Skip to main content

சிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்...

Published on 16/05/2019 | Edited on 17/05/2019

கியூபாவுக்கு ஆதரவான லத்தீன் அமெரிக்க மாநாடு முடிவடைந்தவுடன், கவுதமாலாவில் மற்றுமொரு ராணுவ புரட்சி நடந்திருப்பதாக செய்தி வெளியானது. முதல் பார்வையில், இந்த இரண்டு நிகழ்வுகளும் தொடர்பு இல்லை என்பதுபோல தோன்றும். ஆனால், உன்னிப்பாக கவனித்தால், இரண்டுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு இருப்பது தெரியும்.

 

fidel castro



நிட்டெராயில் நடைபெற்ற மாநாட்டில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. “கியூபாவின் விவகாரங்களில் எந்த ஒரு தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்பதே அந்தப் பிரகடனத்தின் சாரம்.

ஆனால், எங்கள் விழிப்புணர்வுபெற்ற கண்டத்தின் உணர்வுகளை சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்க அரசியல்வாதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

அவர்கள், கியூபாவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய ஆதரவு மாநாட்டை அவமதிக்கும் அளவுக்கு சென்றார்கள். மாநாட்டுக்கு வருவோருக்கு விசா வழங்க மறுத்தார்கள். ஆனால், அவர்கள் நடவடிக்கை தோற்றது. நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தனர். எனவே அவர்கள் கடைசியாக கார்லோஸ் லாசர்டாவின் நாசகர குணத்தை தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முயற்சித்தார்கள்.

பிரேசில் நாட்டு மக்களால் இவரைவிட மிகவும் அதிகமாக வெறுக்கப்பட்ட ஒரு நபரைக் குறிப்பிடுவது கடினம். அந்த நாட்டில் பிச்சையெடுப்பதை முடிவுக்குக் கொண்டு வர ஒரு குரூரமான வழியைக் கண்டுபிடித்தவர் லாசர்டா. அவரது போலீஸ்காரர்கள், பிச்சைக்காரர்களைப் பிடித்து, கைகளையும் கால்களையும் நீளமான வயரால் இறுகக் கட்டினார்கள். பிறகு அவர்களுடைய கழுத்துகளில் கல்லைக்  கட்டினார்கள். அதன்பின்னர் அவர்களை பாலத்திலிருந்து நதியில் தூக்கி வீசினார்கள்.

ஊதிப் பெருத்த அவர்களுடைய உடல்கள் சிதறி நீரில் மிதந்தன. நதிக்கரையில் ஒதுங்கிய ஏழைகளின் சிதறிய உடல்கள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பை தூக்கிப்பிடித்து கொடியவனுக்கு எதிராக சாட்சியாய் மிதந்தன. லாசர்டாவின் மனிதத் தன்மையற்ற கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட்டது. அவரது அரசியல் வாழ்வு அஸ்தமித்துக் கொண்டிருந்தது. பிச்சைக்காரர்களைக் குரூரமாக கொலை செய்த கொடுங்கோலன்தான் கியூபா ஆதரவு மாநாட்டை சீர்குலைக்க முயற்சித்தான். ஆனால், அவனது முயற்சிகள் மாநாட்டின் வீரியத்தை அதிகரிக்கவே உதவியது. லாசர்டா போன்ற கிரிமினல்களால் யாரெல்லாம் ஆதரிக்கப்படுகிறார்,  உண்மையின் பக்கம் யாரெல்லாம் நிற்கிறார் என்பதை மக்களுக்கு இந்த மாநாடு ஒரு முறை வெளிச்சமிட்டுக் காட்டியது.

