Skip to main content

கலைஞருக்காக சிறை; உதயநிதிக்காக செலவு - முதல்வருக்கு கடைநிலை தொண்டன் வைத்த கோரிக்கை

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

dmk member request to the chief minister cm stalin
தன்னரசு

 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது அரசியல் களத்தில் குறிப்பாக எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் அதை விவாதப் பொருளாக மாற்றியுள்ளது. ‘மகனுக்கு முடிசூட்டும் விழா... உதயநிதி அமைச்சரானால் என்ன பாலாறும்... தேனாறுமா தமிழகத்தில் ஓடப் போகிறது...? அப்பட்டமான வாரிசு அரசியல்..’ என  அ.தி.மு.க.எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். 

 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க.வின் ஒவ்வொரு மாவட்ட கழகமும் தீர்மானம் இயற்றியுள்ளது. அதேபோல் மூத்த நிர்வாகிகள் முதல் கடைநிலை தொண்டன் வரை அவர் அமைச்சர் ஆவதை வரவேற்பதைக் காண முடிந்தது.

 

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததைக் கட்சி தொண்டர்கள் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு நல்ல நிகழ்வாகக் கொண்டாடியுள்ளனர். அமைச்சர் பதவி ஏற்ற அந்த 14 ந் தேதி ஈரோட்டில் ஒரு சவரத் தொழிலாளி தனது சலூன் கடைக்கு வந்த அனைவருக்கும் தனது சொந்த செலவில் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்து அசத்தியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 58 வயதான தன்னரசு. இவரது மனைவி ஜோதிமணி, இவர்களுக்கு மோகனசுந்தரம், திருநாவுக்கரசு என்ற இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. தன்னரசு  தி.மு.க.வின் தீவிர தொண்டர். சென்ற நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நடுப்பாளையம் என்ற அந்த கிராமத்தில் சலூன் கடை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளதைக் கொண்டாடும் வகையில் அமைச்சர் பதவி ஏற்பு நாளில் தனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்வதாக முன்னதாகவே சுற்றுவட்டார கிராமங்கள் வரை அறிவிப்பு செய்திருந்தார் தன்னரசு.

 

இதுகுறித்து தன்னரசு கூறும்போது, “நான் 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உள்ளேன். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரை குருவாக நேசிக்கிறேன். 1989ல் கலைஞர் ஆட்சியைக் கலைத்தபோது போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றுள்ளேன். சட்டமன்ற தேர்தலில் எனது இரு மகன்கள் மற்றும் இரண்டு மருமகள் என நான்கு பேருக்கும் மொடக்குறிச்சி தொகுதியில் சீட் கேட்டு பணம் கட்டினேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து பணம் கட்டவில்லை. நேர்காணலில் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காகத்தான் பணம் கட்டினேன். அதுபோல தளபதியை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது அதுவே எனக்கு போதும்.

 

dmk member request to the chief minister cm stalin

 

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக அறிவிப்பு வந்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் நாளில் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். ஆனால் ஒரு சவரத் தொழிலாளியான என்னால் என்ன செய்ய முடியும்? எனது சலூன் கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக முடித்திருத்தம் மற்றும் சவரம் செய்ய முடிவு செய்தேன். அதற்காக மேலும் மூன்று சவரத் தொழிலாளர்களை அன்றைய தினம் பணியில் அமர்த்தி என்னோடு நான்கு பேர், காலை 6 மணி முதல் மாலை 6 வரை கடைக்கு வந்த அனைவருக்கும் கட்டிங், சேவிங் செய்தோம். நூற்றி இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செய்து கொடுத்துள்ளேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் ஒரு தி.மு.க. தொண்டனாக எனது இன்னொரு விருப்பம், முதல்வர் தளபதிக்கு நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். உதயநிதி அவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்” என அளவில்லா மகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார் தன்னரசு.

 

 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.