Skip to main content

அரை மணி நேரத்தில் 'அக்கா தம்பி' ஆன மேஜிக் நடந்தது எப்படி? - நாராயணன் திருப்பதி பதில்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

கடந்த சில நாட்களாக சூர்யா, டெய்சி இடையே நடைபெற்ற அனைத்து பஞ்சாயத்துக்களும் தற்போது சுமுகமாக முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? 

 

பஞ்சாயத்து எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவருக்குள்ளும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தது. அதைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து நடவடிக்கை எடுத்தது. இருவரும் பிரச்சனைகளை மறந்து கட்சி பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர். இருந்தாலும் குற்றச்சாட்டு அடிப்படையில் சில நடவடிக்கைகளை கட்சி எடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அவ்வளவுதான் நடைபெற்றது. 

 

அனைத்துக் கட்சிகளிலும் உட்கட்சிகளில் சில பிரச்சனைகள் தனி நபர்களுக்கு இடையே இருக்கத்தான் செய்யும். நீ வா உன்னை வெட்டி வீசுகிறேன் போன்ற இத்தகைய தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் அளவுக்குப் போனதும், அதை அவர்களால் தாங்க முடியாமல் சென்ற காரணத்தால் தான் இதை வெளியிடும் அளவுக்குச் சென்றுள்ளார்கள்?

 

அந்த வார்த்தைகள் சரியா தவறா என்ற விவாதத்துக்குள்ளே போக வேண்டாம். ஏனென்றால் அது தவறுதான். ஆனால் அவர்களுக்கு இடையே நடைபெற்ற வார்த்தைகள் என்று தனிப்பட்ட உரையாடல். இவர்கள் இருவருமே பொதுவெளியில் எதையும் பேசவில்லை; யாரிடமும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியின் இமேஜை பாதிக்கும் என்று கருதியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுவும் கூட அவர்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை இருந்ததன் காரணமாக இந்த சர்ச்சைகள் எழுந்துள்ளது. 

 

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை விமர்சித்துள்ளார் சூர்யா. இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீங்களும் தெரிவித்துள்ளீர்கள். ஆனால் இருவரையும் கூப்பிட்டுப் பேசிய சில நிமிடங்களிலேயே அக்கா-தம்பி மேஜிக் எப்படி நடந்து என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறதே?

 

இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் பதில் சொல்ல முடியாது. அவங்க இருவரும் உடன்பாட்டுக்கு வந்து புரிந்துகொண்டார்கள் என்றால் அதை நாம் என்ன கேட்க முடியும். இது அவர்களின் விருப்பமாகத்தான் பார்க்க வேண்டும். சண்டை போட்டவர்கள் சண்டை போட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. அவர்கள் நடந்ததை மறந்து ஒன்று சேர்ந்து பணியாற்றலாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆகையால் தவற்றை விசாரிக்கலாம். அவர்கள் இணைவதை நாம் தடுக்க இயலாது. 

 

இருந்தாலும் அவர் பேசியதை அனுமதிக்க முடியாது என்று கூறி அவர் வகித்து வந்த பதவியிலிருந்து ஆறு மாதம் நீக்கி இடைநீக்கம் செய்துள்ளார்கள். அவர் பேசியதைக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியிலும் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தால் மட்டுமே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் கட்சியில் மிகச் சிறப்பான நடவடிக்கையைக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அண்ணாமலை எடுத்துள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

 


 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.