Skip to main content

பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறை மற்றும் திசையைக் குறிப்பிடும் 100 வருட பித்தளைத்தகடு

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

brass plate discovered in sriperumbudur temple

 

இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், கோயில் சன்னதி முன்பாக பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறையைத் தெரிவிக்கும் பித்தளைத் தகடு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.

 

இந்த  நூறு வருடப் பழமையான செப்புத்தகடு பற்றியும் அதன் விபரங்கள் பற்றியும் தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது, "திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் கொடிமரத்தின் வலது புறத்திற்கு சற்றுத்தள்ளி பிரகாரத்தில் பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறை மற்றும் திசையை குறிப்பிடும் வண்ணம் ஒரு பித்தளைத் தகடு பதிக்கப்பட்டுள்ளது. இத்தகட்டில் ஆண் மற்றும் பெண் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வரைபடம் வரையப்பட்டுள்ளது. இதில் ஆண் உருவம் இடது புறமும், பெண் உருவம் வலது  புறமும்  உள்ளது. ஆண் உருவத்திற்கும் பெண் உருவத்திற்கும்  இடையில் தமிழில் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.

 

விழுப்புரம் தாலுகா எளயாண்டப்பட்டு ஒடையவர் சொர்ணசூபிவிமான கையிங்கிரியம் 22.8.1912 என்றும், ஆண் உருவத்திற்கு கீழே அய்யா சாமிபிள்ளை என்றும், பெண் உருவத்திற்கு கீழே கோகிலாம்மாளம்மா என்று எழுதப்பட்டுள்ளது. இதே கோயிலில் ராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதியின் முன்னும் அந்த தகட்டில் இருப்பதை போல் தரையில் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ள விழுந்து வணங்கும் ஆண், பெண் உருவங்களும் அதன் விபரமும் எழுதப்பட்டுள்ளது. ஆண் உருவம் வலது புறமும் பெண் உருவம் இடது புறமும்  உள்ளது. இதில் முதல் மூன்று வரிகள் சிதைந்துள்ளது. அதனால் ஆண்டு குறித்து அறிய இயலவில்லை. இந்த ஆண், பெண் உருவங்களுக்கு மத்தியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 23 தேய்ந்த மண்டபதள வரிசை கயிங் கர்யதாஸன்னா கிசெட்டி றாமசாமி னாயுடு அவர் பார்யாள்னாகவல்லி அம்மா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

 

brass plate discovered in sriperumbudur temple

 

"இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பது அவசியமாகும். மக்கள் அதன் மீது தொடர்ந்து நடப்பதால் அதிலுள்ள எழுத்துகள் அழிந்து வருகின்றன. இதனால் விபரங்கள் வாசிக்க இயலாமலேயே போய்விடக்கூடும். இவ்வாறான பகுதிகளை அரசு தனிக் கவனம் செலுத்தி  பாதுகாக்க  வேண்டும்" என்று தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் தெரிவித்தார். 

 

 

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Next Story

“தொல்லியல் துறை, அரசியல் துறையல்ல...” - மத்திய அரசுக்கு கலை இலக்கிய பெருமன்றம் கண்டனம்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

Council of Arts and Literature condemns the central government

 

மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு தொல்லியல் அதிகாரி அமர்நாத்தை தீடிரென இடமாற்றம் செய்துள்ளது அதை உடனடியாக ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை வைத்துள்ள தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இது சம்பந்தமாக கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளர் மருத்துவர் த. அறம், தலைவர் எஸ்.கே. கங்கா, பொருளாளர் ப.பா.ரமணி ஆகியோர் விடுத்துள்ள கூட்ட அறிக்கையை பொதுச்செயலாளர் த. அறம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. “மத்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல ஆலயப் பாதுகாப்பு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பதவிக்காலம் முடியும் முன்பே டெல்லிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பொதுவாக தொல்லியல் துறையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பணியிட இட மாறுதல் செய்யப்படும். ஆனால், இரண்டு ஆண்டுகள் முடியும் முன்பே அமர்நாத் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஏனெனில், இந்த அதிரடி இட மாற்றத்திற்கான எந்தக் காரணத்தையும் தொல்லியல் துறை தெரிவிக்கவில்லை. 

 

2015ல் மத்தியத் தொல்லியல் துறையின் தென் மண்டல அகழாய்வுப் பிரிவுக் கண்காணிப்பாளராக இருந்தபோது அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வுக்கான அனுமதியை வழங்கினார். இந்தக் கீழடி ஆய்வு இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை உலகமே நன்கறியும். இந்த ஆய்வின் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அற்புதமான நகர நாகரிகம் கீழடியில் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்ற பேருண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

 

மத்திய தொல்லியல் துறையில் ஒரு அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது, அது நிறைவுறும் முன்பே, அதன் பொறுப்பு அதிகாரியை மாற்றுவது மரபு இல்லை. இந்த மரபை மீறி, கீழடி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காரணத்தாலேயே, அந்த அகழ்வாய்வுப் பணி நடந்து கொண்டிருக்கும் போதே, அவசரகதியில் அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பதும், கீழடி ஆய்வுப் பணிகள் முடக்கப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மை.  பல்வேறு போராட்டங்களுக்குப் பின்தான் மீண்டும் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன என்பதும், கீழடி ஆய்வு அறிக்கை நீதிமன்ற உத்தரவின் பிறகே வெளியிடப்பட்டது என்பதும் நாம் அறிந்ததே. எனவே கீழடி ஆய்வில் ஒன்றிய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

 

2021 அக்டோபரில் சென்னையில் உள்ள மத்தியத் தொல்லியல் துறையின் ஆலயப் பாதுகாப்புக் கண்காணிப்பாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் கீழடி அகழ்வாய்வு குறித்த அறிக்கையைத் தயாரித்து மத்தியத் தொல்லியல் துறைக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கினார். வழக்கம் போலவே மத்தியத் தொல்லியல் துறை அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சிலைகள், கட்டிடக்கலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து உண்மையான வரலாற்றை வெளியிடும் வகையில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் அமர்நாத் கோரி இருந்தார். 

 

தமிழக இந்து சமய அறநிலைத்துறை இம்மாதம் 6 ஆம் தேதி பல்வேறு நிபந்தனைகளுடன் பிராதனக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் பணிக்கு அனுமதி அளித்தது. இவ்வாறு கீழடி ஆய்விலும், தமிழ்நாட்டு கோவில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த அதிகாரியான அமர்நாத் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் உள்நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. ஓர் அறிவியல் துறையாகச் செயல்பட வேண்டிய தொல்லியல் துறையில் ஒன்றிய அரசின் தூண்டுதலால், மத்தியத் தொல்லியல் துறையும் அரசியல் உள்நோக்கத்தோடு அமர்நாத்தை இடமாற்றம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

 

எனவே பதவிக்கால முடியும் முன்பே அநீதியாக செய்யப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை மத்தியத் தொல்லியல் துறை  உடனடியாகத் திரும்பப் பெற்று மீண்டும் அதே பணியிடத்தில் அவரைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது. மேலும் தொல்லியல் துறை ஓர் அறிவியல் துறை என்பதைக் கருத்தில் கொண்டு, அத்துறை நடவடிக்கைகளில் மூக்கை நுழைத்து அரசியல் பண்ணும் போக்கினை ஒன்றிய பாஜக மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.