Skip to main content

கட்சியில் சேர்ந்தவுடனேயே அண்ணாமலைக்கு உயரிய பொறுப்பு ஏன்? நாராயணன் திருப்பதி பேட்டி

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

Narayanan Thirupathy

 

 

பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நக்கீரன் இணையதளத்திடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 

 

பணமதிப்பிழப்பு, தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கை, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாக பயன்படுத்தியது என நாட்டின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறாரே... 

 

ராகுல்காந்தி இப்படி விமர்சனம் செய்வது ஒன்றும் வியப்பில்லை. ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியது ராகுல்காந்திதான். ஊரடங்கை அமல்படுத்திய உடனேயே ஏன் ஊரடங்கை அமல்படுத்தினீர்கள் என்று கேட்டதும் ராகுல்காந்திதான். ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மிக தகுந்த முறையில் இதுவரை நாங்கள் கூறியிருக்கிறோம். பொருளாதார சீர்திருத்தம் மிகச் சிறப்பான முறையில் எதிர்கால சந்ததியினருக்காக, அடுத்த தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்ட விஷயங்கள் அக்கட்சியினருக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை. 

 

மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி. பகிர்வு தமிழகத்திற்கு வரவில்லை என்கிறார்களே...

ஜி.எஸ்.டி. பகிர்வை மத்திய அரசு எப்போதும் முறையாக கொடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது முடங்கி கிடக்கும் காரணத்தினால் அகில இந்திய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இழப்பீடு வழங்க முடியாது என்பதினால் நிதி நிலையை சரி செய்து கொள்வதற்கு கடன் பெறுமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. 

 

ஜிஎஸ்டியினால் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் கடன் பெறுவது உள்ளிட்ட மாநிலங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது முழு துரோகம் எனத் தெரிவித்துள்ளாரே ப.சிதம்பரம்...

 

இதை சொல்பவர்கள் வேறு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் வரி வருவாயை சீராக விதித்து அதன் மூலமாக வரும் வருவாயை வைத்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து, அதன் பிறகு மத்திய அரசினுடைய நிதி திட்டங்களுக்கு மாநிலங்கள் மூலமாகவே பணம் அளிப்பதுதான் முறை. மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் மாநிலங்களுக்குத்தான் செலவிடப்படுகிறது. தற்போது வருவாயே இல்லாத நிலையில் எப்படி செலவிட முடியும். இன்று வருவாய் இல்லாத நிலையில் நீங்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் என்ன தவறு இருக்கிறது.

 

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சிரமத்தை கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே... 

 

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதியும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலேயும் கட்டணம் வருடா வருடம் விலை உயரும். இதற்கு காரணம், மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்தான். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி இருந்தபோது அரசே என்பது சதவீத சாலைகளை போட்டது. அதன்பிறகு வந்த காங்கிரஸ் அரசு, தனியாரிடம் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அதற்கான தொகையை 20 வருடம், 25 வருடத்தில் எடுத்துக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டது. அவர்கள் போட்ட ஒப்பந்தத்தின்படிதான் இன்று நடக்கிறது. கட்டண உயர்வு என்று யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அன்று இந்த ஒப்பந்தங்களை வாரி வழங்கியவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்புகிறார்கள். 

 

கரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்திவைக்க வேண்டும். மேலும் இக்காலத்திற்கான வட்டித்தொகையினையும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறதே... 

 

இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி இரண்டு வருடங்கள் வரை கொடுக்கலாம் என்று விதிகளில் இருப்பதாக சொல்லியிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக வங்கி இயக்குநர்களிடம் விரைவில் பேச இருக்கிறார். உறுதியாக இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படும். 

 

பல வருடங்களாக கட்சியில் இருப்பவர்களுக்கு, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உயரிய பொறுப்புகள் கிடைக்கவில்லை. கட்சியில் சேர்ந்த உடனேயே அண்ணாமலைக்கு துணை தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே... 

 

இது முழுக்க முழுக்க எங்கள் கட்சி சார்ந்த விவகாரம். அண்ணாமலை நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார். தமிழகத்தில் 40 விழுக்காடுக்கு மேல் எங்கள் கட்சியில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்துவதற்கு அவர் ஒரு சரியான நபராக இருப்பார் என்பதால் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கள் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பணிகள் இருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 

 

 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.