Skip to main content

தென்னை மரத்தை வேப்ப மரமாக மாற்ற முடியாது... அமித்ஷாவே வந்தாலும் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியாது - இமையம் தடாலடி!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

dfg

 

சென்னை ஐஐடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் அறிவுறுத்தல் கடிதத்தை சென்னை ஐஐடி இயக்குநருக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், இதுவரை நடைபெற்றிருந்த ஒரு முறையை திடீரென மாற்றுவது, கேட்டால் இது மத்திய அரசின் நிறுவனம் என பதில் அளிக்கிறார்கள் என்று சில சமூக ஆர்வலர்கள் ஐஐடி-க்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இந்நிலையில் சென்னை ஐஐடியின் நடவடிக்கை தொடர்பாக எழுத்தாளர் இமையம் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

"சென்னை ஐஐடியில் இந்த மாதிரியான நிகழ்வுகள் இது முதல் முறையல்ல, பல முறை இது மாதிரியான வேறு வேறு தவறுகளை அந்நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. அதை நடத்துவது ஒன்றிய அரசாக இருக்கலாம், இல்லை தமிழக அரசாக இருக்கலாம் என்பது முக்கியமில்லை, அது செயல்படுவது மக்கள் வரிப்பணத்தில். எனவே பாரம்பரியமாகச் செய்யப்பட்டு வரும் ஒரு முறையை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி தான்தோன்றித்தனமாக மாற்றுவது என்பது ஏற்புடையது அல்ல, இது வன்மையான கண்டனத்துக்குரியது. 

 

மேலும் சென்னை ஐஐடியில் பெரியார் படிப்பகம், அம்பேத்கர் படிப்பகம் முதலியவற்றை எல்லாம் இவர்கள் ஒழித்துக்கட்டி நாங்கள் சொல்லுவதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை அவர்கள் தொடர்ந்து பின்பற்ற, அதைப்பற்றி அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள அவர்களால் ஆன அனைத்து தடைகளையும் ஏற்படுத்தி பார்க்கிறார்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவர் வந்தாலும், பிரதமர் வந்தாலும் தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என்பது காலம் தொட்டு நடைபெற்று வருகின்ற ஒரு நிகழ்வு.

 

அதை மாற்றுவது என்பது பண்பாட்டை குழிதோண்டி புதைப்பதைப் போன்றது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பாஜக அரசாக இருந்தாலும் மொழி சார்ந்த கொள்கைகளில் இருவருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். இந்தியைத் திணிப்பது அல்லது பிற மொழியைத் திணிப்பது என்பது நிர்வாக ரீதியான குழப்பங்களை அது ஏற்படுத்தும். ஆனால் அது எதைப்பற்றியும் இந்த மாதிரியான நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒன்றிய அரசின் அலுவலகங்களில் எல்லாம் இந்தியை முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் இத்தகைய செயல்பாட்டில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இது அந்தந்த மாநிலங்களில் தாய் மொழியை நேசிக்கும் மக்களுக்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. 

 

இரு மொழி கொள்கையை ஏற்றுக்கொண்ட நம்மை, மற்றொரு மொழியைப் படி என்றோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. நானாக விரும்பி படிப்பது என்பது வேறு, கட்டாயப்படுத்தி படிக்க வைப்பது என்பது வேறு. 100 அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் இந்தியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவன் எதற்கு வேலைக்கு வர வேண்டும். தற்போதைய தமிழக அரசு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

 

எனவே மாணவர்கள் தமிழை நோக்கிய தங்களின் பார்வையை திருப்பியுள்ளனர். தென்னமரத்தை வேப்ப மரமாக மாற்ற முடியாதது எவ்வளவு உண்மையோ, அது போல தமிழ்நாட்டில் இந்தியை எப்போதும் திணிக்க முடியாது. தமிழக மக்களும், மாணவர்களும் மற்ற இடங்களைப் போல் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை, அனைவரும் விவரம் தெரிந்தவர்கள். எனவே எத்தனை ஆண்டுகள் இவர்கள் இந்தியைத் திணிக்க முயற்சி செய்தாலும் தோல்விதான் அவர்களுக்கு மிஞ்சும் என்பது மட்டும் உண்மை. 


 

 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.