Skip to main content

பாரபட்சம் காட்டினால் கரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும்? பிரதமர் மோடி மீது அதிருப்தியில் காங்கிரஸ்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020


 

congress



பேரிடர் கால நிலவரம் குறித்து ஆராய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை கடந்த வாரம் அமைத்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்தி.

இந்த நிலையில், கட்சியின் அகில இந்திய செயற்குழு காணொலிக் காட்சி வாயிலாக சோனியா தலைமையில் 23-ந்தேதி டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் செயற்குழுவில் பங்கேற்றிருந்தனர்.

கூட்டம் குறித்து டெல்லியில் செல்வாக்குள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "மன்மோகன்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அறிக்கையாக சோனியாகாந்தியிடம் ஏற்கனவே சமர்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஏழை மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 7,500 ரூபாய் உதவித் தொகையாக வரவு வைக்க வேண்டும். இதனை அடுத்து வரும் 3 மாதங்களுக்கு கொடுப்பது அவசியம். இல்லையெனில் வறுமையில் மரணம் நிகழ்வதை தவிர்க்க முடியாது.


 

 

congress



அதேபோல, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவைகளுக்கு புத்துயிர் அளிப்பது அவசர தேவையாக இருக்கிறது. பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளின் உற்பத்தி தேக்க மடைந்திருக்கிறது. அது குறித்த கவலை மத்திய அரசுக்கு இல்லை. அதனால், தானிய வகைகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை மீட்க அறிவிக்கப்பட்ட நல உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் தனது குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார் மன்மோகன்சிங். செயற் குழுவில் அந்த அறிக்கை முன்மொழியப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. விரைவில் அந்த பரிந்துரைகள் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றவர்கள், செயற்குழுவில் நடந்த விவாதங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

செயற்குழுவில் பேசிய சோனியாகாந்தி, இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு தரும் என கடிதம் மூலமாக பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தியுள்ளேன். ஆனால், ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறி வருகிறது. இந்தியா எதிர்கொண்டிருக்கும் பாதிப்புகளை சமாளிக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற காங்கிரஸ் கட்சி எடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு விரும்பவில்லை. இதற்கு மாறாக, மதவாத வைரஸையும், வெறுப்புணர்ச்சியையும்தான் மத்திய அரசு பரப்பி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் விழிப்புடன் இருந்து மக்களின் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம், உணவு உள்ளிட்ட விசயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளன. கிட்டத்தட்ட 12 கோடி பேர் கடந்த 4 வாரங்களில் வேலையை இழந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அது தொடர்பான பரிசோதனைகள் குறைவாகவே இருக்கின்றன. இது குறித்தெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், பரிசோதனை முறைகள், நோய்த் தொற்றை கண்டறிதல் உள்ளிட்ட பல விசயங்களில் தீவிரமான அக்கறை மோடி அரசுக்கு இல்லை. பரிசோதனை கருவிகள் தேவையான அளவுக்கு இல்லை என்பதும், மக்களை தனிமைப்படுத்துவதை தவிர மாற்று திட்டம் எதுவும் இல்லை என்பதும் மிகப் பெரிய சோகம். மக்களை மீட்கும் பணியில் காங்கிரஸார் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மே மாதம் 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கவே மத்திய அரசு சிந்திக்கிறது. நோய் பரவுதல் அதிகமுள்ள மாவட்டங்களில் மட்டுமே முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் சரியானதாக இருக்க முடியும்'' என்றார்.

 

v



மன்மோகன்சிங் பேசும்போது, "கரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு என நினைக்கிறார் பிரதமர். இது தவறானது. மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் செய்வதை தவிர்த்து அவர்களுடன் இணைந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். கூட்டு முயற்சிதான் உதவும்'' என்றார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை எதிரியாக நினைத்து போதுமான நிதி உதவி செய்ய மறுத்து வருகிறார் பிரதமர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டினால் கரோனா நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள முடியும்?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதே குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தியதுடன்,‘மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் போனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் பலகீனமாகிவிடும். அதிக நிதி ஒதுக்குவதில் அரசியல் செய்தால் மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம்'' என்றிருக்கிறார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட்!

செயற்குழுவில் பேசிய தலைவர்கள் அனைவருமே, மோடி அரசு மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கினர்!


 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.