Skip to main content

அமைச்சரால் அமராவதி ஆற்றில் புதைக்கப்படும் கரூர் மாவட்ட அதிமுக!!! ர.ர.க்கள் வேதனை!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020


    

ddd

 

கடந்த சில வாரத்திற்கு முன்னர் கரூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ''கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க தான் ஜெயிக்கும், அதுவும் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும், இதற்கு பந்தயம் கட்ட தயாரா? கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுகவினர் ரெடியா?'' என்று கரூர் மாவட்ட திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிமுக வட்டாரத்தினை அலற விட்டனர்.

 

பதிலுக்கு ''நாங்கள் ரெடி'' என்று அதிமுக வட்டாரத்திலும் சிலர் வீடியோ பதிவு செய்து வைரலாக வெளியிட்டாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்கு அடுத்ததாக போஸ்டர் யுத்தம், சுவர் விளம்பரம் என்று இரண்டு கட்சியினரும் மாறி மாறி கரூரில் அரசியல் நடத்த அது சமீபத்தில் திமுக தரப்பில் ஒரு கொலையில் முடியும் அளவுக்கு போனது.    

  

ddd

 

நாம் இது சம்பந்தமாக மேலும் விசாரித்தபோது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு அதிமுகவில் இருந்தபோது தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தார். சசிகலா ரூட் எடுத்து அவர் பண்ணிய அட்ராசிட்டி, மூத்த அமைச்சர்களையே முகம் சுழிக்க வைத்தது.

 

இந்த நிலையில் தான் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் செந்தில்பாலாஜியின் தனி ஆவர்த்தனத்தைப் பற்றி சொல்ல, செந்தில் பாலாஜிக்கு செக் வைத்து விஜய்பாஸ்கரை களம் இறக்கினார் ஜெயலலிதா. சரி இவராவது ஒழுங்கா இருப்பார் என்றால் அது தான் இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவரும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பித்து விட்டார். 

 

ddd


சுவர் விளம்பரங்களில் எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே, அதாவது காலிங்கராயரே, வல்லவனே என்று பல வசனங்களை போட்டு விளம்பரப் படுத்துகிறார். அதேபோல் தான் வைத்திருக்கும் ஒரு அறக்கட்டளை பெயரில் நல்லத்திட்ட உதவிகள் வழங்கி அந்த அறக்கட்டளையை முன்னிறுத்தி செயல்படுகிறாரே தவிர கட்சியை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இதனால் கரூர் மாவட்ட அதிமுகவினரே இவர் மாவட்ட செயலாளராக இருந்தால் நான்கு தொகுதியையும் இழப்பதை தவிர வேறு வழியில்லை என்று தலைமைக்கு புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

 

அதேபோல் அம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட முன்னாள் இளம்பெண்கள் பாசறை மாநில துணை தலைவராக இருந்த செந்தில்நாதன், அரவக்குறிச்சி தொகுதியில் நின்று முன்பு செந்தில்பாலாஜியுடன் தோல்வியுற்றார். இந்த தடவை எப்படியும் அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு சீட் கேட்பார். அப்படி கேட்டு ஜெயித்து விட்டால் எப்படியும் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார் என்று நினைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமையில் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி தற்சமயம் செந்தில்நாதன் வகித்து வந்த இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்க வைத்து விட்டார். இதே போல் தனக்கு எதிராக இருக்கும் பலரையும் பழிவாங்க காத்திருக்கிறார் என்கின்றனர் அம்மாவட்ட அதிமுகவினர். 

 

இப்படியே அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்பட்டால் கரூர் அமராவதி ஆற்றிலேயே அதிமுகவை புதைத்து விட்டு அவருடைய அறக்கட்டளையை அமோக வளர்ப்பார் என்ற தகவலே கரூர் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் ஒரே பேச்சாக உள்ளது என்கின்றனர் அதிமுகவினர். 

 

மாவட்டத்தில் அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் குறித்து பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிளைச் செயலாளர் குழந்தைவேல் நம்மிடம், செந்தில்பாலாஜி இருந்தபோதும் கட்சிக்குள் அடித்துக்கொண்டார்கள். விஜயபாஸ்கர் இப்போது இருக்கும்போதும் அடித்துக்கொள்கிறார்கள். நாங்கள் ஓட்டு இவர்களுக்காக போடவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக போடுகிறோம். இவர்களை அடக்கும் ஆளுமை உள்ளவர்கள் வந்தால்தான் இந்தப் பிரச்சனைகள் தீரும் என்றார். 

 

 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.