Skip to main content

“கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது..” தொல்லியல் துறையில் மீண்டுமொரு புதிய கண்டுப்பிடிப்பு 

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology


சிவகங்கையை அடுத்த சோழபுரம் குண்டாங்கண்மாயில் அடையாளம் காண முடியாத உருவம் பொறித்த கல் ஒன்று இருப்பதாக சுத்தானந்த பாரதி பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் ஆறுமுகம், சிவகங்கை தொல்நடைக் குழு  நிறுவனருக்குத் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து  அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலர் நரசிம்மன், ஆசிரியர் ஆரோக்கிய சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா கூறியதாவது, “சோழபுரம் கிழக்கு குடியிருப்பை ஒட்டிய குண்டங்கண்மாய் உள்வாய் கடைப் பகுதியில் 16, 17ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் ஒன்று அடையாளங்காணப் பெற்றுள்ளது. மதுரையில் விஜய நகரப் பேரரசுக்குப் பின் ஆட்சிக்கு வந்த நாயக்கர், மதுரையைச் சுற்றியுள்ள பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தினர். சக்கந்திப் பாளையத்தில் அடங்கிய பகுதியாக சோழபுரம் இருந்திருக்கலாம்.

 

வாமன உருவம்:

வாமன அவதாரம் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகும். மாவலி சக்கரவர்த்தியின் கர்வம் அடக்க மூன்றடி உயரம் கொண்ட ஏழை அந்தனராகச் சென்று, தன் காலடியில் மூன்றடி நிலம் கேட்டு உலகை அளந்த இவ்வாமன உருவம், நிலம் தொடர்பான ஆவணங்களில் அரசர் காலத்தில் பொறிக்கப்பெற்றுள்ளது. இங்கு காணப்பெறும் வாமன உருவம் ஒரு கையில் விரித்த குடை, தலையில் குடுமி, மார்பில் முப்புரி நூல், இடுப்பில் பஞ்சகச்சம் ஆகியவற்றோடும் மற்றொரு கையில் கெண்டியில்லாமல் ஊன்றுகோலுடனும் காணப்படுகிறது.

 

கல்தூண்:

நான்கரை அடி உயரமுள்ள நான்கு பக்கங்களைக் கொண்ட கல்தூண் ஒன்று செங்குத்தாக நடப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கம் வாமன உருவம் புடைப்புச் சிற்பமாக காட்டப் பெற்றுள்ளது. மற்றொரு பக்கத்தில் கல்வெட்டு 30 வரிகள் எழுதப்பெற்றுள்ளன. அவை மிகவும் சிதைந்த நிலையில் காணப்பெறுகின்றன.

 

Cholapuram is famous for its stone and soil history. ”Another new discovery in the field of archaeology

 

கல்வெட்டு செய்தி:

ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு கல்வெட்டு தொடங்குகிறது. அதன் பின் சகாப்த ஆண்டு குறிக்கப்பெற்றுள்ளது. அது மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. காத்தம நாயக்கர் எனும் பெயர் தெரிகிறது. இவர் அக்காலத்திய அரச பிரதிநிதியாக இருந்திருக்கலாம். அக்கல்வெட்டில்  மதுனா, ஆலங்குளம், குண்டேந்தல், குத்திக்குளம், பெருமாளக்குளம், கோரத்தி கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இடையில் பத்து வரிகளுக்கு மேல் பொருள் கொள்ளமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளன. இறுதியாக, ‘இதற்கு கேடு விளைவிப்பவர் யாராகிலும் கங்கைக்கரையிலே காரம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போகக் கடவதாவது’ என முடிகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டோ அல்லது தானம் தொடர்பான காரணத்தினாலோ குளம் கண்மாய்கள் அளவிடப்பட்டு வெளிப்படுத்தும் விதமாக வாமன உருவத்தோடு இக்கல்வெட்டு அமைக்கப்பெற்றிருக்கலாம். இக்கல்வெட்டு குறித்து மேலும் தகவல் தேடும்போது இக்கல்வெட்டு வாசிக்க முடியாத நிலையில் உள்ளதாக ஆங்கிலேயர் காலத்தில் 1882இல் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

 

வாமனக்கல்லும் நாயக்கர் கல்வெட்டும்:

கொல்லங்குடி வீரமுத்துப்பட்டியை அடுத்த சிறுசெங்குளிப்பட்டி வயல் பகுதியில் கிடைத்த திருமலை காத்த சேதுபதி காளையார் கோவில் காளீசுவரருக்கு பிரம தேயமாக வழங்கிய கல்வெட்டு வாமன உருவத்தோடு அமைக்கப்பெற்றிருந்ததும், சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் திருவாழிச் சின்னத்துடன் வண்டியூர் பெருமாளுக்குத் தானமாக வழங்கப்பெற்ற நாயக்கர் கால கல்வெட்டும் முன்னர் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

