Skip to main content

இருவிரல் பரிசோதனை; ஆளுநரின் கருத்தும் உண்மை நிலவரமும்!!

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

Chidhambaram child marriage issue

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்கு முன்பும் பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகள் வயதில் மூத்த ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரம். இதுபோன்ற கொடுமைகள் மதம், பண்பாடு, கலாச்சாரம், புனிதம், கற்பு, பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

 

இந்தக் கொடுமைகளைத் தடுக்க 1891-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் சட்ட முன்வடிவாக முன்வைக்கப்பட்டு 1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டு 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்ணுக்கு 14 வயதும் ஆணுக்கு 18 வயதும் பூர்த்தியான பின்பு திருமணம் செய்து வைக்கவேண்டும் என இந்தச் சட்டம் கூறியது. (தற்போது இது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 என உள்ளது).

 

இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி பாலகங்காதர திலகர் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். திலகரின் சீடராக இருந்த வ.உ.சிதம்பரனார் இந்த சட்டத்தை வரவேற்றார். எதிர்ப்புகள் இருந்தபோதும் குழந்தை திருமணத்தை அப்போதே சட்டம் இயற்றி தடை செய்துள்ளனர்.

 

Chidhambaram child marriage issue

 

இப்படி சட்டம் தடை செய்யும் குழந்தை திருமணத்தை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது தீட்சிதர்களாக உள்ளவர்களும் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள்தான். அவர்களின் குழந்தைகளுக்கும் குழந்தை திருமணத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குழந்தை திருமணம் நடத்த பத்திரிகை அடிக்கப்பட்டதை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சாமிநாதன் பேட்டியுடன் நக்கீரன் பிரசுரித்தது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற குழந்தை திருமணங்களையும் அதைத் தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களின் போராட்டத்தையும் நக்கீரன் இதழும் இணையமும் பதிவு செய்துள்ளன.

 

Chidhambaram child marriage issue

 

சிதம்பரம் நகரத்திலுள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளை அவர்கள் பூப்படைந்தவுடன் 7 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு ஏற்கனவே 2 அல்லது 3 வயதில் தீட்சிதர்களுக்குள்ளே ஒப்பந்தம் செய்து கொண்டவாறு கணவரின் வீடுகளுக்கு மேளதாளம் முழங்க அனுப்பிவிடுவார்கள்.

 

இந்த நிலையில்தான் சமூகநலத் துறையினருக்கு இதுபோன்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வந்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு நான்கு குழந்தை திருமணங்கள் நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த தீட்சிதர்கள் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதற்கு தீட்சிதர்கள் தரப்பு, தாங்கள் தனி சமய மரபினர் என்றும், தங்களின் சமயத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லையெனவும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கீழவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரச்சனையை திசைதிருப்ப நடராஜர் கோயிலை அரசு எடுக்கவே இதுபோன்று செய்வதாகக் கோஷமிட்டு தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Chidhambaram child marriage issue

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியோ சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணமே செய்யவில்லை என்றும், ஆனால் கன்னித்தன்மையைப் பரிசோதிக்க இருவிரல் சோதனை நடைபெற்றது எனவும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இது எடுத்துக்காட்டு என்று கூறினார்.

 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டாண்டுக் காலமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. தற்போது தீட்சிதர்களாக உள்ளவர்களின் குழந்தைகளின் வயதைக் கணக்கிட்டால் குழந்தை திருமணம் நடந்துள்ளதா என்று எளிதில் தெரியும்” என்று கூறினார். மேலும், “சமூகத்தில் குழந்தை திருமண சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் கண்டுகொள்ளாத ஆளுநர், தீட்சிதர்களுக்கு மட்டும் வக்காலத்து வாங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.

 

“இருவிரல் சோதனை அல்ல... சட்டத்திற்கு உட்பட்டே சோதனை நடைபெற்றுள்ளது” என தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆளுநரின் அபாண்டத்துக்குப் பதில் கூறினார்.

 

இந்நிலையில் சிதம்பரம் பகுதியிலுள்ள பா.ஜ.க.வினர் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வருவதை ஆளுநருக்கு ரகசியமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிலிருந்து அவர் வாய் திறக்கவில்லை. இதன்பின்பே மாணவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகையில், அவர் குழந்தை திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை என்றபோதும் அவருக்குப் பக்கபலமாக இருந்தார் என்றும், அதனால் அவருக்கு உலகத்தையே எதிர்க்கும் திறனை மனைவி அளித்தார் என்றும் பேசியுள்ளார். 

 

இந்த நிலையில் புதன்கிழமை தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொள்ள சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இவர்கள் நடராஜர் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தை மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அப்போது பரிசோதனை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய உறுப்பினர் ஆனந்த், “நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது” என்று தெரிவித்தார். 

 


 

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தியா நிலைகுலைந்து போனது” - நிர்மலா சீதாராமன்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Nirmala Sitharaman said It was under Congress rule that India became unstable

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன்.  தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5  கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.

விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான்  யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு  ரூ.1025  கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம்  ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.

சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி

மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால்  அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.