Skip to main content

“வெற்றிமாறன் என்னை சந்தித்து சில தகவல் பெற்றிருக்கலாம்” - ‘விடுதலை’ திரைப்பட வாத்தியார் மகன் சோழன் நம்பியார் !

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Chozhan Nambiyar Special Interview

 

சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'விடுதலை' படத்தில் அதிகம் கவனிக்க வைத்தது விஜய் சேதுபதி ஏற்று நடித்த பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரம். இந்த கேரக்டர் அதிக கவனம் பெற்றதற்குக் காரணம் இது கலியபெருமாள் என்கிற உண்மைக் கதாபாத்திரத்தைத் தழுவி உருவான ஒன்று என்பதுதான். தமிழ்த் தேசிய போராளி கலியபெருமாள் அவர்களுடைய மகன் சோழன் நம்பியார் இந்தப் படம் குறித்தும் அவருடைய தந்தை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

என்னுடைய தந்தை கலியபெருமாளை வாத்தியார் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதையும் தாண்டி பொதுத் தொண்டில் அதிகம் ஈடுபட்டவர் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். சில உண்மைச் சம்பவங்களை விடுதலை படத்தில் வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு நேரடியாகப் புரியாவிட்டாலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு படத்தில் காட்டப்படும் பல விஷயங்களின் பின்னணி புரியும். 1950 காலகட்டங்களில் என் தந்தை பொன்பரப்பியில் ஆசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் அவர் பெரியாரிய இயக்கங்களில் இருந்தார். ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்ததால் பெரியாரிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றினார். வர்க்க விடுதலையின் மீதும் ஆர்வம் கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பயணித்தார்.

 

மக்கள் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகளையும் என்னுடைய தந்தையிடம் எடுத்து வருவார்கள். அவரும் அதைத் தீர்த்து வைப்பார். நாங்கள் ஐந்து பேர் சகோதர, சகோதரிகள். எங்கள் தந்தை ஒரு விவசாயியாகவும் இருந்தார். சமூகத்துக்காகப் போராடினாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எங்கள் தந்தையின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக காவல்துறை மூலமாக ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய பிறகு பல்வேறு பிரச்சனைகள் வந்தன. பாதுகாப்புக்காக வெடிகுண்டு செய்தபோது அது வெடித்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து கடுமையான ஒடுக்குமுறைகள் வந்தன. யாரும் புகாரளிக்க முன்வராத நிலையில், ஒருவரை வற்புறுத்தி புகார் கொடுக்க வைத்தனர். அதில் எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் சிறை சென்றோம். தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டோம். 

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டோம். அப்போதுதான் தந்தையை மீண்டும் பார்த்தோம். நாங்கள் பிறக்கும் போதே கம்யூனிஸ்டுகளாகப் பிறந்தோம். பொதுவுடைமைச் சிந்தனை எங்களுக்குள் ஊறியிருந்தது. போராளிகள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு குறித்து தொடர்ந்து படித்து வந்தோம். அதனால் எங்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தபோது இயல்பாக ஏற்றுக்கொண்டோம். விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய போராட்டங்களின் போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். என் தந்தை குறித்து நான் எழுதிய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார். திரைத்துறையினரோடும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியை சூரி கைது செய்யப் போகும் காட்சியில் மக்கள் விஜய் சேதுபதிக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு மக்கள் செல்வாக்கினால் என் தந்தைக்கு இருந்தது.

 

அப்பாவுடைய வாழ்க்கையோடு ஓரளவு ஒத்துப்போகும் அளவுக்கு இந்தப் படம் இருந்தது. கமல் நடித்த நாயகன் படமும் அப்பாவின் வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்தும். என் தந்தை ஒரு வெகுஜனப் போராளி. விடுதலை படம் விறுவிறுப்பாகவும், தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்தது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடித்துத் துன்புறுத்துவது தொடர்ந்து நிகழ்ந்தது. சிறைக் கைதிகளுக்கு சரியான உணவு வழங்குவது போன்ற பிரச்சனைகளுக்காக சிறையிலும் என் தந்தை போராடி காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பெரிய ஆளுமையாகவே இருந்தார். அவர் மீது இருந்த மரியாதையால் அவர் பெரிதாகத் தாக்கப்பட்டதில்லை. ஆனால் மற்றவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அப்போது இந்திரா காந்தியும் ஆதரவு கொடுத்தார். போராளிகளுக்கு முகாம் அமைத்து அரசாங்கத்தின் சார்பிலேயே பயிற்சியும் வழங்கப்பட்டது. அடுத்து வந்த ராஜீவ் காந்தி ஒரு தனி மாநிலம் பெற்றுத்தர முயற்சி செய்தார். ஆனால் அதைப் போராளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

