Skip to main content

வைகோ vs ஸ்டெர்லைட் - 20ஆண்டுகளுக்கு மேலான போராட்டம்!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
sterlite

 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு மீது இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தொழிற்சாலை திறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்க முக்கிய காரணமாக அமைந்தது இருபது வருடங்கள் கழித்து உருவான மக்களின் எழுச்சிதான். கடந்த 2018ஆம் ஆண்டு துத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடத்திய அந்த போராட்டம், அதில் காவு வாங்கப்பட்ட 13 பேர் என்று இந்த ஆலையை மூட மிகப்பெரிய காரணமாக இருந்தது. தொடக்கத்தில் இதுகுறித்து வெறும் போராட்டங்களோடு நிற்காமல் சட்ட போராட்டமாகவும் கொண்டு சென்றவர் மதிமுக தலைவர் வைகோ.

 

முதன் முதலில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட்டின் விளைவை அந்த ஆலையை அடித்து உடைத்த மராத்தியர்களிடம்தான் கேட்கவேண்டும். அப்படி அடித்து விரட்டப்பட்டவர்களுக்குத்தான் 1994ஆம் ஆண்டில் தமிழகத்தில் அப்போதைய அரசு இடமும் கொடுத்தது. இதற்கு பின்னர் ஸ்டெர்லைட் தொழிற்சாலை எந்த தடையும் இன்றி ஆரம்பித்து நடக்க தொடங்கியது. ஒரு சிலர் மட்டும் இதன் விளைவுகள் தெரிந்து இதனை எதிர்த்து போராடத் தொடங்கினர். அதில் ஒருவர் தான் வைகோ.

 

வைகோ தலைமையில் 1996 மார்ச் 5 தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம், 1996 மார்ச் 12 கடையடைப்பு கருப்புக்கொடி போராட்டம், 1996 ஏப்ரல் 1 ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி, 1996 டிசம்பர் 09 தூத்துக்குடியில் உண்ணாவிரத போராட்டம், 1997 பிப்ரவரி 24 மாவட்ட ஆட்சித் துணைத்தலைவர் அலுவலகம் முற்றுகை, மறியல், ஆயிரக்கணக்கானோர் கைது, ஜூன்2, 3, 4 தேதிகளில் திருவைகுண்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சார நடைப்பயணம், 1997 ஆகஸ்ட் 30 ஆம் தேதி பத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்ற ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம், கைது என, தொடர் போராட்டங்கள் நடந்தது. 

 

vaiko

 

 

இதைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, வைகோவே வாதாடினார். பின் பல அமர்வுகளுக்கு பின்னர் 2010ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் இதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. வழக்கில் வைகோ வெற்றிபெற்றார் என்றாலும் இதை சுலபமாக கையாண்டது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை. உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நீரி (NEERI - தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம்) அமைப்பு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் அந்த ஆய்வில் வைகோவும் உடனிருக்கலாம் என்றும் கூறியது. வைகோவும் கலந்து கொண்ட அந்த ஆய்வு 2011 ஏப்ரல் 6, 7 ஆம் தேதி நடந்தது. அனைத்தும் தூத்துக்குடி மக்களுக்கு சார்பாக இருந்த போதிலும், தொழிற்சாலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டது தெரிந்தும், தமிழக சுகாதாரத்துறை பரிசோதித்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இதை மூடிய போதும் உச்சநீதி மன்றம் இதற்கான தடை உத்தரவை உடைத்து ஸ்டெர்லைட்டுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதற்கு அவர்கள் சொல்லிய பதில்,  'இவர்களால்தான் இந்தியாவுக்கு தாமிர உலோகம் கிடைத்து கொண்டிருக்கிறது. அது இந்திய பொருளாதாரத்துக்கு தேவைப்படுவது' என்பது. இப்படி சொல்லிவிட்டு, ஆலையின் சுற்றுப்புற சூழல் விதிமீறலுக்கு  நூறு கோடி அபராதத்தை முன்பணமாக கட்டச் சொல்லி முடித்துவைத்தது. 

 

யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத்திடமே வைகோ சீராய்வு மனு போட்டார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட,   தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வழக்கு தொடுத்தார். அதைத்தொடர்ந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு. தமிழக அரசும், வைகோவும் தனித்தனியாக உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பு போராடிய மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இது நிரந்தர மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் நீடிக்க வேண்டும்!

 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.