Skip to main content

"பிஸியா இருக்கேன்னு சொன்ன ராம் ஜெத்மலானியை வற்புறுத்தி வரவைத்த வைகோ" - நினைவுகளை பகிரும் துரை வைகோ!

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Durai Vaiko

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதாகக் கூறி சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி தன்னுடைய சிறப்பு அதிகாரம் மூலம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்கில் முதலில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், பின் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்தத் தண்டனைக் குறைப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கும் வைகோவுக்கும் பெரும் பங்கு உண்டு. பேரறிவாளன் விடுதலைக்கு பிறகு மதிமுக தலைமை நிலையச் செயலர் துரை வைகோ நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கிற்குள் ராம்ஜெத்மலானி எப்படி வந்தார் என்பது குறித்து பகிர்ந்துகொண்டார்.   

 

”காலதாமதமான தீர்ப்பாக இருந்தாலும் இதை மகிழ்ச்சியான செய்தியாகவே பார்க்கிறோம். பேரறிவாளன் தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, 31 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விடுதலையாகியுள்ளார். எங்கள் தலைவர் வைகோ மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். ஓராண்டு, ஈராண்டுகள் அல்ல, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இந்தப் பிரச்சனையை தலைவர் வைகோ கையாண்டுள்ளார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மனிதச்சங்கிலி போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள் எனப் பல வகைகளில் தலைவர் வைகோவின் பங்களிப்பு இந்த விவகாரத்தில் இருந்தது.

 

பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்டதும் அந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைவர் வைகோ, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை அணுகி இந்த விவகாரத்தில் நீங்கள் ஆஜராக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் ரொம்பவும் பிஸியாக இருந்ததால் இந்த வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த மூன்று பேர் உயிர் உங்கள் கையில்தான் இருக்கு, நீங்க எனக்காக ஆஜராக வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்ட பிறகே ராம்ஜெத்மலானி இந்த வழக்கில் ஆஜரானார். 

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தன்னுடைய சிறப்பான வாதத்திறமையால் மூவரின் தூக்குத்தண்டனையை தற்காலிகமாக ராம்ஜெத்மலானி நிறுத்தினார். அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக பல அமர்வில் ராம்ஜெத்மலானியுடன் தலைவர் வைகோ கலந்துகொண்டார். இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான ராம்ஜெத்மலானி மாபெரும் சட்டமேதை. அவருடைய அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டம். ஆனால், தலைவர் வைகோவிற்காக சென்னை வரை வந்து வாதாடினார். ராம்ஜெத்மலானியின் வாதத்திறமையால் மரண தண்டனை தீர்ப்பை ஆயுள்தண்டனையாகக் குறைத்தார். 

 

அதன் பிறகு, தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மூலம் இந்த வழக்கில் ஒரு விடை கிடைத்திருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு”. இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.

 

 

Next Story

தி.மு.க கூட்டணி; திருச்சி தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Trichy Constituency Candidate Announcement for DMK alliance

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி அண்ணா அறிவாலயம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதன்படி ம.தி.மு.க.விற்கு ஒரு தொகுதி அறிவிக்கப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கையெழுத்தானது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. முன்னதாக, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, மதிமுக - 1 தொகுதி, விசிக - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று (18-03-24) கையெழுத்தாகி ஒப்பந்தமானது. அதன்படி, மதிமுகவுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை திருச்சியில் போட்டியிட்டது. 

இந்த நிலையில், திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இது குறித்து, வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். மதிமுகவுக்கு தேர்தல் சின்னம் இன்னும் முடிவாகவில்லை. பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையம் கொடுத்தால் மிக்க மகிழ்ச்சி. அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், பட்டியலில் இருக்கக்கூடிய 3 சின்னத்தை தேர்ந்தெடுத்து, அதில் ஒரு சின்னத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். புதிய சின்னம் கிடைத்தாலும் பாதகம் இல்லை. மக்களிடம் எளிதாக கொண்டு செல்வோம்.” என்று கூறினார்,  

Next Story

குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர்கள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Ministers who started the event of setting up small shops

சிவகாசி விஸ்வநத்தம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் குப்பை மேடாக காட்சி அளித்தது. இதனை ஆட்டோ ஓட்டுநர்கள், அன்றாடம் வேலை செய்யும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பசுமை ஆர்வலர்கள் இணைந்து விஸ்வ வனம் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இவர்கள் அந்த இடத்தை தூய்மைப்படுத்தி பசுமைக் காடுகள் அமைக்க திட்டமிட்டனர். இவர்களுக்கு உதவ முன்வந்த மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இடத்தைப் பார்வையிட்டு ஊராட்சித் தலைவரிடம் பேசி குப்பைகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுத்ததோடு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவையும் பலமுறை சந்தித்துப் பேசி நிலைமையை விளக்கிச் சொன்னார்.

அதைத் தொடர்ந்து குறுங்காடுகள் அடர்வனம் அமைக்க அறக்கட்டளைக்கு அனுமதி அளித்து அமைச்சர் சேகர்பாபு ஆணை வெளியிட்டார். இன்று காலை 10.30 மணிக்கு முதற்கட்டமாக 7 ஏக்கர் இடத்தில் குறுங்காடுகள் அடர்வனம் அமைக்கும் நிகழ்வு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்வினை தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையினை அமைச்சர்களிடம் பெற்று விஸ்வவனம் அறக்கட்டளையிடம் துரை வைகோ ஒப்படைத்தார். இந்த திட்டச் செயலாக்கத்திற்காக துரை வைகோவையும் தொடர்புடைய நிர்வாகிகளையும் அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தி.மு. இராசேந்திரன், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி. சதன் திருமலைக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் கண்ணன், பா.வேல்முருகன், ஆர்.எஸ். இரமேஷ், இல.சுதா பாலசுப்பிரமணியன், முனியசாமி பசும்பொன் மனோகரன், மார நாடு, ஜெயராமன், வி.கே.சுரேஷ், மதிமுக சட்டத்துறை செயலாளர் சூரி நந்தகுமார், சிவகாசி மேயர் சங்கீதா, இன்பம் ஒன்றியச் சேர்மன் விவேகன்ராஜ், ஊராட்சி தலைவர் ஏ.எல். நாகராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கணேசன், விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டக் கழக முன்னணி நிர்வாகிகள், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வர 14 மாதங்களாக துரை வைகோ மேற்கொண்ட முயற்சிகள் 7 நிமிட குறும்படமாக அரங்கில் அமைக்கப்பட்ட திரையில் திரையிடப்பட்டது. துரை வைகோவின் முயற்சிகளையும் பூமித்தாயை காப்பதில் துரை வைகோ கொண்டிருக்கும் அக்கறையையும் துல்லியமாக குறும்படம் எடுத்துரைத்து பார்வையாளர்களை கவர்ந்தது. அமைச்சர்கள் தங்களது பேச்சில் அதனை உள் வாங்கி துரை வைகோவை பாராட்டினர்.