Skip to main content

பிறந்தநாளை கொண்டாடாமல் பெயர் வைத்த நாளை கொண்டாடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? - இடும்பாவனம் கார்த்திக் கேள்வி!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

jkl


தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக பேசியபோது தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் இதுதொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில் வருமாறு, "நாம் இதில் குழம்புவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள்தான் தங்களை ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஆளும் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. இந்த ஐந்து மாத இடைவெளியில் ஜூலை மாதம் 18ஆம் தேதியும் வந்தது. அந்த நாளில் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைத்த தினத்தை கொண்டாடியிருக்கலாமே? ஏன் செய்யாமல், தற்போது அடுத்த வருடத்திலிருந்து கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் நவம்பர் முதல் தேதியை தமிழ்நாடு நாள் என்று கொண்டாட இருக்கின்ற நிலையில், தமிழ்நாடு நாள் ஜூலை 1ஆம் தேதிதான் என்று அறிவித்ததில் உள்நோக்கம் இருப்பதாகவே சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

 

ஏட்டிக்குப் போட்டியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த மாதிரி அவர்களை செய்ய வைக்கிறது.  தமிழ்நாடு நாள் என்று நாம் ஏன் கொண்டாடுகிறோம் என்றால், தமிழ்நாடு என்று அங்கீகரிக்கப்பட்ட நவம்பர் முதல் தேதிதான் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு என பெயர்வைக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் நாம் இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம். பிறந்தநாளைக் கொண்டாடாமல் பெயர் வைத்த நாளைக் கொண்டாடச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது. இவர்கள் இவ்வாறு செய்வது அனைத்திற்கும் அரசியல் நோக்கம் இருக்கிறது. அண்ணா பெயர் வைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த தமிழ்நாடு நம்மிடம் வந்தபோது நாம் பல்வேறு நிலப்பகுதிகளை இழந்தோம். தேவிக்குளம், பீர்மேடு, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்தோம். இந்தப் பகுதிகளை எல்லாம் நாம் மீண்டும் மீட்போம் என்ற உறுதிமொழியை தற்போதைய தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டியதுதானே? ஏன் அதைச் சொல்ல மறுக்கிறார்கள். முல்லை பெரியாறு அணையை மீட்போம் என்று கேரளாவைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள், நீங்கள் பீர்மேடு, தேவிக்குளம் பகுதியை மீட்போம் என்று கூற ஏன் பயப்பட வேண்டும். 

 

திராவிடத்துக்கும் ஆரியத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது தாங்கள்தான் தமிழ் சமூகத்துக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்தார்கள், நாகரீகத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள் என்ற எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இவ்வாறு அனைத்தையும் திரிக்க முயல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் திராவிடம், திராவிடம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை என்ற மனநிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டுக்கென்று கொடி வேண்டும் என்று கூறுகிறோம். கர்நாடகாவுக்குத் தனிக்கொடி உள்ளது. அதேபோன்று தமிழகத்துக்கும் கேட்கிறோம். ஆனால் முந்தைய கருணாநிதி ஆட்சியில் தனிக்கொடி என்று ஒன்றைக் கொண்டுவந்தார்கள். ஆனால் அதையும் இந்திரா காந்திக்கு பயந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், மாநிலத்தில் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை நாங்கள்தான் பெற்றுக்கொடுத்தோம் என்று இன்றைக்கு கூறுகிறார்கள். உங்களின் நோக்கம் அதுதானா? இவர்கள் தமிழக நலனுக்காக எதுவுமே செய்ய மாட்டார்கள். இவர்களைப் பெருமைப்படுத்தும் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்