Skip to main content

அழிந்த ஊரில் அழியாத வரலாற்றுத் தடயங்கள்... பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு..

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Discovery of the ancient Mahavira sculpture

 

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தே. கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி, மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் வழக்கறிஞர் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரியம்மன் கோயில் பின்புறம் முட்புதரில் கள ஆய்வு செய்தனர். அப்போது 1000 ஆண்டுகள் பழமையான சிதைந்த நிலையில் 24வது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் கண்டறியப்பட்டது.

 

Discovery of the ancient Mahavira sculpture

 

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது; அழிந்த ஊரில் அழியாத வரலாற்றுத் தடயங்களுடன் இன்றும் அரசாங்க பதிவேட்டில் மட்டுமே காணப்படும் கிராமம் தான் வேளாம்பூர். இக்கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலையில் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட வர்த்தமானர் எனும் சமன சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும், விரிந்த மார்புடனும் காணப்படும் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேய்ந்த நிலையில் 3 சிங்கங்கள் உள்ள பீடத்தின்மீது சிம்மாசனத்தில் அர்த்த பரியங்கா ஆசனத்தில் (பாதங்கள் இரண்டும் மேல் நோக்கி இருக்கும்படி ஒரு கால் மீது மறுகாலை மடித்து அமர்வது) யோகமுத்திரையுடன் தியான நிலையில் அமைதி தவழும் திருக்கோலத்தில் மகாவீரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Discovery of the ancient Mahavira sculpture

 


சிற்பம்  சிதைந்த பகுதி:
 

தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஓளி வீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம், எனும் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் போன்றவை உடைந்த நிலையில் காணப்படுகிறன. சமீபத்தில் கவசக்கோட்டை செங்க மேடு பகுதியில் கண்டறியப்பட்ட மகாவீரர் சிற்பமும் இச்சிற்ப உருவமும் ஒப்பீட்டின்படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இச்சிற்பத்தை கருதலாம். இப்பகுதியிலும் ஒரு சமண பள்ளி வழிபாட்டிலிருந்து அழிந்ததை நம்மால் அறிய முடிகிறது. இவ்வூர் அருகிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதும் கருதத்தக்கது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக அனுமானிக்கலாம் என்றார்.

 

 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.   

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.