ராஜதந்திரத்தைப் பற்றி, எனக்கு முற்றிலும் ஏதும் தெரியாது, ஆனால், நடுநிலையான பார்வையாளர் ஒருவரின் பார்வையில்கூட, லத்தீன் அமெரிக்கா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை ஒன்றன் பின் ஒன்றாக தோற்கடிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் அந்தக் கொள்கை ஒரு பனிப் பந்தைப் போல, மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி படுவேகமாக உருண்டு கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் பனிக்கட்டி சுக்லாகச் சிதறும். ஆனால், இப்போதைய சூழலில், எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வளர்ச்சிக்கான கூட்டணி என்பது அமெரிக்காவின் மூளையில் கருவாகி உருவான குழந்தை. பார்ப்பதற்கு இளமையானதாக தோன்றும். ஆனால், அருகில் சென்றால் அது ஒரு பிணம் என்பது தெரியும். அதன் செயல்பாட்டைப் பற்றி பேசுகிற சுதந்திரமான பார்வையாளர்கள், “அது ஒரு அப்பட்டமான தோல்வி” என்கிறார்கள். வலதுசாரி சக்திகள் கூட, “அது முழுத் தோல்வி” என்று ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த கூட்டணியின் செயல்பாடுகள் முற்றிலும் நகைச்சுவைக் காட்சிகள் நிரம்பியவை. அவற்றில் ஒன்றைப்பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். சமீபத்தில், அமெரிக்கா தனது பணபலத்தை செலவழித்து, சிலி பல்கலைக் கழகத்தில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தியது. வளர்ச்சிக்கான கூட்டணியின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார திட்டங்கள் தொடர்பான கோடைக்கால வகுப்பு அது. அமெரிக்கா, தனது அனைத்து கலாச்சார நிபுணர்களும் இந்தப் பாடம் குறித்து விரிவுரை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பியது. பயிற்சி ஏற்பாட்டாளர்கள், முனோஸ் மரீனை அழைக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். அதன் பிறகு, வேறுவழியின்றி, அமெரிக்காவில் உயர் அதிகாரியான டாக்டர் ஜுவான் மரீனை அழைத்து, அவரையே இந்தக் கூட்டத்தின் தலைவராக்கினார்கள்.

தொடக்கத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றது. ஆனால், இங்கு பாடம் நடத்தியவர்கள், நான்காம் தரத்தினராக இருந்தார்கள். லத்தீன் அமெரிக்க கல்வியாளர்கள்தான், அந்த வகுப்பில் படித்தவர்களின் உண்மையான ஆசிரியர்களாக இருந்தனர். இங்கு பாடம் படிக்க வந்த அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பதால், மிகவிரைவிலேயே, இதில் குழப்பமும், சுணக்கமும் ஏற்பட்டது. கடைசியில், இந்த பயிற்சி, அழுத்தமாக மூடப்பட்ட பாத்திரத்திற்குள் இருக்கும் தண்ணீரை மிகக் கடுமையாக சூடேற்றினால் வெடித்துச் சிதறுவது போல சிதறிவிட்டது!
 

 

María_Maluenda



சிலி நாட்டின் தேசிய நாடகக் கலையைச் சேர்ந்த பிரபல நடிகை, மரியா மலீண்டா, இந்த வகுப்பில் படித்த மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இநத் வெடிப்பு ஏற்பட்டது. அவர், கலைஞர்களின் வறுமை பற்றியும், கஷ்டமான வாழ்க்கை பற்றியும் பேசினார். நமது கலாச்சாரத்தில் அமெரிக்க தொழிலாளர்களின் தலையீடு பற்றி பேசினார்; இதன் விளைவாக, தேசிய உணர்வு எப்படி மழுங்கடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது உள்ளூர் பிற்போக்குவாதிகளால் ஏவப்படும் அரசியல் பாகுபாடுகளை பற்றியும் பேசினார். நமது தேசிய மற்றும் இனம் சார்ந்த நாடகக்கலை மீதான நம்பிக்கையை உருவாக்கிய அவர், புரட்சிகர சினிமாவில் நாடகத்தாலும், சினிமாவாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றத்தை சுட்டிக் காட்டினார்.

அவரது பேச்சு, ஒரு மின்சார அதிர்வை ஏற்படுத்தியது. அந்தப் பெண்மணியை மாணவர் கூட்டம் சூழ்ந்து கொண்டது! கியூபாப் புரட்சி தொடர்பாக நான் எழுதியிருந்த கவிதையை அவர் பாடவேண்டும் என்று விரும்பினார்கள். மேடையில் இருந்து அவர் கீழிறங்க மிக நீண்ட நேரம் ஆனது.

