிரிவுக்கு தகுந்தாற்போல 15 முதல் 25 லட்சம் வரை பணம் பெற்று அதற்கான ஜி.ஓ. போடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால் கௌரவ விரிவுரையாளர்களைப் பொறுத்தவரை அந்த கல்லூரிகளில் ஒரு குழு அமைத்து முதல்வர் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனால் இந்த பணியிடங்களில், அமைச்சர் கே.பி அன்பழகனின் பெயரில் மாறவர்மன் அனுப்பும் மெயிலில் உள்ள நபர்களையே பணி நியமனம் செய்துள்ளனர்.

 

அதேபோல, அரசு உதவிபெறும் 250 கல்லூரிகளில், 3,500 உதவிப் பேராசிரியர்களின் பணியிடம் நிரப்பப்பட்டதில் ஒவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து 1,500 தனியார் கல்லூரிகளில், புதிதாகத் தொடங்கப்பட்ட 250 கல்லூரிகளுக்கு, ஒரு கல்லூரிக்கு ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் கொடுத்துள்ளனர்.

 

மேலும் ஒவ்வொரு கல்லூரியிலும் புதிதாக துறையை உருவாக்கவேண்டும் என்றால், ரூ.10 லட்சம் என நிர்ணயித்து 5,000 துறைகளை புதிதாக உருவாக்கியுள்ளனர். இது மட்டுமா? தமிழகத்திலுள்ள 148 அரசுக் கல்லூரிகளில் 100 கல்லூரிகளின் முதல்வர்களையும், 11 கல்லூரி கல்வி இணை இயக்குனர்களில் 7 பேர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 10 பேர் என மாறவர்மனால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், தான் நினைத்ததை மாறவர்மனால் சாதிக்க முடிகிறது.

 

தமிழகம் முழுவதும், சென்னை முதல் திருச்சி வரைக்கான பொறுப்பை, கௌரவ விரிவுரையாளரும், அ.தி.மு.க. வட சென்னை மாணவரணிச் செயலாளருமான ஆர்.தேவகிரன் மற்றும் கௌரவ விரிவுரையாளர் அருணகிரி, கோவை மண்டலத்திற்கு கௌரவ விரிவுரையாளர் வசந்த், உயர்கல்வித் துறை சூப்பிரண்டென்ட் பூபேஷ் என நான்கு பேரும் தங்களுக்குள் பகுதி பிரித்துக்கொண்டு பணம் வசூலித்து மாறவர்மனிடம் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் ஒப்படைப்பார்களாம்.

 

இப்படி ஒருநாள் பணப்பரிமாற்றம் செய்யச் செல்லும்போது தேவகிரன் கார் விபத்தில் சிக்கினார். அந்த காரில் பூர்ணசந்திரன் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு செய்திகளிலும் வெளிவந்தது. அமைச்சரின் பினாமியாக இருக்கும் மாறவர்மன், அந்தமான் நிகோபர் தீவில் தனது தம்பி மனைவியின் பெயரில் ரூ.300 கோடி சொத்து வைத்துள்ளாராம். மேலும், ஆத்தூர் டூ சேலம் சாலையிலுள்ள வைகை கல்லூரி அருகாமையில் 25 ஏக்கர், சேலம் அழகாபுரத்தில் அப்பார்ட்மென்ட், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்பாக ஒரு அப்பார்ட்மென்ட், சென்னை பெருங்குடியில் வீடு, ஒய்.எம்.ஆர். கல்வி அறக்கட்டளை, பவுண்டேஷன், கன்ஸ்ட்ரக்ஷனில் ரூ.100 கோடி மற்றும் 3 கார்கள் மாறவர்மனின் சொத்தாக உள்ளன.

 

2008-ம் ஆண்டு உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்த இவருக்கு 2018 வரையிலும் ரூ.40 ஆயிரம்தான் மாதச் சம்பளமாக இருந்துள்ளது. இதில் அவர் 10 வருடத்தில் வருமான வரி, அரசு பிடித்தம், இதரச் செலவுகளெல்லாம் போக கையிருப்பாக சுமார் ரூ.15 லட்சம் வரையே சேமித்திருக்க முடியும். அடுத்த மூன்றாண்டுகளில், மாதச் சம்பளம் 1 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், அனைத்துப் பிடித்தம், செலவுகள் போக சுமார் 12 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியிருக்க முடியும்.

