Skip to main content

‘நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி’ - 13ம் நூற்றாண்டு சமணப்பள்ளி கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Discovery of a 13th century Jainpalli inscription

மானாமதுரையை அடுத்த கீழப்பிடாவூரில் சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கீழப்பிடாவூரில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் லிங்கம் ஆகியோர் அளித்த தகவலின் படி, அவ்வூரில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர் இரா. நரசிம்மன், கள ஆய்வாளர் கா.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர்,புலவர் கா. காளிராசா கூறும்போது..

சமணப்பள்ளி கல்வெட்டு

மதுரையைச் சுற்றி சமணர் பெரும் பகுதி வாழ்ந்துள்ளனர் என்பதை மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் சமணப்படுக்கை அமைந்துள்ளதன் வழி அறிய முடிகிறது, மேலும் இங்கு உள்ள ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் திருமேனிகள் அதை செய்வித்த அச்சனந்தி அடிகள் போன்ற விவரங்கள் வட்டெழுத்துக்கல் வெட்டாகவும் கிடைக்கின்றன. மேலும் அக்காலக் கட்டங்களில் செய்த திருமேனிகள் அவர்களுக்கு அளித்த நிலக்கொடைகள் போன்ற செய்திகளும் கழுகுமலை போன்ற இடங்களில் கல்வெட்டாக விரிவாக கிடைக்கின்றன.

ஏழு, எட்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும் சமணர்களுக்கும் நிகழ்ந்த பூசல்களில் சமணர்கள் கழுவேற்றப் பெற்றதாகவும் மலை போன்ற மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது,  திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்களில் பத்தாவது பாடல் சமணர்களைப் பற்றிய செய்தியை உள்ளடக்கியதாக உள்ளது, பாண்டிய நாட்டில் பத்தாம் நூற்றாண்டோடு சமணம் வழக்கொழிந்ததாக கருதப்பட்டு வரும் இந்நிலையில் மானாமதுரை அருகே உள்ள கீழப்பிடாவூரில்  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி தொடர்பான கல்வெட்டொன்று  கிடைத்துள்ளது.

Discovery of a 13th century Jainpalli inscription

மன்னர் வழங்கிய கொடை

கல்வெட்டில் ஒரு பக்கம் அரசு அலுவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது ஒப்பமாக எழுத்து என்று வருகிறது. இவ்வகையில் மக்களின் பயன்பாட்டில் சமணப்பள்ளி இருந்ததோடு அரசர்கள் அதற்கு நிலக்கொடை வழங்கும் அளவிற்கு முதன்மை பெற்றிருந்தது என்பதும் சிறப்பானதாகும்.

கல்வெட்டு அமைப்பு

நான்கு பக்கங்களிலும் கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. ஒருபக்கத்தில் திரிசூலம் செதுக்கப்பட்டு அதன் கீழிருந்து கல்வெட்டு தொடங்குகிறது. இப்பக்கத்தில் ஏழு வரிகள் இடம்பெற்றுள்ளன, மற்ற மூன்று பக்கங்களிலும்  எழுத்துகள் உள்ளன, ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தி எழுதப்பட்டுள்ளது.22,25,28 வரிகள் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டு தரைக்கு மேலிருந்து இரண்டே முக்கால் அடி உயரம் அமைந்துள்ளது. தரைக்கு கீழேயும் ஒரு அடி ஒன்றரை  அடி ஆழம் இருக்கலாம் அதிலும் எழுத்துகள் கீழ் செல்கின்றன.

விக்கிரம பாண்டியன்

கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது 13ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். கல்வெட்டில்  விக்கிரம ராம வளநாடு என்று வளநாட்டில் புதிய பெயரும் இடம்பெற்றுள்ளது, நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி மற்றும் பள்ளிச் சந்தம் போன்ற சொற்களைக்கொண்டு இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனை குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பியாவான் இவனது காலம் பொ.ஆ 1268 முதல் 1281 வரை இவன் நடு நாட்டில் திருநறுங் கொண்டையில் நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்ற பெயரில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவியதோடு அனைத்துக் கடவுளருக்கும் இறையிலி நிலங்கள் வழங்கியதை இவனது கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

நாற்பத் தெண்ணாயிரப் பெரும்பள்ளி

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் கல்வெட்டில் கருங்குடி நாட்டு பெரும் பிடாவூர் நாற்பத்தெண்ணாயிரப்    பெரும்பள்ளி தேவர் என வருகிறது. இதைக் கொண்டு இவ்வூரில் சமணப்பள்ளி  இருந்ததை நாம் அறிய முடிகிறது.

கல்வெட்டுச் செய்தி

நாயனாருக்கு திருப்படி மாற்று உள்ளிட்ட நித்த நியமங்களுக்கு நான்கு எல்லையிலும் எல்லைக்கல் நாட்டி, வரிகள் பிரித்து பூசை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட செய்தி,  சூரியனும் சந்திரனும் உள்ளவரை இவை செல்லுபடியாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள சம்மதித்து பிடிபாடு எழுதிக் கொடுத்ததோடு அரசு அலுவலர்களின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