ஆனால் இது நீடிக்கவில்லை. பயிற்சியின் தலைவர், கடைசிக் கட்டத்தை முன்னேற்றத்திற்கான கூட்டணி மற்றும் அமெரிக்க நிதி உதவி ஆகியவற்றின் பெருமிதங்களைப் பற்றிய கூட்டமாக மாற்ற திட்டமிட்டார். இதற்காக, மிகவும் விசுவாசமான பேராசிரியர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், முதலில் பேசியவர்களில் ஒருவர், லத்தீன் அமெரிக்க நாவலைப்பற்றி மிகவும் மனம் லயித்துப் பேசினார். அதில் கூறப்பட்டிருப்பதுதான் எங்கும் பிரதானக் கருத்தாக உள்ளது என்றார். மெக்ஸிகோவில் இருந்து, நிகரகுவாவில் இருந்து தெற்கு படகோனியா வரை, மாபெரும் ஜன சமுத்திரமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், பிற்போக்குவாதிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது என்று முழங்கினார். அந்தப் பேராசிரியர், இதே கருத்தை வேறு வார்த்தைகளால் கூறும் லத்தின் அமெரிக்க கவிதையாப் பற்றிப் பேசினார். கடைசியாக வந்த பேச்சாளர், ஒரு பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறிய அவர், அதை, டாலர் சங்கிலியிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

பயிற்சியின் இயக்குநர், ஜுவான் மரீன் எழுந்து, தனது வட அமெரிக்க நண்பர்கள் கூறிய பிரதான  வாக்கியங்களை தொகுத்துக்கூற முயன்றார். அமெரிக்காவில் படிக்க விரும்பும் லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்கு மிகப்பெரிய நிதி உதவிகள் செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை விரும்புவதாக அவர் ஆசைகாட்டினார். இதுதொடர்பான அறிக்கையை  அப்படியே ஒப்புவித்தார். “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, எனக்கு அனுப்ப வேண்டியதுதான்” என்று அவர் கூறினார்.
 

 

trujillo
ட்ருஜிலோ


மாணவர்களை விலைக்கு வாங்கும் இந்த குரூர முயற்சிக்கு, மாணவர்களின் கல்போன்ற இறுக்கமான மவுனத்தையே அவர் எதிர் கொண்டார். எவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மரண அமைதியான சூழலின் பின்னணியில், அவர்கள் எழுந்து வெளியேறினார்கள். இது ஒரு பெரிய தண்டனையைவிடக் கடுமையானது.

இதற்கு சில தினங்களுக்குப் பின்னர், டாக்டர் மரீன் இறந்து போனார். மாணவர்களின் மவுனம் ஏற்படுத்திய அதிர்ச்சி, அவரை கடுமையாக பாதித்தது. அமெரிக்கா தனது விசுவாசமிக்க சேவகர்களில் ஒருவரை இழந்துவிட்டது.

இதே வழிமுறைகளில்தான், வட அமெரிக்கர்கள், கலாச்சாரத்தின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் நிலைகளை இழந்தனர். அதனால்தான் அவர்கள் அடிக்கடி வன்முறையை ஏவுகிறார்கள், ராணுவக் கலகங்களை அரங்கேற்றுகிறார்கள்; கியூபாப் புரட்சி மீதான லத்தீன் அமெரிக்க மக்களின் அன்பையும், சமூகமாற்றம் காண்பதற்கான அவர்களது ஆர்வத்தையும் வேரோடு கிள்ளி எறிய பலப்பிரயோகம் செய்கிறார்கள்.

இது ஒரு ஆபத்தான விளையாட்டு. இன்றைக்கு அர்ஜெண்டினாவில் நிலவும் அப்பட்டமான நிலையைப் பாருங்கள். மாண்டிவிடியோவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தும்கூட, கியூபாவுடனான ரகசிய உறவுகளைத் துண்டித்துக் கொள்ள அந்த அரசு மறுத்தத்தால், அர்ஜெண்டினாவின் அரசியல் அமைப்புச் சட்டம் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி அர்ட்டுரோ ஃபுரோன்டிஸி, டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாடுமுழுதும் கலகமும், கலவரங்களும் பரவியுள்ளன. அர்ஜெண்டினாவில் நிலவும் குழப்பத்தை விளக்குவது இயலாத காரியம். பெரு நாட்டின் நிலமை இன்னும் மோசமாக இருக்கிறது.

