Skip to main content

3,750 கி.மீ. கட்டுப்படாத ராகுல் கால்கள்! 543ஐ கைப்பற்றுமா காங்கிரஸ்!

Published on 30/01/2023 | Edited on 15/11/2023

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை பயணம்' ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து நிறைவடைந்துள்ள இந்த பெரும்பயணம் இந்திய அரசியலின் புதிய தொடக்கப்புள்ளியாக அமையுமா?
 

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்திய ஒற்றுமை பயணம் அறிவிப்பு:

மார்ச் 2022ல் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபைத் தவிர்த்து 4 மாநிலங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. இந்த ஐந்து மாநில தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ், 2022ம் ஆண்டு மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் உதய்பூரில் நடந்த ‘சிந்தனை அமர்வு’ என்ற மாநாட்டின் வாயிலாக ‘நாங்கள் வீழ்ந்திருக்கிறோம். ஆனால், எழுந்து வருவோம்’ எனச் சூளுரைத்தது. ராகுல் காந்தியின் தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் (Bharat Jodo Yatra) நடைபெறும் என அப்போதைய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்திய ஒற்றுமை பயணம் நோக்கம்:

"இந்தியாவில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. சாதி, மதம், மொழி, உணவு, உடை ஆகியவற்றின் பெயரால் சமூகம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்கும் பயணம்தான் இந்த நடைப்பயணம்" என்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ்

 

நடைப்பயணத் தொடக்கம் மற்றும் கடந்து வந்த பாதைகள்:

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

2022 செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில், ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியைக் கொடுத்து இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் மிகப்பழமையான கட்சி நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது. நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார். கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த நடைப்பயணம் நிறைவடைந்துள்ளது.

 

நடைப்பயணத்தின்போது நடந்த தேர்தல்கள்:

இந்த நடைப்பயணம் நடந்து கொண்டிருந்த போதுதான் 2022 அக்டோபரில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற்றது. “தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை” என முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தினர் அறிவித்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே - சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான 9,500 வாக்குகளில் 7,897 வாக்குகளுடன் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

2022 டிசம்பரில் குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து முடிந்தன. குஜராத் மாநிலத்தில் வரலாறு காணாத வெற்றியை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், 68 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப்பிரதேசத்தில் 40 இடங்களில் வெற்றி பெற்று, அங்கு பா.ஜ.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த வெற்றி 2024ம் ஆண்டு தேசம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரி பார்வை கொண்டோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது எனப் பேசப்பட்டது. 

 

இந்திய ஒற்றுமை பயணத்தின் மீதான விமர்சனங்கள்:

இந்த நடைப்பயணத்தால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதில் திட்டவட்டமாக இருந்த பா.ஜ.க., அடுத்தடுத்து விமர்சனங்களை வீச ஆரம்பித்தது. ராகுல் காந்தியை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறிய பா.ஜ.க,. அவருடைய ஒவ்வொரு சொல்லுக்கும், ஒவ்வொரு பேட்டிக்கும் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தது. பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோதும், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்தார்.

 

ராகுலுடன் கைகோர்த்த ஆளுமைகள்:

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்த நடைப்பயணத்தில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், RAW உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பெரும் ஆளுமைகள், சாதாரண மக்கள், பல சாதனையாளர்கள், குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பெரும் கூட்டம் ராகுலுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்தது.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

இந்த நடைப்பயணத்தின்போது 13 முறை செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “பாஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் வெறுப்புணர்வைப் பரப்புகிறார்கள்; அவர்களின் அனைத்து கொள்கைகளும் அச்சத்தை விதைப்பதுதான். அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த ஒரு போதும் விடமாட்டோம்” என டெல்லியின் எல்லையில் பேசினார் ராகுல்.

 

நடைப்பயணம் சந்தித்த சிக்கல்கள்:

2022 டிசம்பர் மாதத்தில் மீண்டும் சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்து, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கெடுபிடிகளை அடிதடியாக ஒன்றிய அரசு அறிவித்தது.  இந்திய ஒற்றுமை பயணம் 100 நாட்களைக் கடந்து ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில், "பாரத் ஜோடோ யாத்திரையின் போது முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதிப்பது என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். அப்படி இல்லை என்றால், தேசத்தின் நலன் கருதி யாத்திரையைக் கைவிடுங்கள்" என ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது. "இது தேசநலன் என்பதைக் கடந்து நடைப்பயணத்தை முடக்கும் யோசனை" என  ராகுல் காந்தி விமர்சித்தார். 

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

கடந்த ஜனவரி 27ம் தேதி நடைப்பயணம் காஷ்மீரின் காசிகண்ட் பகுதியில் நுழைந்தபோது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே இருக்க வேண்டிய காஷ்மீர் காவல்துறை திடீரென மாயமானதாகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காஷ்மீர் காவல்துறை தவறிவிட்டதாகவும், காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை அடுக்கியது. “கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், நடைப்பயணத்தைத் தொடர வேண்டாம்” என ராகுல் காந்தியின் பாதுகாப்புக்குழு அறிவுறுத்திய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய ஒற்றுமை பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “இதற்கு நான் சாட்சி. ராகுல் காந்தி நடக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பராமரிப்பிலிருந்த பாதுகாப்பு வளையத்தின் வெளிப்பகுதியிலிருந்த காவல்துறையினர் திடீரென காணாமல் போயினர். நாங்கள் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கு வந்திருந்தோம். மேலும் 11 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொள்வதாக இருந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது ரத்து செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளானது. 

 

இந்திய ஒற்றுமை பயணத்தின் நோக்கம் வெற்றி பெறுமா?

2022ம் ஆண்டு செப். 7ம் தேதி துவங்கி, 2023ம் ஆண்டு ஜன. 30ம் தேதி காந்தியின் நினைவு நாளில் காஷ்மீரில் தனது 3,750 கி.மீ நடைப்பயணத்தை முடித்துள்ளார் ராகுல் காந்தி.

 

End of Rahul Gandhi's Bharat jodo yatra.. 2024 congress plan

 

மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் மே தொடக்கத்தில் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் நடைப்பயணத்தின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணம் உணர்த்திய கள எதார்த்தங்களை காங்கிரஸ் ஆய்வுக்கு உட்படுத்தி, 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அவர்கள் வகுக்கும் வியூகமே இந்தியாவின் எதிர்காலத்தையும் காங்கிரஸின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க இருக்கிறது.

 

- தி.மு. அபுதாகிர்

 

 

 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.