Skip to main content

"34 வயதில் நான் எம்எல்ஏ... இதுவே பலருக்குத் தெரியாது; ஏனென்றால் நான் அரசியலில் படிப்படியாக உயர்ந்தவன்..." - எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 07/11/2022 | Edited on 08/11/2022

 

hk

 

எம்ஜிஆர் பெயரில் அறக்கட்டளை மற்றும் சினிமா நிறுவன துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, " எனக்கும் திரைத்துறைக்கும் வெகுதூரம். நான் திரையரங்கு சென்று படம் பார்த்து 25 ஆண்டுக் காலம் ஆகிறது. மற்றபடி தொலைக்காட்சியில் வருவதை நான் பார்த்திருக்கிறேன். பல திரைப்படத்தில் யார் நடிகர்கள் நடிகைகள் என்று கூட எனக்குத் தெரியாது. என்னுடைய மகன்கள் மற்றும் மனைவி அதில் வருபவர்களைப் பற்றி என்னிடம் கூறுவார்கள்.

 

இதை எதற்காக இங்குக் கூறுகிறேன் என்றால் அரசியலும் திரைத்துறையும் ஒன்றோடொன்று கலந்தது. இங்குப் பேசிய திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாமானிய மனிதர் ஒருவர் முதல்வராக இங்கு வருவது அவ்வளவு எளிதல்ல என்று அவர் கூறினார். அது உண்மையும் கூட. திரைத்துறையில் வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதைப்போலத்தான் அரசியலில் வருவது என்றாலும் கஷ்டமான ஒன்று.

 

சிலருக்கு மட்டும்தான் அரசியலில் அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனை நல்ல முறையில் நான் பயன்படுத்திக்கொண்டேன். மேலும் எஸ்ஏசி பேசும்போது ஏழை எளிய மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய வேண்டும், அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று பேசினார். என்னுடைய தலைவர்களே ஏழை எளிய மக்களின் கொடையாகப் பிறந்திருக்கிறார்கள். பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் ஏழை மக்களுக்காகவே உழைத்தார். அவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது. படிப்பு உயர்ந்தது. மருத்துவம் அவர்களுக்கு வேண்டியது  கிடைத்தது. இன்னும் எத்தனையோ திட்டங்கள் அவர்களுக்கு எளிதாகக் கிடைக்க அவர் பாடுபட்டார். அதனைத் தொடர்ந்து புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அதனை நிறைவேற்றிக் காட்டினார்கள். 

 

இன்னமும் சில செய்திகளைக் கூற வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த இரண்டு தலைவர்களுமே திரைத்துறையிலிருந்து வந்தவர்கள். வேறு எந்த இயக்கத்துக்கும் இந்தப் பெருமை இருக்காது. ஆகவே திரைத்துறையின் அடித்தளத்தை ஆதாரமாக வைத்து இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. வேறு எந்த இயக்கத்திற்கும் இந்தச் சிறப்பு கிடைக்காது. திரைத்துறையில் எளிதில் ஜொலித்துவிடலாம். இரண்டு படம் நன்றாக நடித்தால் போதும், நல்ல இயக்குநர்கள் நடிகர்களுக்கு இரண்டு படங்களைச் சிறப்பாகக் கொடுத்தால் அவர்கள் எளிதில் செல்வாக்குப் பெற்றுவிடுவார்கள். ஆனால் அரசியல் அப்படி எளிதாக இருக்காது. எத்தனை எத்தனை கடினங்களைக் கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியாது.

 

ரோட்டில் மக்களைச் சந்திக்க ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து, அதாவது ஏணியில் ஒவ்வொரு படிக்கட்டாய் எப்படி ஏறுகிறோமே அப்படி படிப்படியாக உயர்ந்து இந்த இடத்தைப் பிடித்துள்ளோம். காலையில் ஏறி மாலையில் முதல்வராகி விட முடியாது. கடுமையான உழைப்பு இருக்க வேண்டும். நிறையக் கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும். கடுமையாக நம்மை எதிர்க்கக் காத்திருப்பார்கள். எப்போது தவறு செய்வோம். நம்மை வீழ்த்தலாம் என்ற ஒற்றை நோக்கத்தில் நம்மை நோட்டமிட்டு வருவார்கள். அவர்களிடம் நாம் சிக்காமல் எந்தத் தவறும் செய்யாமல் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். சிறிது தவறு செய்தாலும் நம் எதிர்காலத்தை அது பாதிக்கும் பெரிய தவறாக மாறிவிடும். 

 

நான் 34 வயதில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டேன். இது பலபேருக்குத் தெரியாது. அந்த அளவிற்கு நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். ஆனால் என்னுடைய எடப்பாடி தொகுதியிலே எந்த மூலை முடக்குகளில் போய் கேட்டாலும் இந்த எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்களோடு இணைந்தே என்னுடைய இத்தனை வருட பணிகளை அமைத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட 10 முறை அந்தப் பகுதியில் போட்டியிட்டுள்ளேன்.

 

7 முறை சட்டமன்றத்துக்கும், மூன்று முறை நாடாளுமன்றத்துக்கும் போட்டியிட்டுள்ளேன். ஒருமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றாலே அடுத்த முறை மக்களைச் சந்திக்க பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால் இப்போது கூட 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றியடைய வைத்துள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய கடினமான உழைப்பு. அதை எப்போதும் இந்த மக்களுக்குத் தருவேன்" என்றார்.


 

Next Story

'தேர்தல் அறிக்கை சர்ச்சை'- வீடியோ வெளியிட்ட இபிஎஸ்

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
'AIADMK election manifesto is a reflection of needs'- EPS released the video

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

NN

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து அதிமுக கொடுத்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே! உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அஇஅதிமுக தேர்தல்அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மை அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் இன்று திருச்சியில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உங்களையெல்லாம் சந்திக்க வருகிறேன். நம் மாநிலத்திற்கு எதிரான சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளையும், மாநில உரிமைப் பறிப்புகளையும், போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம்' என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Next Story

அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம்; தேர்தல் ஆணையத்தை நாடிய வழக்கறிஞர்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
A.D.M.K. internal party matter A lawyer approached the Election Commission

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.