சோழபுரம்:

சோழபுரம் எனும் பெயரில் பல இடங்களில் ஊர்கள் அமைந்துள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர், சோழர் காலத்தில் தோன்றியதாகவும், அதனாலேயே இப்பெயரில் வழங்கிவருவதாகவும், இங்குள்ள சிவன் கோவில் சோழர்களால் தோற்றுவிக்கப்பெற்றதாகவும் மக்களால் நம்மப்படுகிறது. இங்கு ஒட்டை மண்டபம் என்று மக்களால் வழங்கப்பெறும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திய சிவன் கோவில் மிகவும் இடிந்த நிலையில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பெற்றுள்ளன.

 

சோழபுரம் கோட்டை:

சோழபுரத்தில் ஊருக்கு மேற்குப் புறத்தில் செங்கல் கட்டுமானத்துடன் கூடிய மண்கோட்டை ஒன்று இருந்து அழிந்து போயுள்ளது. அங்கு காவல் தெய்வமான முனீசுவரர், இன்றும் கோட்டை முனிசுவரராக மக்களால் வணங்கப்படுகிறார். மேலும், கோட்டைப் பகுதியில் திருவாழிச் சின்னத்துடன் திரிசூலம் பொறிக்கப் பெற்ற கல் ஒன்று கண்டெடுக்கப்பெற்று, மக்களின் வழிபாட்டில் உள்ளது.

 

ஆயுதக்கிடங்கு:

கோட்டையாகக் கருதப்படும் இடத்தின் நடுப்பகுதியில் சிதைவுறாமல் இருக்கும் சின்ன அறை போன்ற வடிவம் ஆயுதக் கிடங்காக இருந்திருக்கலாம். கல்லும் மண்ணும் வரலாறு பேசி சோழபுரத்தின் புகழை நிலைநாட்டி நிற்கிறது. நாயக்கர் கால வாமனக் கல்வெட்டு கிடைத்திருப்பதில் சிவகங்கை தொல் நடைக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

 

 

Next Story

பாஜக தேர்தல் அறிக்கை; ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நேற்று (14.04.2024) வெளியிட்டார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பாஜக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசுகையில், “எல்லா ஊர்களுக்கும் குழாய் மூலம் தண்ணீரே சென்று சேராத நிலையில், குழாய் மூலம் எரிவாயு எப்படிக் கொண்டு செல்ல முடியும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதாக பாஜக அளித்துள்ள வாக்குறுதி மிகப்பெரிய வேடிக்கையான செயல் ஆகும். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டதாக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு ஆகும். அதாவது 4 கோடி வீடுகளை கட்டி இருந்தால் 52 ஆயிரம் வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பாஜக அரசு கட்டிக்கொடுத்த 52 ஆயிரம் வீடுகளைக் காட்ட முடியுமா?. 

 BJP Election Manifesto; P. Chidambaram barrage of questions

நாடாளுமன்றத்தில் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றி இருந்தாலும் அந்த சட்டம் இப்போதைக்கு அமலுக்கு வராது. பெண்களுக்கான 33 சதவித இட ஒதுக்கீட்டை வேண்டுமென்றே பாஜக ஒத்திப் போட்டுள்ளது. அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற பாஜக வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரயிலுக்கு ரூ. 1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பாஜக அரசு, போதிய ரயில் விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது ஏற்கெனவே உள்ள ஒன்றுதான். பழைய பல்லவிகளைப் பாடுவது புதிய சிந்தனை அல்ல. பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. நாட்டில் 5% பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பாஜக தேர்தல் அறிக்கையில் மக்களை ஏமாற்றும் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார். 

Next Story

காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Amit Shah's road show suddenly canceled in Karaikudi

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (12.04.2024) தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அமித்ஷாவின் பயணத்திட்டத்தின் படி நாளை சிவகங்கை மற்றும் மதுரையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (13.04.2024) கன்னியாகுமரியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதனையடுத்து அன்று மாலை நாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் தென்காசியில் நடைபெறும் வாகனப் பேரணியில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நாளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்.

இதன்படி சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் அமித்ஷா நாளை ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்த உள்ளார் என பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதும், சென்னையில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடத்திய ரோடு ஷோவுக்கு போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் எழுந்தது கவனிக்கத்தக்கது.