Skip to main content

பாபர் மசூதியா..? ராமர் கோவிலா..? அயோத்தி கடந்து வந்த அரசியல் வரலாறு...

Published on 08/11/2019 | Edited on 09/11/2019

பாபர் மசூதியா..? ராமர் கோவிலா..? 

நீண்ட நெடிய சட்ட போராட்டங்கள், கலவரங்கள், ஆயிரக்கணக்கான உயிர் பலிகள் என அனைத்தையும் கடந்து, இன்று தனது விடையின் மிக அருகாமையில் பயணித்து கொண்டிருக்கிறது இந்த கேள்வி. கடந்த சில நாட்களாக, நாடு முழுவதும் பாதுகாப்பு பணிக்காக போலீசார், கலவரங்களை தடுக்க பாதுகாப்பு படையினர், நாட்டின் முக்கிய இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் என மத்திய அரசையும், மாநில அரசுகளையும் பம்பரமாக வேலை செய்ய வைத்துள்ளது இந்த கேள்வியின் கடைசிகட்ட பயணம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த அயோத்தி நிலப்பிரச்சனை கடந்து வந்த வரலாறு என்பது மிகப்பெரியது எனலாம்.

 

ayodhya case verdicts and history about ram mandir and babri masjid

 

 

16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி அமைந்திருக்கும் இடம் ராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்து மக்களின் ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. 1527  -லேயே மசூதி கட்டப்பட்டாலும், அப்பகுதியை இந்து மக்களும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர் என்று குறிப்பிடுகிறார் அக்காலகட்டத்தில் வாழ்ந்த வில்லியம் பின்ச் என்கிற ஆங்கிலேய வணிகர். அதன்பிறகு 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டாம் ஜெய் சிங் அயோத்தி பகுதியை ஆண்டபோதும், மசூதியின் அருகிலேயே ராமருக்கு சிலை வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 

இப்படி இரு சமூக மக்களும் அப்பகுதியில் தத்தம் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டில் மெல்ல மாறத் தொடங்கியதாக கூறப்படுகிறது. 1853 ஆம் ஆண்டு அயோத்தி பகுதியில் இந்து மற்றும் இஸ்லாமியர்கள் இடையே முதல் கலவரம் நடந்ததாக பதிவு செய்யட்டுள்ளது. அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத இந்த சண்டை, சில காலம் கழித்தே ஆங்கில அதிகாரிகளின் கவனத்தை பெறத் தொடங்கியது என கருதலாம். இதனையடுத்து 1859 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு அரணை ஏற்படுத்திய ஆங்கிலேய அரசு, இஸ்லாமிய மக்கள் வழிபடவும், இந்து மக்கள் வழிபடவும் தனித்தனி பகுதிகளை ஒதுக்கியது. ஆங்கிலேயரின் இந்த திட்டம், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் வரை சரியாகவும், அமைதியான முறையிலும் பின்பற்றப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்ற அடுத்த இரண்டாவது ஆண்டே அயோத்தி மீண்டும் 1853 போன்று மீண்டுமொரு பதட்டத்தை சந்திக்க நேரிட்டது.  

 

babri masjid

 

1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் கொண்டு வைக்கப்பட்டது. இதன் விளைவாக அப்பகுதி முழுவதும் மதரீதியிலான பிளவுகள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தன. இந்த விவகாரத்தால் மேலும் சிக்கல் எழாமல் இருப்பதற்காக அப்பகுதிக்கு பூட்டு போட்டது அன்றைய அரசு. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்து அமைப்புகள் சார்பிலும், இஸ்லாமிய அமைப்புகள் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நீதிமன்ற வழக்குகள் மேலோட்டமான ஒரு குறுகிய கால அமைதியை இந்த விவகாரத்தில் கொண்டுவந்தாலும். அதன் அடியாழத்தில் சிக்கல்கள் வளர்ந்துகொண்டேதான் இருந்தன. 

இப்படிப்பட்ட மேலோட்டமான அமைதி நிலவிய ஒரு சூழலில், அந்த அமைதியை அசைத்து பார்த்தது ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு. 1986 ஆம் ஆண்டு, அலஹாபாத் மாவட்ட நீதிமன்றம் ஒன்று இந்த விவகாரத்தில் அளித்த தீர்ப்பில், மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்துக்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, இரு சமூகத்திற்கு இடையே அடியாழத்தில் வளர்ந்துகொண்டிருந்த அமைதியின்மையை மீண்டும் வெளியே தலைதூக்க வைத்தது. மசூதியை இடித்து விட்டு அங்கு ராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங்பரிவார் அமைப்புகள் முழங்கின. மசூதி தங்களுக்கு வேண்டுமென இஸ்லாமிய அமைப்புகள் எதிர் முழக்கங்கள் எழுப்பின. 

