Skip to main content

"ரவுடியை பிடிச்சிருக்கீங்க பார்த்து இருங்கன்னு சொல்றாங்க... ஆனா நம்ம வேலையே அதுதானே"!! - தில் போலீஸின் தூள் பேட்டி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

hjk


சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒரு காட்சி தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது. காவலர் ஒருவர் வேகமாக ஓடிவந்து சாலை வளைவில் விழுந்துவிடுவார், இருந்தும் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு ஒருவரைத் துரத்திக்கொண்டு ஓடுவார். திருவண்ணாமலையில் திருடப்பட்ட காரை பட்டுக்கோட்டையில் துரத்திப்பிடித்த அந்தக் காவலர் பெயர்தான் பிரசாத். தமிழ்நாடே கொண்டாடிய அவரின் துணிச்சலைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. அவரிடம் இதுதொடர்பாக நாம் பேசினோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,


நீங்கள் செய்த செயலுக்காக தமிழ்நாடே உங்களைக் கொண்டாடுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. காவல்துறையில் சேர்ந்ததற்கான நோக்கம் நிறைவேறியிருக்கிறது. எல்லாரும் பாராட்டுவதைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. டிஜிபி சார் மூன்றுமுறை ஃபோன் செய்து பாராட்டினார். சந்தோஷமாக இருக்கு. 

 

எப்படி அந்த திருடப்பட்ட காரை அடையாளம் கண்டுபிடித்தீர்கள், குறுகிய காலத்துக்குள் வண்டி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்தது எப்படி? அன்றைக்கு என்ன நடந்தது? 

 

காவல் கண்காணிப்பாளர் மேடம் அவர்கள் இந்த மாதிரி திருடு போன சம்பவம் பற்றி கூறுகிறார்கள், TN 07 CL 8454  எண் கொண்ட கார் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டுள்ளது. நமது மாவட்டத்திற்குள் வந்தால் அதை தடுத்து நிறுத்திப் பிடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பிறகு டிஎஸ்பி சாரும் அனைத்து சப் ஸ்டேஷன்களுக்கும் இதைப் பற்றி தெரிவித்தார். நாங்களும் அலுவலகத்தில் இதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என்னை ஒரு வேலையாக வெளியே அனுப்பினார்கள். அந்த நேரத்தில் இந்தக் கார் என்னுடைய கண்ணில் பட்டது. வண்டி எண்ணைப் பார்த்ததும் இது திருடப்பட்ட கார் என்பதை உறுதி செய்துகொண்டேன். நான் அந்தக் காரை நிறுத்த முயன்றபோது அவர்கள் மீறி சென்றார்கள். உடனே காரை வேறு பக்கம் திருப்பி ஓட்ட முற்பட்டார்கள். உடனே நானும் அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினேன். அப்போதே டிஎஸ்பி சாருக்கு தகவல் தெரிவித்துக்கொண்டே செல்லும்போது சாலை வளைவில் விழுந்துவிடுகிறேன். பிறகு எழுந்து ஓடி காரை பிடித்துவிட்டேன்.

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை டிஜிபி பாராட்டியுள்ளார், எஸ்பி, ஐஜி என அனைவரும் பாராட்டியுள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

விவரிக்க வார்த்தைகளே இல்லை சார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடனே டிஜிபி சார் என்னை ஃபோனில் கூப்பிட்டு பாராட்டி, 25 ஆயிரம் பரிசு வழங்கியிருக்கிறேன் என்றார். அதைப் போல எங்க மேடம் (தஞ்சை காவல் கண்காணிப்பாளர்) கூப்பிட்டு பாராட்டி பரிசு வழங்கினார்கள். எங்கள் டிஎஸ்பி சாரும் பாராட்டினார். என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பாராட்டினார்கள். 

 

இந்த சம்பவத்தைப் பத்தி உங்கள் ஊரில் என்ன சொல்கிறார்கள்?

 

நிறைய பேரு ஃபோன் போட்டு பேசுவாங்க. நேர்லையும் சொல்வாங்க, ரவுடிய பிடிச்சிருக்கீங்க, பார்த்து இருங்கன்னு. அம்மா கூட, ஊருக்குள்ள பேசிக்கிறாங்க, பார்த்து இரு சொன்னாங்க. நம்ம வேலையே ரவுடிகளைப் பிடிப்பதுதானே, அதற்காகத்தானே பணியாற்றுகிறோம். 

 

வீரதீர செயலுக்கான விருதுக்கு உங்கள் பெயரை காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

ரொம்ப பெருமையாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மிக உயரிய வருது. கிடைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கும். 

 

 

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.