Skip to main content

“லட்சக்கணக்கான உயிர்கள் இறந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான்” - திமுக வேட்பாளர் பிரகாஷ்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Erode Dmk candidate prakash interview at nakkheeran for loksabha election

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...

ஈரோடு மக்களுக்கு மக்களவைத் தொகுதியில் பிரதானமாக விவசாய தொழிலும், ஜவுளி தொழிலும் இருக்கிறது. பத்தாண்டு காலமாக இந்த தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து இருப்பதன் மூலம் விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சனை இருக்கிறது அதற்கு தீர்வு என்ன?

“கடந்த 1989ஆம் வருடம் இதே ஈரோடு மண்ணில் தான், கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். அதை அறிவிக்காமல் இருந்திருந்தால் இங்கு ஒரு துளி விவசாயம் கூட இருந்திருக்காது. 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே விவசாயிகளை காக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு கலைஞர் அந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல், இன்றைக்கு விவசாயிகள் நலிவடைந்து வருகிற இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட்டை அறிவித்துள்ளது. அந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதனால், விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாகத்தான் இந்த அரசு எப்போதும் இருக்கும். அதேபோல் நெசவாளர்களுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறார்கள்”.

விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதே தி.மு.க ஆட்சியில் தான் என்று பாஜகவினர் சொல்கிறார்களே?

“மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது. பாஜக குற்றச்சாட்டு வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் முழுக்க முழுக்க பொய்யே பேசி வருகிறார்கள் விசைத்தறி முதலாளிகள், தொழிலாளர்கள் இதை சொல்கிறார்களா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள், அனைத்தையும் பொய்யாக தான் சொல்லி வருகிறார்கள்”.

இங்கு மஞ்சள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்றும் அதற்கு ஏற்றுமதி அதற்கான கிடங்கு, மற்றும் அதற்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வருகிறதே?

“பத்தாண்டு கால ஆட்சியில் இவர்களெல்லாம் அதை செய்யாமல் விட்டு விட்டார்கள். இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மஞ்சள் உட்பட அனைத்து விவசாய பொருட்களுக்கும் ஆதார விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம். எங்கள் ஆட்சி அமைந்தவுடன் பவானிசாகர் பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் கொண்டு வரப் போகிறோம். விவசாயி முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்றால், எதையும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால், கலைஞர் எப்படி விவசாயிகளை கட்டிக் காப்பாற்றினாரோ, மு.க. ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று தனி பட்ஜெட் போட்டு விவசாயங்களை காத்து வருகிறார்”.

உங்களுக்கு முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அது எந்த வகையில் பலமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?

“அவர்களுடைய சாதனை தான் என்னுடைய பலமாக அமையும் என்று நம்புகிறேன். அவர்களுடைய சாதனைகளை நாங்கள் சொல்வதைவிட, இதுவரைக்கும் செய்த சாதனைகளையும், இனி செய்யப்போகிற சாதனைகளை அவர்களே சொல்லும் போது அது எனக்கு பலமாக அமைகிறது”.

மக்களிடத்தில் தி.மு.க.வின் எந்த திட்டம் அதிகமாக பேசப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?

“ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம், மகளிர் மத்தியில் முக்கிய திட்டமாக இருக்கிறது. அதேபோல், பெண்களுக்கான கட்டணம் இல்லாத பேருந்து திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் மிச்சமாக இருக்கிறது என்று அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேபோல் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம். இதை எல்லாம் பொதுமக்கள் மிகவும் விரும்புகிறார்கள்”.

ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்ற வாக்குறுதியை கொடுத்து செய்யாமல் இருந்தார்கள். நான் தான் 27 மாதமாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி, போராட்டம் செய்து பொது வெளியில் பேசினேன். அதன் பிறகு தான், வேறு வழி இல்லாமல் இவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே?

“அவர்கள் ஆட்சியை விட்டு விலகும் போது தமிழ்நாட்டினுடைய நிதிச் சுமை 7 லட்சம் கோடியாக இருந்தது. அதற்குண்டான வட்டி தொகையை கட்ட முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு எட்டு மாதம் கொரோனா காலம். கொரோனாவில் தமிழ்நாட்டையே முடக்கியது இந்த எடப்பாடி பழனிச்சாமி தான். லட்சக்கணக்கான உயிர்கள் இறந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்த பாவங்கள் எல்லாம் அவரை சும்மா விடாது. முன்பாக அதை தடுத்து இருக்கலாமே? பிரதமர் மோடியிடம் சொல்லி விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய போக்குவரத்துகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்படி நிறுத்தியிருந்தால் இந்தியாவிற்கு கொரோனாவே வந்திருக்காது. அந்த காலத்தில் அத்தனை நிதி சுமை இருந்த போதிலும் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மக்களுக்கு நிதி கொடுத்தார். அதேபோல் இன்றைக்கு 8 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை இழுத்து அதன் மூலமாக வரும் வருமானத்தை எடுத்து இன்றைக்கு இந்த திட்டங்கள் செயல்படுகிறது”  கூறினார்.

பேட்டி தொடரும்...

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.