Skip to main content

“ஆளுநருக்கு கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லை..” - கே. பாலகிருஷ்ணன் தாக்கு 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

 

இவ்விழாவில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “கலைஞர் நூற்றாண்டு விழாவாக மட்டுமல்லாமல் இந்த ஆண்டு முழுவதும் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெல்லாம் கலைஞர் செய்த மாபெரும் சாதனைகளை விளக்குவதைப் பற்றி நமது முதல்வர் திட்டமிட்டிருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கலைஞர் எந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இந்தியாவில் நிலை நிறுத்த விரும்பினாரோ அதை மக்களுக்கு நினைவூட்டும் விழாவாகவும் இந்த கலைஞர் நூற்றாண்டு விழா இருக்கிறது. 

 

K. Balakrishnan speech at Kalaignar's 100 year celebration

 

கலைஞர் சிறு வயதில் செய்த சாதனைகள் நம்மை வியக்க வைக்கிறது. ‘ஃப்ரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகை கலைஞரை பற்றி ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டிருந்தது.  அந்த இதழில் உள்ள கட்டுரையில், தனது 13 வயதிலேயே ‘செல்ல சந்திரா’ என்ற சரித்திர நாவலை தமிழில் எழுதியவர் டாக்டர். கலைஞர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த கட்டுரையை படித்தபோது நான் அதிர்ந்து போனேன். எப்படி தனது 13 வயதில் நாவலை எழுத முடியும்? ஏதாவது இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள் என்று எண்ணி அந்த கட்டுரையின் ஆசிரியரை தொடர்பு கொண்டு, நமது இந்து பத்திரிகையின் ஆசிரியர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் கலைஞரை பற்றி ஆய்வு நூல் வெளியிட்டிருக்கையில் இப்படி எழுதி இருக்கிறீர்களே இது உண்மையா என்று கேட்டபோது, அந்த கட்டுரையின் ஆசிரியர் இது நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறினார். 

 

அந்த செல்ல சந்திரா என்ற நாவல் தற்போது  திமுகவின் அலுவலகமாக இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயத்தில் அரை பக்க நூலாக இருக்கிறது. முழு நூல் கிடைக்காத காரணத்தினாலேயே அந்த நூலை பதிப்பிடம் செய்யவில்லை என்று அந்த ஆசிரியர் கூறினார். 

 

இந்த நாவலுக்கு கலைஞர் முன்னுரையும் எழுதியுள்ளார். அந்த முன்னுரையில், “இன்றைய திராவிட நாடு அதன் கலைகளையும் நாகரிகத்தையும் இழந்து சாதிய மூட நம்பிக்கைகளில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழை ஒழிக்க சதி வேலை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு, துளு ஆகிய திராவிட மொழிகளில் பழம்பெருமைமிக்க தமிழை அழிக்க விரும்புகிறார்கள். திராவிடர்கள் விழித்து எழ வேண்டிய நேரம் இது" என்று குறிப்பிட்டிருக்கிறார் என்று அந்தக் கட்டுரையின் ஆசிரியர் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல், அந்த நாவலில் எந்த ஒரு எழுத்து பிழையும், இலக்கண பிழையும் இல்லை என்று அந்த ஆசிரியர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.  

 

தனது 13 வயதில் திராவிடத்தை பற்றியும், திராவிட இயக்கத்தை பற்றியும் புரிந்து கொண்டிருக்கின்ற தனி வார்ப்பாக தான் கலைஞர் இருந்திருக்கிறார். ஆனால், இன்று சென்னையில் ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கிற ஆளுநருக்கு, கலைஞரின் அரை சதவீத அறிவு கூட இல்லையே என்பது தான் வேதனையாக இருக்கிறது. தமிழை பற்றியும், திராவிடத்தை பற்றியும் தெரியாமல் அரசாங்கத்தின் மாளிகையில் அமர்ந்து கொண்டு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் எதை வேண்டுமானாலும் பேச முடியுமா?   

 

கலைஞர், 13 வயதிலே எப்படிப்பட்ட கொள்கைகளை தூக்கி நிறுத்த விரும்பினாரோ, அந்த கொள்கைகளுக்கு எல்லாம் சாவு மணி அடிக்கும் வகையில் இன்றைக்கு சனாதன சக்திகள் இந்தியாவில் வேகமாக பணியாற்றி கொண்டிருக்கின்றன. அந்த சனாதன சக்திகள் ஏவப்பட்ட அம்பாகத்தான் நமது ஆளுநர் செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.

 

 

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.