Skip to main content

பா.ஜ.க பெண் நிர்வாகிக்கு ஆபாச அர்ச்சனை; கொலை மிரட்டல் - அம்பலமாகும் அண்ணாமலையின் இரட்டை வேடம்

Published on 22/11/2022 | Edited on 24/11/2022

  - தெ.சு.கவுதமன்

 

BJP for female executive...  threats... Annamalai's double role exposed!

 

பா.ஜ.க.வின் திருச்சி சூர்யா இன்னொரு பா.ஜ.க. பெண் நிர்வாகியை மிகவும் ஆபாசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரிக்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

 

2018ஆம் ஆண்டில் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையை வைத்து பாஜக தலைவர்கள் அரசியல் செய்யத் தொடங்கினார்கள். தாசி என்று வைரமுத்து குறிப்பிட்டதை வேசி என்று திரித்துப்பேசி, ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் போன்ற பாஜக தலைவர்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டிவிட்டனர். தனது கருத்து திரிக்கப்பட்ட போதிலும் அதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். எனினும், அதை வைத்து போராட்டத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்த பாஜக, ஆண்டாள் மீது பக்தியுள்ள பெண்களையெல்லாம் வீதியிலிறக்கி வைரமுத்துவுக்கு எதிராகப் போராட வைத்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர், நான் சோடா பாட்டில் தூக்கி வீசவும் தயங்கமாட்டேன் என்று பேசினார்.

 

n

 

ஹெச்.ராஜா, வைரமுத்துவின் குடும்பப் பெண்களுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசினார். நயினார் நாகேந்திரனோ வைரமுத்துவுக்கு எதிராக ஆவேசமாக, “வைரமுத்துவின் நாக்கை அறுத்தால் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்” என்றும், “இந்து மதத்தைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும்” என்றும் கொலை மிரட்டலோடு பேசினார். இத்தகைய பேச்சுக்கள் அனைத்தையும் பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆன்மீக அரசியலென்ற போர்வையில் இந்துக்கள் மத்தியில் கலவர உணர்வைத் தூண்டும் நோக்குடனேயே பேசினார்கள். இன்றுவரை பதுங்கி வாழும் நித்தியானந்தாவின் பிடியிலிருக்கும் பெண்கள் கூட்டமும் வைரமுத்துவை மோசமாக வசைபாடத் தவறவில்லை. இப்படிப் பேசிப்பேசியே ஆண்டாளை அவமதித்துவிட்டார் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க முயன்றனர். நீதிமன்றங்கள் பலவற்றில் வைரமுத்துவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. தன் மீது தொடரப்பட்ட வழக்குகளுக்குத் தடைகோரியும், தனது பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூறியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் வைரமுத்து பேசியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்ற கருத்தை வெளியிட்டது.

 

வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் ஆண்டாள் என்ற பெண்ணை கவிஞர் வைரமுத்து இழிவாகப் பேசிவிட்டார் என்ற கருத்தைப் பரப்பியே நடத்தப்பட்டன. இதே பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா, கனிமொழி தொடங்கி குஷ்பு வரை பல பெண்களை இழிவாகப் பேசியபோது அவர்மீது பா.ஜ.க. தலைமை நடவடிக்கை எடுக்கவேயில்லை. அதேபோல, பா.ஜ.க.வின் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிக மோசமாக எழுதியபோது அவரைக் கைது செய்யும்படி நீதிமன்றமே சொன்னபோதும் அவரை பா.ஜ.க. பாதுகாத்தது. அதேவேளை, சமீபத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் நடிகை குஷ்புவை இழிவுபடுத்தும்படி பேசியதற்கு பா.ஜ.க. தரப்பில் கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பிலிருந்து அவர்மீது வழக்குப் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுத்தபோதும்  அந்த விவகாரத்தை விடாமல் பெண்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

 

bjp

 