 

Pérez-Jiménez
பெரேஸ் ஜிமெனெஸ்



அமெரிக்காவின் ஒரே விருப்பம் என்ன தெரியுமா? லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் கொடுங்கோல் ஆட்சி செய்கிற ஒருவரை, ராணுவ சர்வாதிகாரியை மீண்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற பழைய உளுத்துப் போன யோசனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அமெரிககா உறுதியாக இருக்கிறது. ட்ரூஜில்லோ, பாடிஸ்டா, பெரேஸ் ஜிமெனெஸ் போன்ற அயோக்கியர்கள்,  முழங்கால் அளவிற்கு டாலர் குவியலில் நின்றுகொண்டு, ரத்தக்கறை படிந்த தனது கைகளில் அதிகாரத்தை குவித்து வைத்திருந்தார்கள். அதேசமயம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வாழைத் தோட்டங்களையும், எண்ணெய் வயல்களையும் ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் ஒப்படைத்திருந்தார்கள். அவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளை லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்.

ஆனால், இத்தகைய கொடுங்கோலர்களின் காலம் முடிந்துவிட்டது. லத்தீன் அமெரிக்க பூமி, அத்தகைய கொடுங்கோலர்களின் பிடியில் இருந்து நகர்ந்து விட்டது.

இன்றும் கூட, அமெரிக்காவின் கொள்கையை அமுல்படுத்துகிற பெரும்பான்மையான லத்தீன் அமெரிக்க அரசுகள், கியூபா மீதான தடையை அமல்படுத்தியே வருகிறார்கள். கியூபாவை  தனிமைப்படுத்த வேண்டும் என்பதைத் தீவிரமாக ஆதரிப்பவராக வெனிசூலாவின் ஜனாதிபதி பெதான்கோர்ட் இருக்கிறார். புகையும், லாவா குழம்பும் கக்கிக் கொண்டிருக்கிற எரிமலையைப் போல தகித்துக் கொண்டிருக்கிற நாடு வெனிசூலா. அந்த நாட்டின் அதிபர் கியூபாவுக்கு எதிராக இருக்கிறார். 

ஜனாதிபதி கென்னடி பங்கேற்ற கடைசி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கியூபாவுக்குள் நுழைந்து திரும்புவது ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது? அதை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்பதே அந்தக் கேள்வி. உண்மையில் தனக்கு ஆதரவான இருபது நாடுகளால் கியூபாவை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. அதாவது கியூபாவை அதன் 20 சகோதர நாடுகளைக் கொண்டே அபகரிக்க முயற்சிக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் வசிக்கும் 20 கோடி லத்தீன் அமெரிக்கர்கள் எமது கியூபா சகோதரர்களை சந்தித்து, எமது தாய்மொழியான ஸ்பானிய மொழியில் பேசி உரையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம்.

 

batista
பாடிஸ்டா



வட அமெரிக்க அரசியல்வாதிகள், எங்களது நாடுகளை, தங்களது நுகத்தடியில் கட்டி, லத்தின் அமெரிக்கா மீது காலம் தோறும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க பிரச்சாரப் பீரங்கிகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று மக்களை திசைதிருப்புவதற்கான பிரச்சாரத்தைச் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொள்கையை அமெரிக்கா உருவாக்கித் தருகிறது.

