Skip to main content

பொன்னாரை சீண்டிய அண்ணாமலை; உரசலில் தகிக்கும் பா.ஜ.க.!

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

BJP Inter politics between pon radhakrishnan and annamalai

 

பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை மீது அவரது கட்சியினரே கடும் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, கட்சியின் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், அண்ணாமலைக்கு எதிராக வரிந்துகட்டி நிற்கிறார்கள். காரணம், பொன்.ராதாகிருஷ்ணன் பற்றி அவர் வைத்த விமர்சனம்தானாம்.

 

அண்மையில் கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை, "துணிவு பட இயக்குநர் வினோத், அவர் எடுத்த படத்தை அவரே பார்க்கமாட்டார். அவர் கையில் இருப்பதே சாதாரண செல்போன் தான். இப்படி ஒரு மனிதரை நினைக்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது'' என்று இயக்குநர் வினோத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை, அடுத்து ‘துணிவு’, ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான ஒருமணி நேரத்தில் 10 லட்சம் 15 லட்சம் பேர்னு பாக்குறாங்க.

 

அதே நேரத்தில் 9 முறை தேர்தலில் போட்டியிட்ட நம் பொன். ராதாகிருஷ்ணன், ‘ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் தொடர்ந்து பலமணி நேரம் பேசினாலும் அதை யாரும் கேட்கமாட்டேங்குறாங்க’ என்றார் நக்கலாக. இதைக் கேட்டதும், மேடையில் இருந்த பொன்.ராதாகிருஷ்ணனின் முகம் இறுக்கமாக மாறியது.

 

BJP Inter politics between pon radhakrishnan and annamalai

 

அண்ணாமலையின் இந்த குதர்க்கப் பேச்சு, பொன்னாருக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மறுநாள் அண்ணாமலை கலந்துகொண்ட அருமனை பொங்கல் விழாவை பொன்.ராதாகிருஷ்ணன் புறக்கணித்து தனது எதிர்ப்பைக் காட்டினார்.

 

நம்மிடம் மனம் திறந்த ஒரு பா.ஜ.க, நிர்வாகி “சமீப காலமாக பொன்னார் அண்ணாச்சிக்கும், அண்ணாமலைக்கும் இடையே நல்லுறவு இல்லை. சீனியரான பொன்னாரிடம் அண்ணாமலை எதையும் ஆலோசிப்பதே இல்லை. குறிப்பாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிலரை கட்சியின் துணை அமைப்புகளின் மாநில நிர்வாகிகளாக அண்ணாமலை நியமித்திருக்கிறார். இதுபற்றி கூட அவர் கலந்து பேசவில்லை. கமலாலயம் சென்றாலும் அண்ணாச்சிக்கு அவர் மரியாதை கொடுப்பதில்லை'' என்றார்.

 

அண்ணாமலை ஆதரவாளர்களோ, "அண்ணாமலை, பொதுவாக சினிமாவுக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் பிரச்சாரத்துக்கு இல்லைன்னுதான் சொல்ல வந்தார். ஆனால் அதை பொன்னார் தப்பாகப் புரிந்துகொண்டார். சரி, அதற்காக ஒரு மாநில தலைவர் கலந்துகொள்ளும் பொங்கல் நிகழ்ச்சியை பொன்னார் புறக்கணிக்கலாமா? அது மட்டுமா? சமீபத்தில், அண்ணாமலை நியமித்த பா.ஜ.க. மாநில மீனவர் பிரிவுச் செயலாளர் சகாயம், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் சதீஷ்ராஜன், மாநில ஊடகப் பிரிவு செயலாளர் திருக்கடல் உதயம் ஆகியோரை, பொன்னாரின் ஆதரவாளர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களை அழைக்காமல் புறக்கணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பிறகு எப்படி பொன்னார், அண்ணாமலையிடம் மரியாதையை எதிர் பார்க்கிறார்?” என்கிறார்கள் காரமாகவே.

 

அண்ணாமலைக்கும் பொன்னாருக்கும் இடையிலான உரசல் தமிழக பா.ஜ.க.வில் பெரும் தகிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

Next Story

“சுயமரியாதை தான் முக்கியம்” - பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
BJP MLA says Self-respect is important and he Resigned his position in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீதி அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும், தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அதிக பெரும்பான்மையாக 156 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இதில் ஒரு முறை சுயேட்சையாகவும், இரண்டு முறை பா.ஜ.க சார்பில் வதோதரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏ கேதன் இனாம்தார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

இது குறித்து கேதன் இனாம்தார் கூறுகையில், “எனக்கு எந்தவித அழுத்தமும் தரவில்லை. நீண்ட காலமாக, சிறியவர்கள், முதியோர்கள் மற்றும் கட்சியில் நீண்டகாலமாக தொடர்புள்ளவர்களை கட்சி கவனிப்பதில்லை என்பதை உணர்ந்தேன். இது குறித்து நான் தலைமைக்கு தெரிவித்துள்ளேன். நான் 11 ஆண்டுகளுக்கு மேலாக சவ்லி தொகுதியை பிரதிநிதிப்படுத்தியுள்ளேன். பாஜகவின் தீவிர உறுப்பினரானதில் இருந்து, கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் 2020ல் நான் சொன்னது போல் சுயமரியாதையை விட பெரியது எதுவுமில்லை. இது என்னுடைய குரல் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சித் தொண்டர்களின் குரல். மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிக்கக் கூடாது என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். நமது மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ரஞ்சன் பட் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக உழைப்பேன். ஆனால் இந்த ராஜினாமா எனது ஆழ்மனதின் விளைவு” என்று கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில், கேதன் இனாம்தார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்பியபோது, கட்சி அதை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், மீண்டும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற கேதன் இனாம்தார், அதன் பின்னர் பா.ஜ.கவில் இணைந்து 2017 மற்றும் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பாஜக ரோட் ஷோவில் பள்ளி மாணவர்கள்; நடவடிக்கை எடுக்க உத்தரவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
School students at BJP road show; Order to take action

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில், கோவை சாய்பாபா காலனியில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பாஜக பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.