பள்ளிச் சந்தம்

பள்ளிச் சந்தம் என்பது பொதுவாக பௌத்தம் மற்றும் சமணக் கோவில்களுக்கு நிலக்கொடை வழங்கப்படுவதை குறிக்கும் சொல்லாடலாகும். கல்வெட்டில் கிரந்த எழுத்துகளும்  இருந்ததால் மேலாய்வுக்காக தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் ஐயா அவர்களிடமும் வாசித்து செய்தி பெறப்பட்டது. கல்வெட்டு அமைந்த திரிசூலம்,இன்று அப்பகுதி மக்களால் முனியசாமியாக வணங்கப்பட்டு வருகிறது, கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஒரு மேட்டுப்பகுதியாகவும் அதில் கோவில் இருந்து இடிந்து போன கற்களும் அருகில் ஒரு குளமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வூரின் கண்மாய்க் கரையில் 16,17 ஆம் நூற்றாண்டு  எழுத்தமைதியில் வானவீரன் மதுரையில் திருமாலிருஞ் சோலை நின்ற மாமகாவலி வாணதிராயர் எனத் தொடங்கும் மடை தானம் குறித்த கல்வெட்டொன்றும் உள்ளது.  சிவகங்கை தொல் நடைக்குழு பாண்டிய நாட்டில் 13 ஆம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்கோடு இருந்ததைச் சொல்லும் கல்வெட்டை கண்டறிந்தது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Next Story

தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டு கண்டுபிடிப்பு‌!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
discovery of the Zamindar inscription of the Ore Pancha period

கல்லலை அடுத்த அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார்  கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா. காளிராசா, கள ஆய்வாளர், கா. சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா‌. காளிராசா, செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது. கல்லலை அடுத்துள்ள அரண்மனை சிறுவயல் நீர் நிலைகளும், வயல்வெளிகளும் நிறைந்த  ஊராகும். இங்குள்ள மும்முடீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலாகும், மேலும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இங்குள்ள சீனக்கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனக்கண்மாய்;

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனார் கோவிலுக்குச் செல்லும் வழியில் தொடர்வண்டிப் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு இது பழமையான கண்மாய் என்பதை அறிய முடிகிறது.

அரண்மனை சிறுவயல் ஜமீன்தார்;

சிவகங்கைச் சீமை இராமநாதபுரத்தில் இருந்து 1729 இல் பிரிக்கப் பெற்று சசிவர்ணதேவர் அவர்களால் 1730 இல் தெப்பக்குளம், அரண்மனை மற்றும் நகரம், உருவாக்கி முறையான அமைப்பாக ஆளப்பெற்றது. 03.09.1801ல் இருந்து இஸ்திமிரிங் ஜமீன்தாராக கௌரி வல்லவருக்கு அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் முடி சூட்டப் பெற்று, அன்று முதல் ஜமீன்தாரி முறைக்கு சிவகங்கை வந்தது. கௌரி வல்லவர் அறந்தாங்கி காட்டில் வாழ்ந்த போது மாணிக்க ஆத்தாள் என்பவரை விரும்பி மணந்தார். இவர் வேறு சமூகத்தை சார்ந்தவர். அவர் வழிவந்த வாரிசுகளே தற்போது சிறுவயல் ஜமீன்தாராக இருந்து வருகின்றனர். இங்கிருந்த முத்துராமலிங்க ஜமீன்தார் பற்றி தமிழ்த் தாத்தா உ.வே.சா என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களது வாரிசுதாரர்கள் இன்றும் காளையார்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஐந்தாம் மண்டகப் படியை நடத்திவருவதோடு, காளையார் கோவில் தேரோட்டம், மற்றும் தெப்பத் திருவிழாவிற்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். கல்லல் சிவன் கோவிலிலும் எட்டாம் திருநாள் மண்டகப்படி இவர்களுடையதாக உள்ளது. இவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது மிகவும் இடிந்த நிலையில் இருந்தாலும் அதில் ஒரு பகுதியில் வேல், வாள், கம்பு, வளரி போன்ற ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வெட்டு அமைப்பு;

சீனக் கண்மாயில் நீர் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப்பகுதிகள் செம்புராங்கல்லாலும்.. நீர் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி  அகலமும் உடையதாகக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி;

உ 1876 ஆம் வருஷம் மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28ஆம் தேதி சிவ- சப்-கட்டணூர் ஜமீன்தார் முத்து வடுகு முத்துராமலிங்க தேவர்வர்கள்.என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாய்க் கல்வெட்டின் வழி கண்மாயை முத்து வடுகு என்ற முத்துராமலிங்க  ஜமீன்தார் அவர்கள் கண்மாய், மற்றும் கலுங்கை சீர் செய்தமையை அறிய முடிகிறது.

தாது பஞ்சம் காலம்;

1876 ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்னும் பின்னும் சேர்த்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல் மிகுந்த வறட்சியாக இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் இலட்சக்கணக்கில் இறந்ததாகவும் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனர். சென்னை மட்டுமல்லாது கர்நாடகா மகாராஷ்டிரா வரை இப்பஞ்சம் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும் சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூர்வாரி பராமரிப்பு பணியை செய்து இருப்பதன் மூலம் அடுத்த மழைக்கு தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்ச லட்சண திருமுக விலாசம்;

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூர் வில்லியப்ப பிள்ளை பாடிய எள்ளல் சுவை மிகுந்த நூல் பஞ்சலட்சன திருமுக விலாசம் ஆகும். இந்நூலில், மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தார் துரைசிங்கம் அவர்களிடம் முறையிட அனுப்பி வைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

சிவகங்கை தொல்நடைக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர், தாது பஞ்ச காலத்தில் இலங்கையில் தொழில் செய்த தனிநபர் ஒருவர், குளம் மற்றும் வரத்துக் காலை சீர் செய்து உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிய கல்வெட்டை சிவகங்கை அருகே உள்ள இடைய மேலூரில் கண்டுபிடித்தது, குறிப்பிடத்தக்கது.

Next Story

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்த எழுத்துள்ள சன்னியாசி கல் கண்டெடுப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
15th century Sannyasis find with Grantha inscription

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர்  சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது  கோமாரி கல் என்பது தெரிய வந்தது.

இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.

15th century Sannyasis find with Grantha inscription

மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு  வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.

கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று  அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.