Skip to main content

"மதுசூதனன் உயிரோடு இருந்திருந்தால் அன்வர் ராஜா நிலைதான் வந்திருக்கும்... அதிமுக தலையில்லாத.." - மருத்துவர் காந்தராஜ் காட்டம்!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

v

 

சில நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்; நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...

 

"அதிமுக தலையில்லாத முண்டமாக இருக்கிறது. அதனால் அதிமுகவில் இதே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். இவர்கள் இரண்டு பேருமே பிரிந்திருக்கிறார்கள். அதிமுக பல பிரிவுகளாக துண்டுதுண்டாக சிதறிப்போய் உள்ளது. எனவே தலைமை இல்லாமல் எந்த கட்சியும் அடுத்த கட்டத்திற்கு செல்ல இயலாது. எனவே அதிமுக மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லை. இப்போது மதுசூதனன் இறந்துவிட்டார், அவர் வகித்து வந்த அவைத்தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இத்தனை நாட்கள் கடந்தும் இன்னொருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பதவியை இவர்களால் கொடுக்க முடியவில்லை. அப்படி கொடுக்க முயன்றால் நீ என்ன சொல்வது நாங்க என்ன கேட்பது என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுகிறார்கள். யாரும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. 

 


அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் தன்னை தலைவராக நினைத்துக்கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது. தலைமையகத்தில் அந்த கூட்டம் நடந்த தகவல் இதுவரை முறையாக வெளிவந்ததா என்றால் இல்லை. ஏதாவது தீர்மானம் நிறைவேற்றினார்களா? இவர் அவரை அடித்தார், அவர் இவரை அடித்தார், இவர் கண்ணீர்விட்டு கதறினார், மன்னிப்பு கேட்டார் என்று தான் செய்தி வெளிவருகிறதே தவிர் கட்சி நலன் சார்ந்து இதை பேசினோம் என்ற தகவல் இதுவரை வெளிவந்துள்ளதா? அப்படி எந்த செய்தியும் இதுவரை வெளிவரவில்லை. ஏனென்றால் இவர்கள் ஒருவர் பேச்சை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற யுத்தம் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. எனவே இவர்களால் எந்த முடிவு எடுக்க முடியாது. மக்கள் மத்தியில் அதிமுகவுக்கு மரியாதை கொடுக்க தயாராகத்தான் இருக்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை. யார் தலைமைக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பமே அவர்களுக்கு தற்போது நிலையில் இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த அற்புதமான இயக்கத்தை இன்றைக்கு இடையில் வந்த இவர்கள் படிப்படியாக சீரழித்து வருகிறார்கள். 

 

முஸ்லிம் சமூகத்துக்கு அன்வர் ராஜா தான் பிரதிநிதியாக இதுவரை இருந்தார். ஆனால் தற்போது அவரை மனிதனாக கூட இவர்கள் மதிக்கவில்லையே. ஜெயலலிதா இருந்த போது அவர் எவ்வளவு செல்வாக்காக இருந்தவர். நல்லவேளை மதுசூதனன் இறந்துவிட்டார். இல்லையென்றால் அவருக்கு அனவர்ராஜா நிலைதான் வந்திருக்கும். அந்த கூட்டத்தில் வந்தவர்கள் எத்தனை பேர் எம்ஜிஆரை பார்த்திருக்கிறார்கள். ஜெயலலிதாவிடம் பேசி இருக்கிறார்கள். இவர்கள் இருவராலும் நியமிக்கப்பட்ட ஜால்ரா கூட்டம் தான் அங்கே இருக்கிறது. அவர்கள் இருவரும் என்ன சொல்கிறாரோ அதுபடி நடந்துகொள்வார்கள். அதைத்தாண்டி இவர்கள் இருவருக்கு ஒன்றும் தெரியாது. இப்போது கட்சியில் இருக்கும் நிர்வாகிகளிடம் அண்ணாவை யார் என்று கேளுங்கள், தெரியலையே என்றுதான் அண்ணா பெயரில் இருக்கும் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறுவார்கள். இதுதான் அந்த கட்சியின் நிலையாக இருக்கிறது. சக்தி வாய்ந்த தலைமை அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிமுக காணாமல் போகிற நிலைமைக்குத்தான் இன்றைய சூழல் இருக்கிறது. 

 

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.