இந்திய அரசின் அமைதிப்படை தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் ஒடுக்கியது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் ரயில் விபத்து சம்பவம் நடத்தப்பட்டது. என் தந்தைக்குப் பிறகு கட்சியைக் கட்டி எழுப்பிய தமிழரசன் தான் அந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தினார். பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை எதையும் செய்யக்கூடாது என்று என் தந்தை அறிவுறுத்தினார். வங்கிக் கொள்ளையிலும் ரயில் விபத்திலும் என் தந்தைக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கலைஞர், எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் என் தந்தையின் பெரும்பாலான செயல்பாடுகள் இருந்தன. அனைத்து ஆட்சிகளிலுமே ஒடுக்குமுறைகளும் இருந்தன. விடுதலை படத்தில் என் தந்தையின் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 5 செண்ட் நிலம் வழங்கப்பட்டது.

 

அறுவடை இயக்கம், சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் என்று எண்ணிலடங்கா வெகுஜனப் போராட்டங்களில் என் தந்தை ஈடுபட்டிருக்கிறார். விடுதலை படத்தின் இயக்குநர் என்னை சந்தித்து சில தகவல்களைப் பெற்றிருந்தால் படத்தை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்கிற வருத்தம் இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் நல்ல முறையிலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். என் தந்தையின் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி ஒரு சிறந்த தேர்வு.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கல்ஃப் நாட்டில் வேலை பார்ப்பவர்கள் பற்றிய கதை குறித்து மனம் திறந்த வெற்றிமாறன்

 

vetrimaaran about vada chennai 2, vaadivaasal, vijay movie

 

திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். பின்பு அவரிடம் வட சென்னை 2, விடுதலை 2 என அவரது அடுத்த படங்களின் அப்டேட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

 

அதற்குப் பதிலளித்த அவர் வட சென்னை 2 பற்றிப் பேசுகையில், "வடசென்னை 2 கண்டிப்பா வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் வேறொரு 2 கமிட்மென்ட் இருக்கிறது. அதை முடித்தவுடன் வடசென்னை 2 தொடங்கும்" என்றார்.

 

விடுதலை 2 மற்றும் இப்படம் அமைந்தது குறித்துப் பேசிய அவர், "அசுரன் சமயத்திலே சூரியுடன் தான் அடுத்த படம் எடுப்பதாக முடிவு செய்துவிட்டேன். இது குறித்து அவரிடமும் பேசிவிட்டேன். அஜ்னபி என்ற ஒரு நாவல், இங்கயிருந்து போய் கல்ஃப் நாட்டில் வேலை பார்க்கிறவர்கள் பற்றிய வாழ்க்கை கதை. அதை படமாக்கத்தான் முயற்சி செய்தேன். பின்பு லொகேஷனும் பார்த்து முடித்துவிட்டேன். அதன் பிறகு லாக்டவுன் வந்ததால் தொடர முடியவில்லை. அதன்பிறகு வேறொரு ஸ்க்ரிப்ட் பண்ணேன். அதுவும் தொடங்க முடியவில்லை. இதையடுத்து ஜெயமோகனின் கைதிகள் என்ற கதையை படித்து அதை படம் எடுக்க ஆசைப்பட்டேன். அதற்கான பணிகளை ஆரம்பித்த போதுதான் புத்தகத்துக்கான உரிமத்தை வேறொரு நபருக்கு ஜெயமோகன் கொடுத்துவிட்டார் என்பது தெரியவந்தது. அதுதான் ரத்தசாட்சி என்ற தலைப்பில் வெளியானது. இதன்பிறகு தான் துணைவன் கதையை தழுவி விடுதலை படத்தை தொடங்கினேன்" என்றார். 


 

 

Next Story

“அண்ணாவையும் படிக்க வேண்டும்” - இயக்குநர் வெற்றிமாறன் 

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

"Anna should be read too" - Director Vetrimaran

 

நடிகர் விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று (17ம் தேதி) தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.  

 

இந்த கல்வி விருது விழாவில் பேசிய அவர், “உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி நீங்க படிக்க வேண்டும். சமீப காலமாக எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்திருக்கு. முடிந்த வரைக்கும் படியுங்கள். எல்லா தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜர் படிங்க. நல்ல நல்ல விஷயங்களை தெரிஞ்சுக்கங்க” என்று பேசினார். மேலும், “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதில் வரும் அழகான வசனம், 'காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூபாய் இருந்தா புடிங்கிடுவாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பட வசனத்தையும் பேசி படிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

 

இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “சினிமாவில் நாம் சொல்லும் ஒரு விஷயம், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவரை அது சென்றடையும்போதும் அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதின் எடுத்துக்காட்டாகத் தான் பார்க்கிறேன். நாம் நமது வரலாற்றை தெரிந்துகொள்ள அம்பேத்கர், பெரியார், காமராஜருடன், அண்ணாவையும் படிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்