Skip to main content

"பிஸியா இருக்கேன்னு சொன்ன ராம் ஜெத்மலானியை வற்புறுத்தி வரவைத்த வைகோ" - நினைவுகளை பகிரும் துரை வைகோ!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Durai Vaiko

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதாகக் கூறி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி தன்னுடைய சிறப்பு அதிகாரம் மூலம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்கில் முதலில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தண்டனைக் குறைப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கும் வைகோவுக்கும் பெரும் பங்கு உண்டு. பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கிற்குள் ராம்ஜெத்மலானி எப்படி வந்தார் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.   

 

”காலதாமதமான தீர்ப்பாக இருந்தாலும் இதை மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கிறோம். பேரறிவாளன் தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதலையாகியுள்ளார். எங்கள் தலைவர் வைகோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்தப் பிரச்சனையை தலைவர் வைகோ கையாண்டுள்ளார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச்சங்கிலி போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள் எனப் பல வகைகளில் தலைவர் வைகோவின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் இருந்தது.

 

பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டதும் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைவர் வைகோ, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை அணுகி இந்த விவகாரத்தில் நீங்கள் ஆஜராக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் ரொம்பவும் பிஸியாக இருந்ததால் இந்த வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த மூன்று பேர் உயிர் உங்கள் கையில்தான் இருக்கு, நீங்க எனக்காக ஆஜராக வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்ட பிறகே ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜரானார். 

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய சிறப்பான வாதத்திறமையால் மூவரின் தூக்குத்தண்டனையை தற்காலிகமாக ராம்ஜெத்மலானி நிறுத்தினார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக பல அமர்வில் ராம்ஜெத்மலானியுடன் தலைவர் வைகோ கலந்துகொண்டார். இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி மாபெரும் சட்டமேதை. அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். ஆனால், தலைவர் வைகோவிற்காக சென்னை வரை வந்து வாதாடினார். ராம்ஜெத்மலானியின் வாதத்திறமையால் மரண தண்டனை தீர்ப்பை ஆயுள்தண்டனையாகக் குறைத்தார். 

 

அதன் பிறகு, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மூலம் இந்த வழக்கில் ஒரு விடை கிடைத்திருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு”. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

 

 

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் சிலைக்கு துரை வைகோ மரியாதை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் உடன் பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 12ம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதில் துரை வைகோ கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Durai Vaiko honors statue of late industrialist KN Ramajayam

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என். நேரு, பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மற்றும் தி.மு.கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு. பூமிநாதன், மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம், தொண்டர் அணி ஆலோசகர் ஆ. பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் பெல். இராசமாணிக்கம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.