Skip to main content

உத்தரப்பிரதேசத்தில் வரலாறு படைத்த பா.ஜ.க! 

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

BJP makes history in Uttar Pradesh!

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (10/03/2022) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய கட்சிகளை வீழ்த்திய ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. கட்சித் தொடங்கிய குறுகிய காலத்தில் டெல்லியைத் தொடர்ந்து, இரண்டாவது மாநிலமாக பஞ்சாப்பில் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 262 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 136 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும், மற்ற கட்சிகள், சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இதனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைப்பது உறுதியாகிவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், கடந்த 1985- ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே கட்சித் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை ஆகும். ஆட்சி அமைக்க 202 தொகுதிகள் தேவை என்ற நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி 250- க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

BJP makes history in Uttar Pradesh!

கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த  உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் 384 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த நிலையில், பா.ஜ.க. இம்முறை அதிக தொகுதிகளை இழக்கக்கூடும் என்ற போதிலும், அக்கட்சி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்வது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 2017- ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலேயே, தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க.வுக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை வாரி வழங்கினர்.


பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருந்த சமாஜ்வாதி கட்சி, கடந்த தேர்தலை விட இம்முறை அதிக இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது. 2017- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 311 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சுமார் 125 தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று வரும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 2017- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இம்முறை அதற்கும் குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BJP makes history in Uttar Pradesh!



கடந்த தேர்தலில் 110 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு, இம்முறை அதே எண்ணிக்கையிலான தொகுதிகளோ அல்லது அதை விட குறைவாகவோ தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

 

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.