யுபிஐ அல்லது ஏபி போன்ற செய்தி நிறுவனங்கள், உதாரணத்திற்கு சிலியைப் பற்றி குறிப்பிடும் போது, திட்டமிட்டே இந்த வரிகளைச் சேர்க்கின்றன. “கியூபாவுடனான உறவுகளை இன்னும் முறித்துக் கொள்ளாத நாடான சிலி” என்று. ஆனால், வாஷிங்டனின் உத்தரவுகள், எப்போதுமே எழுத்தில் தாங்கி வருவதில்லை உதாரணத்திற்கு, கியூபா ஆதரவு மாநாட்டை சீர்குலைக்கும் திட்டத்தில் அமெரிக்க ராஜதந்திரிகள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற தகவல், இவர்கள் வெளியிட முடியாத கடுமையான செய்தி.

இந்த மாநாட்டில், ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. “கியூபா மீதான தடைகளுக்கு முடிவு கட்டுவோம். லத்தீன் அமெரிக்காவுக்கான செயல்திட்டத்தை உருவாக்கிய கியூபா மக்களுடன் நமது ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம் என்று அந்த பிரகடனம் அழைப்பு விடுத்தது. நமது லத்தீன் அமெரிக்க நாடுகள், சகோதர நாடான கியூபாவுக்கு எதிரான ஏகாதிபத்திய அச்சுறுத்தலை முறியடிக்க. விழிப்புடன் இருக்க வேண்டும். என்றும் அது நமது கடமை என்றும் அந்த பிரகடனம் வலியுறுத்தி உள்ளது.

 

(பிராவ்தா, ஏப்ரல் 17,
1963.

 

 

 

முந்தைய பகுதி:


மரக்குதிரை! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14

 

 

 

Next Story

ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் நண்டுகள்... அதிரவைக்கும் புகைப்படங்கள்

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

Thousands of invading crabs ... shocking photos

 

கியூபா நாட்டில் ஆயிரக்கணக்கான நண்டுகள் கடற்கரையை நோக்கிச் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

கருப்பு, மஞ்சள், சிவப்பு நிற நண்டுகள் கியூபா நாட்டு கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரோனா காரணமாகக் கடற்கரையை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனப்போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், நண்டுகள் கடற்கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நண்டுகள் சாலையைக் கடப்பது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு அந்த இயல்பை மீறி அதிக அளவில் நண்டுகள் குவிந்து வருகிறது. எதிர்பாராது வரும் வாகனங்களின் சக்கரங்களில் சிக்கும் நண்டுகள் உயிரிழக்கவும் செய்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

ட்ரம்ப்பின் கடைசி நேர அரசியல்... வலுக்கும் கண்டனங்கள்...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

america implement new sanctions on cuba

 

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கியூபா, தற்போது மீண்டும் அந்த பட்டியலில் நீட்டிக்கப்பட்டு, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

 

கடந்த 1959 ஆம் ஆண்டு கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே மோசமான உறவே நீடித்துவந்தது. இதனால் கியூபாவை பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு என அறிவித்து, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. பல தசாப்தங்களாக இந்த உறவில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த சூழலில், ஒபாமாவின் ஆட்சியில், பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா நீக்கப்பட்டது. கியூபா மீதான பொருளாதாரத் தடைகளும் குறைந்தன. 

 

இதனையடுத்து, அதிபராக ட்ரம்ப் வந்தபின் மீண்டும் கியூபாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தார். கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். அதிபர் ட்ரம்ப்பின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, கியூபா மீதான பயங்கரவாத நாடு எனும் அறிவிப்பு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒபாமா ஆட்சிக்காலத்தில், கியூபா உடனான அமெரிக்காவின் உறவு மேம்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பைடன் விரைவில் அதிபராகப் பதவியேற்க உள்ள சூழலில், ட்ரம்ப் அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் கார்லோஸ் பெர்னான்டஸ் டி காசோ, "கியூபா பயங்கரவாதத்தைப் பரப்பும் நாடு அல்ல என்பதை அமெரிக்க அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனும் அவரின் அரசாங்கமும் உறுதியாக நம்பும். இந்த நம்பிக்கையுடன், ஜனவரி 20-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ட்ரம்ப் அரசு கடைசி நேரத்தில் கூட ஆதாயம் தேடும் நினைப்பில் கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்தது கண்டனத்துக்குரியது. இது முழுமையான சந்தர்ப்பவாதம். 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளச் செய்யும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.