Skip to main content

ஹோலி பண்டிகையில் பாலியல் சீண்டல்கள்; எழுந்த கண்டனங்களும் வெளியான ஆதாரங்களும்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

holi celebration controversy

 

வட மாநிலங்களில் பனிக் காலம் முடிந்து அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது வட மாநில இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

வட மாநிலங்களில் இந்த வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்க ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பௌடர்களை பூசிக் கொண்டாடுவர். வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்தாலும், ஹோலி பண்டிகைக்கு அவரவர் ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவார்கள். முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். வடமாநில அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த கொண்டாட்டத்தில் அடங்குவார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஹோலி பண்டிகையின் போது கலர் பவுடர் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்று பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களும் நடைபெற்று வருகிறது.

 

சமீப காலமாக நிறுவனங்கள் சில சமூக அக்கறை கொண்ட விளம்பரங்களைக் கொண்டு தங்கள் பொருட்களையோ, சேவையையோ விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருட ஹோலி பண்டிகைக்கு பாரத் மேட்ரிமோனி ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், ஹோலி கொண்டாட்டம் எனும் பெயரில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை காட்சிப்படுத்தி ‘சில வண்ணங்கள் அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது’ என்றும் இதனால் பெண்கள் ஹோலியை கொண்டாடுவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதேசமயம், இந்த ஆண்டு அப்படியில்லாமல் அனைவரும் இணைந்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், அந்த இணையத்தை புறக்கணிக்கவும் சமூக வலைத்தளங்களில் அடிப்படைவாதிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த பெரும் கலவரத்திற்கு நடுவில் கடந்த 8ம் தேதி ஹோலி பண்டிகையும் கொண்டாடி முடிக்கப்பட்டது. ஹோலி பண்டிகை கொண்டாடி முடிக்கப்பட்டாலும், அந்த திருமண இணையதளத்தை புறக்கணிக்க முன்னெடுக்கப்பட்ட அதே ஹேஷ்டேக்-கில் மேலும் சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்கள் 2023ம் ஆண்டு நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுத்ததா என்று தெளிவான தரவுகள் இல்லை என்றாலும், நிச்சயம் அது ஹோலி கொண்டாட்டத்தில் எடுத்தவை என்பதை மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

 

holi celebration controversy

 

அந்த வைரல் வீடியோக்களில் ஒன்றில், டெல்லியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் உடலை பலரும் கலர் பவுடர் பூசுவது போல் தவறாகத் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் இளைஞர்கள் கூடி நின்று அந்த பெண்னின் தலை எதையோ கொண்டு அடித்து விளையாடுகின்றனர். அந்த பெண் தன்னை தற்காத்து கொள்ள முயன்றாலும் தொடர்ந்து அந்த இளைஞர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர். 

 

holi celebration controversy

 

இதேபோன்று மற்றொரு வீடியோவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் சாலையில் நடந்து செல்லும்போது ஹோலி பண்டிகை கொண்டாடிய ஆண்கள் அந்த வெளிநாட்டு பெண்ணின் உடலை அனுமதியின்றி தொட்டு கலர் பவுடர் பூசுகின்றனர். மேலும், அந்த பெண்ணிற்கு கலர் பவுடர் பூசி, கட்டிப் பிடித்து கட்டிப் பிடித்து ஒவ்வொரு இளைஞராக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண் நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

 

அதே வரிசையில் இஸ்லாமிய பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது அவர் மீது சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் சிலர் வண்ணப்பொடி பாக்கெட்டை வீசியெறியும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இதே போன்று பல வீடியோக்களில் ஹோலி பண்டிகையின் போது பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் விவகாரத்தில் மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

 

 

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.