Skip to main content

"விஜயபாஸ்கரை போல் ஒரு உத்தமர் உலகில் இல்லை... ஊழல் என்றால் என்ன என்பதே அவருக்கு தெரியாது.." - பெங்களூர் புகழேந்தி

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

l;

 

வடகிழக்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தமிழ்நாடு இன்னும் முழுவதும் மீளாத நிலையில், பல்வேறு அரசியல் சர்ச்சைகள் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளன. தனித்தனி அறிக்கைகள், தனியாகப் பேட்டி என அதிமுக ஒருங்கிணைப்பளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட்ட நிலையில், நேற்றுமுதல் (16.11.2021) இருவரும் ஒன்றாக மழை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வது, நிவாரணம் வழங்குவது என அவர்களின் செயல்பாடுகளில் புதுவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான கேள்விகளை நாம் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

 

இந்த மழை வெள்ளத்தில் கூட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக செயல்படுகிறார்கள். நிவாரணம் வழங்குவது கூட ஆளுக்கு ஒரு இடத்தில் வழங்குகிறார்கள். இவர்கள் எப்படி கட்சியை ஒன்றாக வழிநடத்த முடியும் என்று சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு கூறியிருந்தீர்கள். ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்களை இருவரும் ஒன்றாகப் பார்வையிட்டதோடு, இருவரும் இணைந்தே நிவாரணம் வழங்கினார்கள். இதுதொடர்பாக பேசிய பன்னீர்செல்வமும், எங்களுக்குள் எந்தப் பிரிவும் இல்லை, ஒன்றாகவே செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். சென்னையில் மழை பாதிப்பு பல்வேறு இடங்களில் இருந்தாலும் பன்னீர்செல்வத்தால் பல இடங்களுக்குச் சென்று பாதிப்புகளைப் பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனென்றால் மாவட்டச் செயலாளர்கள் அவருக்கு சென்னையில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்களை இபிஎஸ் தன்வசப்படுத்தியுள்ளார். பன்னீர்செல்வத்தால் வேளச்சேரி வேண்டுமானால் செல்ல முடியும். அங்குதான் அசோக் இருக்கிறார். மற்ற இடங்களுக்கு அவரால் செல்ல இயலாது. இதற்கும் நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட நிலையில், பன்னீர்செல்வம் புதுவீட்டில் பால் காய்ச்ச வேண்டி இருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நான் கூட அப்போது ஒரு பேட்டியில் கூறியிருந்தேன், ‘என்னப்பா 24 மணி நேரமுமா ஒரு தலைவர் பால் காய்ச்சுகிறார்’ என்று கேட்டிருந்தேன். இவர்களுக்குள் ஒற்றுமை இல்லை, அதை இவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். 

 

இவ்வளவு நாட்களாக தனித்தனியாக அறிக்கை வெளியிட்டவர்கள், தனித்தனியாக பார்வையிட்டவர்கள் தற்போது ஒரே இரவில் ஒன்றாக வருகிறார்கள், நிவாரணம் வழங்குகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் அரசியல் காரணம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? 

 

முன்பே கூறியபடி சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் இருவரும் வந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற மனநிலையில் இருக்கும்போது அவர்கள் அங்கே செல்கிறார்கள். இவர்கள் டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளுக்காக என்னென்னவோ செய்ததாக கூறினார்கள். ஆனால் அங்கே இவர்கள் வெற்றிபெற்றார்களா? திருச்சயில் ஆரம்பித்து, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 34 தொகுதிகளில் இவர்கள் வெறும் 4 தொகுதியில் வெற்றிபெற்றார்கள். இதுதான் இவர்கள் விவசாயிகளுக்கு செய்த நலத்திட்டங்களின் மூலம் கிடைத்த வெற்றியா? அதுவும் வெற்றிபெற்ற அந்த நான்கு பேரும் யார் என்று பார்க்க வேண்டும். நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வெற்றிபெற்றுள்ளார். 

 

அவர் ஒன்றும் பெரிய ஊழல் செய்துவிடவில்லை. அரசி, சக்கரை என சில பொருட்களில் 5 அல்லது 10 ரூபாய் மார்க்கெட் விலையைவிட கூடுதலாக கொள்முதல் செய்து விற்கப்பட்டுள்ளது. அவர் வெயிட்டான அமைச்சர் என்பதால் வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்தது. அடுத்து ஓ.எஸ். மணியன். மக்களால் கல்லைக் கொண்டு எறிந்து ஓடவிடப்பட்ட அவர், இன்றைக்கு வெற்றிப்பெற்றுள்ளார். அடுத்து ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். அவர் கூட கடந்த தேர்தலில் தோல்வியடைந்ததால் வெற்றிபெற்றார் என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்து விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றுள்ளார். அவர் போன்ற ஒரு நல்ல மனிதரை இந்திய அரசியல் வரலாற்றில் பார்க்க முடியாது. ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மனிதர் அவர். வேலை மாற்றம், மருத்துவ பொருட்கள் வாங்குதல் என எதிலும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத. அப்படி என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர். அவரும் அங்கே வெற்றிபெற்றுள்ளார். டெல்டாவில் உள்ள 34 இடங்களில் 30 இடங்களை இவர்கள் தலைமையில் பறிகொடுத்துள்ளனர். அதிமுக தோல்விக்கு இது மிக முக்கிய காரணமாக இருந்தது. 

 

நீங்கள் இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாகப் போகிறார்கள், நிவாரணம் வழங்குகிறார்கள் என்று ஆச்சரியமாக சொல்கிறீர்கள். ஆனால் இவர்கள் எப்படி செல்கிறார்கள், பிரச்சார வாகனங்களில் ஆறுதல் சொல்ல போகிறார்கள். நிவாரணம் வழங்க இவர்கள் செல்கிறார்களா அல்லது ஓட்டு கேட்க செல்கிறார்களா என்று தெரியாத வண்ணம் இவர்கள் நடவடிக்கைகள் இருக்கிறது. மழையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவனவன் தண்ணீரில் மிதந்து செல்கிறார்கள். ஆனால், இவர்கள் எவ்வித பொறுப்பும் இல்லாமல் ஜாலியாக பிரச்சார வாகனத்தில் செல்கிறார்கள். ஏன் உங்கள் கால்கள் சேற்றில் படாதா? அன்றைக்கு காமராஜ் வண்டி ஓட்டும்போது எடப்பாடி பழனிசாமி ஜாலியாக உட்கார்ந்திருந்தார். விஜயபாஸ்கர் மாட்டு வண்டி ஓட்டியபோது எடப்பாடி பழனிசாமி ராஜா மாதிரி அமர்ந்திருந்தார். இப்போது என்ன கேடு, அதே மாதிரியே செல்ல வேண்டியதுதானே, இவர்கள் யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை, கட்சி மீதும் பற்று இல்லை. இவர்களுக்கு மக்கள் விரைவில் பதிலளிப்பார்கள். 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.