 

ayodhya case verdicts and history about ram mandir and babri masjid

 

விஸ்வ இந்து பரிஷத் போன்ற நேரடி சங்பரிவார் அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கின. ஒருபுறம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு 1989 நவம்பர் மாதம், மசூதிக்கு அருகாமையில் கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்திய அதேநேரம், நாடு முழுவதும் ராமர் கோவிலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அத்வானி ரதயாத்திரையை மேற்கொண்டார். கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருந்த இந்த காலகட்டத்தில்தான் பாபர் மசூதி இடிப்பு நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தியது. 

டிசம்பர் 6, 1992 அன்று இந்து அமைப்புகளின் கரசேவகர்கள் ஆயிரக்கணக்கானோர் பாபர் மசூதி முன்னிலையில் கூடினர்.  அப்போது ஏற்பட்ட கலவரத்தில் மசூதி இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கலவரங்களில் உயிரிழந்தனர். மும்பையில் 700 பேர், கோத்ரா ரயில் எரிப்பில் 58 பேர் என கலவரங்களும், மரணங்களும் தொடர்கதையானது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பான விசாரணையை லிபரான் விசாரணை ஆணையமும், நிலம் தொடர்பான வழக்கை அலகாபாத் நீதிமன்றமும் விசாரித்தன. 1993 ல் இந்த நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. 

 

ayodhya case verdicts and history about ram mandir and babri masjid

 

மசூதி இடிப்பு விவகாரத்தை 3 மாதங்களில் விசாரிக்க வேண்டுமென லிபரான் விசாரணை ஆணையதிற்கு ஆணையிடப்பட்ட நிலையில், இந்த விசாரணை சுமார் 17ஆண்டுகள் நடைபெற்றது. 8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, 17 ஆண்டுகாலம் விசாரணை மேற்கொண்டு, இந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மசூதியை இடிப்பதற்கான திட்டத்தில் பாஜகவின் சில முக்கிய தலைவர்கள் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதற்கடுத்து, நில விவகாரத்தில் 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மற்றும் இந்து அமைப்புகளான நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. அலஹாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, அந்த ஆண்டே விஷ்வ இந்து பரிஷத், மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர் சட்ட வாரியம் ஆகிய இரண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனையடுத்து 2011 ல் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

 

ayodhya case verdicts and history about ram mandir and babri masjid

 

இதன்பிறகு வேகமெடுக்காத இந்த வழக்கின் விசாரணை 2019 ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறப்போவதால் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஓய்வுக்கு முன் தீர்ப்பை வழங்குவேன் என கூறிய ரஞ்சன் கோகாய், அதற்காக ஒருபுறம் மத்யஸ்த குழு, இன்னொருபுறம் 40 நாட்கள் தொடர் விசாரணை என வேகம் காட்டினார். இந்த சூழலில் தற்போது இந்த வழக்கு தொடர்பான விசாரணை அனைத்தும் முடிவடைந்து தீர்ப்புக்காக மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

அரசு ஒருபுறம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் கடந்தகால வரலாற்றின் மோசமான அனுபவங்களால் பயம் படர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றனர் எனலாம். குறிப்பாக அயோத்தி மக்கள் தீர்ப்புக்கு முன்னரே, தங்கள் குடும்பங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விசேஷங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியூருக்கு அனுப்பப்படுகிறார்கள், ஆண்கள் சமையல் பொருட்களை வாங்கி சேமித்து வைக்கிறார்கள், இப்படி அயோத்தி உள்ளூர் மக்கள் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த திட்டமிடலை மேற்கொண்டு வருகின்றனர். தீர்ப்பு எவ்வாறு வந்தாலும், அதனை முழுமனதோடு ஏற்று அனைவருமே அமைதியாக செல்ல வேண்டும் என அரசியல் தலைவர்களும், சமூக அமைப்புகளின் தலைவர்களும் கூறி வரும் நிலையில், அவ்வாறு நடந்தால் மகிழ்ச்சியே என்கின்றனர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த திட்டமிடலில் கவலையடைந்துள்ள பொதுமக்கள். 

 

 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story

தேர்தல் பத்திர முறைகேடு; எஸ்.ஐ.டி. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Electoral bond SIT A case in the Supreme Court for investigation

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்றும் கூறப்பட்டது. அந்த தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்த பத்திரங்களை கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக வழங்கலாம். மேலும், அந்த கட்சிகள் 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி இதனை நிதியாக மாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என்று அந்தத் திட்டத்தில் கூறப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி (15.02.2024) தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் தேர்தல் பத்திர முறைகேடுகள் குறித்து சிறப்பு புலானாய்வு குழு (S.I.T. - Special Investigation Team) அமைத்து விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது. பொதுநல வழக்குகள் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், “அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கிய பல நிறுவனஙகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்துள்ளதால் விரிவான விசாரணை தேவை. முக்கிய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை ஊழலுக்கு துணை போயிருக்கின்றன. எனவே இது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.