Skip to main content

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 1

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

தமிழகத்தின் அரசியலைக் கரைத்துக்குடித்த அவர் இன்றுவரையிலும் அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டர்தான். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்,  அவ்வப்போது, நடப்பு அரசியலை நம்மிடம் பகிர்ந்துகொள்வார்.
 

MGR Jayalalithaa



மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து “மனக்குமுறல் நிறைய இருக்கிறது. கொட்டித் தீர்க்க வேண்டும்.’ என்று நம்மைத் தொடர்ந்து அழைத்தபடியே இருந்தார். அவரைச் சந்தித்தோம். “அதிமுக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. கோர்வையாக எனக்குச் சொல்ல வராதே...” என்றபடி குமுறலை வெளிப்படுத்தினார். அந்த அதிமுக அடிமட்டத் தொண்டரின் ஆதங்கம் இதோ – 

என்ன நடந்தாலும் இரட்டை இலைதான்! 

“எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான்  எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன். பின், அவருடைய மன்றத்தில் இணைந்தேன். மன்றத்தின் வளர்ச்சிக்காக உழைத்தேன். எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கிய பின், என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர், எதையுமே எதிர்பார்க்காமல் அவருடைய கட்சியில் இணைந்தோம். கட்சி வளர்ச்சிக்காக, அடிமட்டத் தொண்டர்களாக நிறைய பணியாற்றினோம். அரசியலில் என்ன மாற்றம் நடந்தாலும், காலம் காலமாக நான் மட்டுமல்ல,  என்னைப் போல் உள்ள லட்சோபலட்சம் தொண்டர்களின் குடும்பங்களும் இரட்டை இலையைத் தவிர வேறு கட்சி சின்னத்துக்கு ஓட்டுப் போட்டதில்லை. 

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், திக்குத் தெரியாமல் கட்சி போய்விடுமோ என்று அச்சப்பட்டோம். ஆனால், ஆபத்பாந்தவனாக வந்து நின்னாங்க ஜெயலலிதா.  இயக்கம் பிளவுபட்டது. ஆனாலும், பிளவுபட்ட இயக்கம், பின்னாளில் இணைந்தது. அப்போது ஆனந்தக் கூத்தாடி அகமகிழ்ந்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவுக்குப் பிறகு,  இந்த  இயக்கம் சுயநலக் கும்பலின் கரங்களுக்குச் சென்றது. அதை, மீட்டெடுப்பதற்கு,  இன்னொரு ஆபத்பாந்தவனை ஜெயலலிதா ஆன்மா அனுப்பாதா? என்று ஏங்கிக் கிடந்த ஒன்றரைக் கோடித் தொண்டர்களில் நானும் ஒருவன். 

மீட்கப்பட்டது; முறியடிக்கப்பட்டது!

முதலில் சுயநலக் கும்பலுக்கு, பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகிய நீங்கள் இருவரும் அடிபணிந்தீர்கள். இருந்தாலும்,  சிறிது காலத்திலேயே,  அடிமைப் பெண் எம்.ஜி.ஆரைப் போல நிமிர்ந்து நின்று, சசிகலா கும்பலிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டு விட்டீர்கள். சாதாரணத் தொண்டர்களாக இருந்து, கட்சியில், படிப்படியாக வளர்ந்தவர்கள்தான் நீங்கள் இருவரும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்; ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர். கட்சியில் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள்; கட்சியை வழி நடத்தும் பொறுப்புகள். இந்த நிலை உருவானதும், நாங்களே பதவிக்கு வந்து விட்டது போன்ற உணர்வில் மகிழ்ந்தோம். அ.தி.மு.க. என்னும் ஆலமர கட்சியில் மட்டும்தான், சாதாரண தொண்டனும் உயர் பொறுப்புகளுக்கு வர முடியும் என்பதை, மீண்டும் ஒரு முறை தாங்கள் இருவரும் ஒருங்கிணைப்பாளர்; இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புக்கு வந்து நிரூபித்துவிட்டீர்கள்.
 

