Skip to main content

எல்.ஐ.சி ஊழியர் டூ விஷ்ணு அவதாரம்..! கல்கி ஆசிரமம் கடந்து வந்த பாதை...

Published on 17/10/2019 | Edited on 18/10/2019

நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஒரு ஆசிரமம் மற்றும் அதற்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொள்கின்றனர். கணக்கில் காட்டாத பணம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறித்து விசாரணை செய்கின்றனர். ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என நீண்டுகொண்டே போகிறது அவர்களின் விசாரணை கேள்வி பட்டியல். இப்படி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுடன் மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ள இந்த கல்கி ஆசிரமத்தின் தொடக்கம் என்ன..? எப்படி தனது வாழ்க்கையை தொடங்கினார் கல்கி ஆசிரமத்தின் முதன்மையானவரான கல்கி பகவான்..?

 

kalki ashram and kalki bhagavan history

 

 

1949 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான் இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். 

சென்னையில் தனது படிப்பை முடித்த விஜயகுமார், 1971 ல் எல்.ஐ.சி நிறுவனத்தில் ஒரு பணியில் சேர்கிறார். அவர் எல்.ஐ.சி யில் பணியாற்றிய காலங்களில் அவருக்கு அறிமுகமான தத்துவஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகள்தான் இன்றைய கல்கி பகவானிற்கு விதை என்றே கூறலாம். ஜே.கே வின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஜே.கே வின் அனைத்து தியானக் கூட்டங்களுக்கும் ஒன்று விடாமல் செல்ல ஆரம்பித்தார். இதனால் ஏற்பட்ட பழக்கத்தால், ஆந்திராவில் ஜே.கே பவுண்டேஷன் நடத்தும் `ரிஷி வேலி ஸ்கூல் ஆஃப் ஜே.கே. ஃபவுண்டேஷ'னில் ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. 

 

kalki ashram and kalki bhagavan history

 

சிறிதுகாலம் இதில் பணியாற்றிய அவர், 1980 களின் மத்தியில் அந்த அறக்கட்டளையில் இருந்து வெளியேறி சொந்தமாக அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். அதன்மூலம் 1984 ல் ஜீவாசிரமம் என்ற பள்ளி ஒன்றையும் ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்த இந்த பள்ளி நடத்திய காலகட்டத்தில்தான், விஜயகுமார் என்ற மனிதர் கல்கி பகவான் அவதாரம் எடுப்பதற்கான ஆழ்ந்த ஆன்மீக அறிவை சம்பாதித்ததாக கூறப்படுகிறது. 1989, பள்ளி நிர்வாகம் நன்றாக சென்றுகொண்டிருந்த காலம் அது, அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாக அறிவித்துக்கொள்கிறார் விஜயகுமார். தான் விஷ்ணுவின் அவதாரம் என்றும், தனது பெயர் கல்கி பகவான் என்றும் மக்கள் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள தொடங்கினார். 

பின்னர் கல்கி பகவானுக்கு என ஆந்திர மாநிலம் சித்தூரில் ஆசிரமம் ஒன்றும் அமைக்கப்பட்டு, அது பக்தர்கள் வருகையால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அன்றிலிருந்து தொடங்கியதுதான் இந்த கல்கி ஆசிரமத்தின் அசுர வளர்ச்சி. விஜயகுமார் கல்கி பகவான் ஆன காரணத்தினால் அவரது மனைவி பத்மாவதி ”அம்மா பகவான்” ஆனார். வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்த பள்ளி 1994 ஆம் ஆண்டு மூடப்பட்டது. தமிழகம், கர்நாடகா உட்பட நாடு முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கப்பட்டன. கல்கி பகவான் மீதான பக்தர்களின் நம்பிக்கை நாளுக்குநாள் வளர்ந்த நிலையில் உலகம் முழுவதும் ஆசிரமங்களும் வளர ஆரம்பித்தன. இந்த சூழலில் ஆன்மீக கல்வியை மையமாக வைத்து 1999 ஆம் ஆண்டு சென்னையின் முடிச்சூர் அருகே ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என்ற திட்டத்தை தொடங்கினார் கல்கி பகவான். 

 

kalki

 

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஷில்பா ஷெட்டி, ரித்திக் ரோஷன் என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல நட்சத்திரங்களுக்கு கல்கி பகவான் ஆஸ்தான குருவாகிப்போனார் என்றே கூறலாம். பக்தர்கள் எண்ணிக்கை வளர்ந்த அதே நேரத்தில், கல்கி ஆசிரமத்தை பற்றிய சர்ச்சைகளும், குற்றச்சாட்டுகளும் கூட வளர்ந்துகொண்டே இருந்தன. கல்கி பகவானை பார்க்க வேண்டுமென்றால் ரூ.50,000, அவரது பாதத்தை மட்டும் தரிசிக்க ரூ.10,000 என அனைத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும், ஆசிரமத்தில் பூஜைகள் செய்ய எக்கச்சக்க பணம் வாங்குகிறார்கள், வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள் கொடுக்கிறார்கள் என பல குற்றசாட்டுகள் எழுந்தன. வழக்குப்பதிவு, நீதிமன்ற வழக்குகள் என அடுத்தடுத்து பல சர்ச்சைகளை கடந்தாலும், இன்று வரை ஆயிரக்கணக்காக பக்தர்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர்.

இப்படிப்பட்ட பக்தர்கள் நம்பும் கடவுள் அவதாரத்தின் மகனான மகன் என்.கே.வி கிருஷ்ணா கோடிக்கணக்கான முதலீட்டில் பல தொழில்களை செய்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை அவதாரமான நிலையில், மகனோ ஆயிரக்கணக்காக கோடிகள் புரளும் பல தொழில்களை சிறப்பாக செய்து வருகிறார். 2012 முதலே வருமானவரித்துறையினர், கிருஷ்ணா மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், தற்போது இவரது அலுவலகம், ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்கள் என 40 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

 

kalki ashram and kalki bhagavan history

 

ஆந்திராவில் 5 ஆயிரம் ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் சொத்துகள், ஒன்னெஸ் பல்கலைக்கழகம் என கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சொந்தமாக 1000 கோடிக்கு மேல் சொத்து, அவை இல்லாமல் அவரது மகனின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நிறுவனம், பெங்களூருவில் உள்ள கட்டுமான நிறுவனம் என பக்தர்களின் நம்பிக்கை மற்றும் கல்கி பகவான் குடும்பத்தினரின் உழைப்பால் சேர்ந்துள்ள இந்த சொத்துக்கள் குறித்த விவரங்களையே தற்போது வருமானவரித்துறையினர் சோதனை மூலம் கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர். 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

காதலிக்கு சரமாரி கத்திகுத்து; காதலன் வெறிச்செயல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 lover stabbed his girlfriend who forced her to marry him

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் ஆதித்யா சிங்(27). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவரும் இவர்' அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு இளம் பெண் ஒருவரும் வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா சிங்கிற்கும் அந்தப் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதித்யா சிங் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆதித்யா சிங்கை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனை ஆதித்சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மறுபடியும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் ஆதித்யா சிங்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கம் போல மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை ஆதித்யா சிங், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். பின்பு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

அப்போது, அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்  காதலிப்பதாக கூறி  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆதித்யா சிங்கை தேடி வருகின்றனர்.