Skip to main content

அன்று டேனிஷ் சித்திக்; இன்று ஷிரீன் அபு அக்லே - அதிகாரப் பசிக்கு இரையான பத்திரிகையாளர்!

Published on 12/05/2022 | Edited on 13/05/2022

 

 journalist incident during Israeli raid

 

1997- ஆம் ஆண்டு, தனது 26- வது வயதில் போர்க்களத்தில் இறங்கிய அப்பெண்ணுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பிற்காலத்தில் நமது வாழ்வு ஒரு நித்திய சுடர் ஆகும் என்று. இன்று, அவரது 51 ஆவது வயதில் வீழ்ந்தாலும், அவரது போராட்ட குணத்தாலும், அநீதிக்கு எதிராக தனது குரலாலும் கம்பீரமாக நிற்கிறார், நிற்பார்.

 

'PRESS' என்ற வாக்கியத்தை, நீதிக்கான கடமையை ஏந்தும் அனைவரது இதயத்திலும், அவர்கள் சந்தித்த துயரங்கள் ஒரு வடுவாக வாழ்ந்து கொண்டிருக்கும். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில், ஆபத்துகள் வீற்றிருக்கும் பாதையில் வீறுநடை போட்டு, குண்டு மழை பொழியும் போர்க்களத்தில் நின்று உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்கள் என்றுமே மடிவதில்லை.

 

தலிபான்களால் கொல்லப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர் டேனிஷ் சித்திக் அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது, நாம் மற்றொரு மகத்தான பத்திரிகையாளரை இழந்திருக்கிறோம். 51 வயதான அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்ரேலிய படையால், பாலஸ்தீனத்தில், சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்.  மே 3- ஆம் தேதி, தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிரீன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என யார் தான் அறிந்திருந்தோம்? போராட்ட குணம் நிறைந்த இதயங்கள், பிறந்த நாளுக்கோ, இறந்த நாளுக்கோ எதற்கும் தயாராகத்தான் இருக்கின்றன.

 

இரண்டு தசாப்தங்களாக போர்க்களத்தில் வாழ்ந்த ஷிரீன், தன்னை எப்போதேனும் தோட்டாக்கள் தாக்கும் என நிச்சயமாக யூகித்திருப்பார். இருந்தும், தனது தோளில் சுமந்தப் பணியை, நீதிக்கான குரலை அவர் எப்போதும் இறக்கி வைத்ததில்லை. ஜெருசலேத்தில் பிறந்த ஷிரீன், பிற்காலத்தில், அரேபிய உலகில் மிகப் பிரபலமான பெண் பத்திரிகையாளராக உயர்ந்து நின்றார். 1997- ல் அல் ஜஸிராவில் பயணிக்க தொடங்கிய ஷிரீன், பாலஸ்தீன அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்கும் பொழுது, இஸ்ரேலிய படையின் தோட்டாக்களுக்கு இரையாகி இருக்கிறார்.

 

சிறிய உலகில் ஒரு நெடும் பயணமாக அது இருந்தாலும், ஆயுதங்களுக்கு எதிராக தனது வலிமையான குரலால், பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறையை சர்வதேச சமூகத்திற்கு பறைசாற்றினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீனிய மக்களின் அவலநிலையைத்  தொடர்ந்து வெளிப்படுத்தினார். இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய மக்களின் இறுதி ஊர்வலத்தை கா(சா)ட்சிப்படுத்தியவர், தற்போது அதே படைகளால் கொல்லப்பட்டது, அப்போர்க்களத்தின் தட்பவெப்ப நிலையை நமக்கு ஆவணப்படுத்தியிருக்கிறது.

 

பத்திரிக்கைத் துறையில் தான் செய்த அளப்பரிய பணி, பாலஸ்தீனிய அகதிகளுக்கு தான் ஆற்றிய சேவை, மற்றும் மற்ற அரேபியர்களும் பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க அவரின் உந்துதல் ஆகியவை மூலமாக ஷிரீன் அவரை வீழ்த்திய தோட்டாக்களை தோற்கடிப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பயங்கரவாதத்தால் பலியான சவுதியின் ஜமால் காஸோக்கி, இந்தியாவின் டேனிஷ் சித்திக், கவுரி லங்கேஷ் போன்றோரின் வரிசையில், ஷிரீனும் பலியாயிருக்கிறார்.

 

வீழ்வது நாமாயினும் வாழ்வது நாடாகட்டும் என்பதுபோல, தான் வீழ்ந்தாலும், தன் பங்களிப்பின்மூலம் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருப்பார். "அழிவின் அளவையோ அல்லது மரணம் சில சமயங்களில் நெருங்கிவிட்டது என்ற உணர்வையோ என்னால் மறக்கவே முடியாது." - ஷிரீன் 2002- ஆம் ஆண்டு உதிர்த்த வார்த்தைகள் இவை. இந்தாண்டு தொடக்கத்தில், அல் ஜசீரா, ஷிரீனின் 25- வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஒரு காணொளி வெளியிட்டது. அதில் ஷிரீனின் பேச்சு மறக்கமுடியாதவை, "கடினமான காலங்களில், நான் பயத்தை வென்றேன். யதார்த்தத்தை மாற்றுவது கடினமாக இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் அந்த குரலை உலகிற்கு கொண்டு வர முடிந்தது" என கூறினார்.

 

ஷிரீனின் குரல் எப்பொழுதும் மக்கள் படும் துன்பங்களின் குரலாகவே இருந்திருக்கிறது. அவர்களின் சுதந்திரத்திற்கான, விடுதலைக்கான நம்பிக்கையாய் இருந்தது. கண்ணீர் துடைத்த கைகளை, தற்போது தோட்டாக்கள் துளைத்துவிட்டது. ஆனால், தோட்டாக்கள் தோற்றுப்போகும், ஆயிரம் ஷிரீனின் எழுச்சியினால். பயங்கரவாதமும் தோற்கும். அது தோற்பதற்கு தாமதமாகும், ஆனால் இறுதியில் வீழும். அதற்கு நம் கண்முன் இருக்கும் தற்போதைய சாட்சி இலங்கை.

 

ஷிரீன் வீழ்த்தப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.

 

- அழகு முத்து ஈஸ்வரன் 

 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.