 

admk


இருந்த போதும், இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று, துரத்தியடிக்கப்பட்ட சசிகலா கும்பல், பண பலத்தாலும், குறுக்கு எண்ணத்தாலும், தொடர்ந்து முயற்சித்தது. இருந்தாலும், தங்கள் இருவரின் சாதுர்யத்தாலும், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் தொண்டர்களின் பலத்தாலும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. 

இந்தச் சமயத்தில்தான், கட்சிக்கு சோதனை வைப்பது போல, லோக்சபா தேர்தல் வந்தது.  நம்மை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, சசிகலா கும்பல்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில், ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி, தேர்தல் களத்தைச் சந்தித்தது. 

தோற்றாலும் ஆறுதல் அடைந்தோம்!

குறிப்பிட்ட இன மக்களை மட்டுமே நம்பி நின்ற சசிகலா கும்பல், அவர்களை வைத்து எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்பினர். அந்தக் குறிப்பிட்ட இனம் அதிகமாக இருக்கும் சில பகுதிகளில் மட்டுமே, குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெற்றனரே தவிர, அவர்களால், களத்தில் இரட்டை இலையை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை.

இதற்குக் காரணம், அ.தி.மு.க.,வின் ஆணி வேராக இருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் அத்தனை பேரும், அ.தி.மு.க.,வை காப்பாற்ற ஓட்டளித்ததுதான். ஆனாலும், வெற்றி விளிம்புக்கு இரட்டை இலையால் செல்ல முடியவில்லை; அது தான்  வேதனை. பூலாவரி சுகுமாரன், வத்தலக்குண்டு ஆறுமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் போன்றோரின் குருதியில் பூத்த மலர்தான் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை அழிக்க, சுயநலக் கும்பலான சசிகலா கும்பலால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே, மாபெரும் வெற்றிதான். இப்படிச் சொல்வதைவிட, பெரும் ஆறுதல் என்று கூறமுடியும்.  

தோல்வியின் போதெல்லாம் ஜெயலலிதா!

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின், நாம் முழுமையான சுய பரிசோதனை மேற்கொள்ளத் தயாராகி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதெல்லாவற்றையும் புறம் தள்ளி வைத்து விட்டு, அதைத்தான் நாம் செய்திருக்க வேண்டும்.
 

 

jayalalithaa


இப்படித்தான், கடந்த காலங்களில் நடந்துள்ளது. கட்சிக்கு தேர்தல் களத்தில் தோல்வி என்ற சோதனை வரும்போதெல்லாம், இதுதான் நடந்திருக்கிறது. 1996-ல், மிக மோசமான தோல்வியை அ.தி.மு.க., சந்தித்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி, படு தோல்வியைச் சந்தித்தது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யத் துவங்கினார். கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் சென்னைக்கு வரவழைத்து, தனித்தனியாகக் கேட்டறிந்தார். சென்னை, வட பழனி,  விஜய சேஷ மகாலில்தான், இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

அதோடு அவர்  நிறுத்தவில்லை. கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியை, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்களைச் சந்தித்துப் பேசச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து வந்து, தோல்விக்கான காரணங்களைச் சொன்னார் கிருஷ்ணசாமி.  வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சசிகலா கும்பல் நடத்திய ஆடம்பரத் திருமணமும், அந்தக் கும்பல் தமிழகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போட்ட ஆட்டமும்தான் தோல்விக்கான காரணம் என, வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை ஜெயலலிதாவும் அறிந்து கொண்டார்.  பின்,  1999-ல் லோக்சபா தேர்தல் வந்தது. அப்போதும் கட்சிக்குப் பெரும் பின்னடைவுதான். இம்முறையும், தோல்விக்கான காரணத்தை அறிய முயன்றார் ஜெயலலிதா. சென்னை, கிண்டி, டான்சி வளாகத்தில் வைத்து கட்சிக்காரர்களைச் சந்தித்தார். தொகுதிவாரியாக தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன. கழக நிர்வாகிகளிடம் நேரடியாகவே கேட்டறிந்தார் ஜெயலலிதா. 

 

அடுத்த பகுதி:

 

ஜெயலலிதா இல்லியே! யாரும் இல்லியே! -அதிமுக ஸ்கேன் ரிப்போர்ட்! பகுதி 2
 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.