தற்போது பா.ஜ.க. கட்சிக்குள்ளேயே அதன் நிர்வாகிகளுக்குள்ளேயே மிகமோசமான வாக்குவாதம் நடந்து அதன் ஆடியோ வைரலாகியுள்ளது. பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருக்கும் திருச்சி சூர்யா, தி.மு.க.வின் திருச்சி சிவாவுக்கு எதிராகக் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார். அவர் பா.ஜ.க.விற்குள் வந்ததிலிருந்தே சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருக்கிறார். ஏற்கெனவே வள்ளலாருக்குத் தமிழக அரசு விழா எடுத்தபோது வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இல்லாமல் இருப்பதாகத் தமிழக முதல்வரை அவர் விமர்சித்தபோது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழிபட்ட வள்ளலார் உருவிலும் திருநீறு இல்லாதது சுட்டிக்காட்டப்பட, ஏதேதோ சொல்லி மழுப்பினார். இவர்தான் சமீபத்தில் பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவர் டெய்சி சரணுக்கு போன் போட்டு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவரை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். அந்த ஆடியோ லீக்கான விவகாரம் குறித்து ஏற்கெனவே நமது நக்கீரனில் வீடியோ வெளியிட்டிருந்தோம்.

 

அந்த வீடியோவில் திருச்சி சூர்யா, அந்தப் பெண் நிர்வாகியை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் தாக்கிப் பேசுகிறார். அந்தப் பெண் நிர்வாகி எவ்வளவு கேட்டுக்கொண்டும் அவரது நடத்தை குறித்தும் அவர் பா.ஜ.க.வில் பதவி பெற்றது குறித்தும் இழிவுபடுத்துவதோடு, பா.ஜ.க.வின் கேசவ விநாயகம் குறித்தும் மிகவும் மோசமாகப் பேசுகிறார். டெய்சியை அறுத்து விடுவேனென்றும், கொன்று விடுவேனென்றும், டெய்சி கொல்லப்பட்டால் அதற்குத் தான் தான் பொறுப்பென்றும் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார். அவருக்கு டெய்சியும் பதிலுக்கு சூர்யாவின் குடும்பத்தைப் பற்றி இழிவாகப் பேசியிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்துமே ஆடியோவாக வெளியேற சமூக வலைத்தளங்களில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி பலரும் பதிவிட்டனர். அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர். பா.ஜ.க. நிர்வாகியான காயத்ரி ரகுராம், ஏற்கெனவே அண்ணாமலை மீது முட்டல் மோதலிலிருந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை இல்லையா என்று கேள்வியெழுப்பியிருந்தார். இதையடுத்து, பிரச்சனைக்குரியவர்களை விட்டுவிட்டுக் கேள்வியெழுப்பிய காயத்ரி ரகுராமின் பதவிகளை அடுத்த 6 மாத காலத்துக்குப் பறித்துவிட்டார் அண்ணாமலை.

 

ஆடியோ விவகாரத்தில் பெண் நிர்வாகிக்கு எதிராக சூர்யாவின் மோசமான கொலை மிரட்டல் பேச்சுக்கள் அப்பட்டமாகத் தெரிந்தும்கூட அவர்மீது காவல்துறையில் புகாரளிக்காத முன்னாள் காவல்துறை அதிகாரியான அண்ணாமலை, விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகக் கமிட்டி அமைப்பதாகவும், ஒரு வாரக் காலத்தில் விசாரணை முடிவு வந்ததும் அதன்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆக, தனது கட்சிக்காரர் என்ற ஒரே காரணத்துக்காகப் படுமோசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுத்த திருச்சி சூர்யா மீது மேலோட்டமாக நடவடிக்கை எடுத்து இரட்டை வேடமிடுவதாக அண்ணாமலை மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நடிகைகள் கஸ்தூரி, குஷ்பு, கௌதமி உள்ளிட்ட யாருமே கருத்து சொல்லாமல் மவுனமாக இருப்பதும் சமூக வலைத்தளத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

மவுனம் கலைப்பார்களா?

 


                                                                                                                                                                                                                               

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்