Skip to main content

"அமைச்சர் மகன் வாகனத்தை ஏற்றுகிறார்... பாஜக முதல்வர் கட்டையால் அடிக்க சொல்கிறார்.." - வெடிக்கும் செல்லத்துரை!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

hhj


மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏற்றியதில் இதுவரை ஒன்பது  பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக விசிக மத்தியச் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்லத்துரையிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உ.பி-யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த பாஜக நபர்கள் அமர்ந்திருந்த கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்  அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

இது அரச பயங்கரவாதமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மாநிலத்தை நடத்த தகுதியற்ற முதல்வராக யோகி ஆதித்யநாத்தை நான் பார்க்கிறேன். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக எப்போதும் இருந்ததில்லை என்பது தற்போது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போராட்டம் 10 மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம். குறிப்பாக வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை மத்திய அரசு நினைத்திருந்தால் எப்போதே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை. 

 

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக கருதுகிறேன். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அங்கே வருவதாக தெரிந்துகொண்ட விவசாயிகள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு அவருக்கு எதிராக விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கு வாகனத்தில் வந்த அவரது மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றியுள்ளார்கள். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் அமைச்சரின் மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை. மாநில முதல்வரும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை. 

 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் சிலர் அந்த காரின் மீது கல் எறிந்ததால், ஓட்டுநர் நிலைதடுமாறி வாகனத்தை ஓட்டினார் என்று சொல்லப்படுவதை பற்றி? 

 

போராட்டம் என்பது ஜனநாயகப்பூர்வமானது, அந்த வண்டியில் இருந்தவர் மத்திய அமைச்சரின் மகன், யாரோ ஒருவர் கார் ஏற்றி செல்லவில்லை. கார் எரிக்கப்பட்டுள்ளது. வண்டியை ஓட்டியது யார் என்ற கேள்வி வருகிறது. தவறு இழைத்தவர்களை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் இதுவரை செய்யவில்லை. குறைந்த பட்சம் மாநில முதல்வர் அங்கே சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த பக்கம் கூட அவர் செல்லவில்லை. சமூக வலைதளங்களில் உங்களை கழுவி ஊற்றுகிறார்கள். மோடியே பதவி விலகு என்று டிரெண்ட் செய்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு மக்கள் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை அவர்கள் அவமானமாக நினைக்க மாட்டேன் என்கிறார்கள். முதலில் மோடி வாய் திறந்து பேச வேண்டும். 

 

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெல்லியில் இருந்து லக்னோ வந்து லக்கிம்பூர் அருகே சென்றடைந்த நிலையில் அவர் தங்கிருந்த வீட்டில் அவர் சிறை வைக்கப்படுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை அரசியல் கட்சியை சேர்ந்தர்கள் சந்திப்பது வாடிக்கையான நிகழ்வு தானே? அவரை எதற்காக கைது செய்ய வேண்டும், வீட்டு சிறையில் வைக்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆளும் அரசாங்கம் சரியான முறையில் அணுகவில்லை என்பது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அவர் போய் பார்ப்பதில் உ.பி அரசுக்கு என்ன வந்துவிடப் போகிறது. அடுத்த நாள் முலாயம் சிங் வருகிறார், சத்தீஷ்கர் முதல்வர் வருகிறார், யாரையும் சந்திக்க அனுமதிக்க முடியாது என்கிறீர்கள், உங்களுக்கு மடியிலே கணம் இருப்பதால்தான் அவர்களுக்கு தடை விதிக்கிறீர்கள். 

 

உடனடியாக கலவரம் நடந்தால் மாநில அரசை விசாரணை செய்யத்தானே சொல்ல வேண்டும், நீங்கள் ராஜினாமா செய்ய சொல்லலாமா? என்று கேட்கிறீர்கள். உங்கள் கேள்வியில் நியாயம் இருப்பாதகவே எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ஹரியானா முதல்வர் பாஜக விவசாயிகள் அணி கூட்டத்தில் பேசுகிறார், " நீங்களும் அணி திரளுங்கள், போராடும் விவசாயிகளுக்கு எதிராக நில்லுங்கள், முடிந்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டையால் அடியுங்கள்" என்கிறார். இதை எப்படி பார்ப்பது. இவர்கள் இந்த விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இந்த நாட்டில் இருக்கும் மீதி விவசாயிகளையும் இவர்கள் கொல்லத்தான் பார்ப்பார்கள். அவர்களிடம் இருந்து நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.  


 

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.