 

இவ்வளவு மட்டுமே சம்பாதிக்க முடிந்தவரால் பல நூறு கோடி மதிப்பிலுள்ள சொத்துக்களை எப்படி வாங்க முடிந்தது? தற்போது இவர் மூலமாகப் பலன்பெற்ற உயரதிகாரிகளும் சிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

வேட்டையாடும் லஞ்ச ஒழிப்புத்துறை; அலறும் அரசுத்துறை அலுவலர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாறு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (70). நெசவுத்தொழில் செய்து வந்த வெங்கடேசன், வயது மூப்பின் காரணமாகத் தறி ஓட்ட இயலாததால், மொத்த விலையில் ஊதுபத்தி வாங்கி சில்லறை வியாபாரமாக கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 1999 ஆம் ஆண்டு திருவத்திபுரம் ஊரைச் சேர்ந்த மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக ரோட்டரி வழக்கறிஞர் மூலம் இடம் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த இடத்தை ஒட்டி செய்யாறு வட்டாட்சியர் மூலமாக இலவச வீட்டு மனை பட்டா ஒன்றும் பெற்றிருந்தார். இவை இரண்டும் முன்னும் பின்னும் இணைந்த ஒரே காலி மனையாக இருந்தது. அதில் கூரை வீடு கட்டி வசித்து வந்துள்ளார் வெங்கடேசன்.

தற்போது 70 வயது ஆன காரணத்தினால் வெங்கடேசன் அந்த இடத்தை  தன்னுடைய மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைக்க நினைத்து செய்யாறு சார் பதிவாளர் அலுவலகம் சென்று சிலரிடம்  விசாரித்துள்ளார். அப்போது அவர்கள், 1999 ஆம் ஆண்டு மேனகா என்பவரிடம் உரிமை மாற்று ஆவணமாக பெற்ற பட்டாவின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் அதன் பிறகு, மகன் பெயருக்கு நேரடியாக கிரையம் செய்தால் மட்டுமே சொத்தை மாற்ற முடியும் என்று சொல்லியுள்ளனர்.

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

அதனால், பட்டா மாற்றம் விஷயமாக கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, மக்களுடன் முதல்வர் முகாமில் வெங்கடேசன் மனு ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, வெங்கடேசன் நேற்று (11-03-24) திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள சர்வேயர் பிரிவில் சர்வேயர் கன்னிவேலை சந்தித்து பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசியுள்ளார். அப்போது கன்னிவேல், லஞ்சமாக 40 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், ‘எனக்கு 70 வயது ஆகிறது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன்’ என்பதை கூறியுள்ளார். அதற்கு கன்னிவேல், ‘கடைசியா சொல்றேன், 20 ஆயிரம் கொடுத்தால் தான் என்னால் பட்டா மாற்றம் செய்ய முடியும்’ என்று சொல்லி வெங்கடேசனை அனுப்பிவிட்டார். 

Screaming bribe-taking government officials for A predatory anti-bribery department

இதில் மனமுடைந்து போன வெங்கடேசன், திருவண்ணாமலை விஜிலன்ஸ் டி.எஸ்.பி வேல்முருகனை அணுகி இன்று (12-03-24) காலை புகார் மனு கொடுத்தார், இதன் அடிப்படையில் டி.எஸ்.பி வேல்முருகன் இன்று காலை ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் தந்து அனுப்பியுள்ளார். ரசாயன பவுடர் தடவிய பணத்தை வெங்கடேசன், சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தபோது, அவர் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்க சொல்ல இவரும் தந்துள்ளார். அவர் பணம் பெற்றதும் உள்ளே நுழைந்த விஜிலன்ஸ் குழுவினர் கையும் களவுமாகப் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி திருவத்திபுரம் நகராட்சி மற்றும் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.