Skip to main content

"சட்டமன்ற விடுதியிலிருந்து விடைபெறும் போது..." - மு.தமிமுன் அன்சாரி MLA.,

Published on 29/04/2021 | Edited on 29/04/2021
ttttt

 

மறக்க முடியாத பல அனுபவங்களுடன் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து இன்று (28.04.2021) விடைபெறுகிறேன்! 

 

சென்னை புதுக்கல்லூரியில் பயின்றபோது, அந்த மாணவர் விடுதி எனக்கு ஒரு போதி மரமாக இருந்தது, 

 

கல்வி, மார்க்கம், இலக்கியம், அரசியல், போராட்டம் ஆகியவற்றை அந்த பாசறையில் விவாதங்களாக ஆக்கி என்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள அந்த நாட்கள் உதவியது.

 

2016, மே மாதம் நான் சட்டமன்ற உறுப்பினராகி வந்ததும், இந்த விடுதியில் B-கட்டிட தொகுப்பில், 9-மாடியில் D-அறையில் தங்கினேன்.

 

ttttt

 

ஐந்து ஆண்டுகால அனுபவங்களுடன், இன்று எனது உடைமைகளை எடுத்து கொண்டு, சாவியை ஒப்படைத்தபோது ஏதேதோ எண்ண அலைகள் என் மனதில் மோதியது.

 

அங்கு 2-ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை  ஏற்படுத்தி இருந்தேன். அதைக் கலைத்து புத்தகங்களை அட்டைப் பெட்டிகளில்  அடுக்கியபோது, அதுதான் எனது மொத்த உடைமைகளில்  80% சதவீதமாக இருந்தது. 

 

இந்த விடுதி வளாக அறைகளில். என் அறையில் மட்டும்தான் நூலகம்  இயங்கியது. பல கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வருகைதந்து, நூல்களை எடுத்துச் செல்வார்கள்.

 

அங்கு வருகை தரும் மற்ற பலரும் நூல்களை பார்வையிட்டு, அதில் தங்களுக்கு பிடித்தவற்றை படம் எடுத்துக்கொண்டு, அதை வாங்கும் நோக்கில் விபரங்களை குறித்துக் கொள்வார்கள். 

 

இந்த அறைக்கு பல MLA நண்பர்கள் சுலைமானி (பால் கலக்காத இளகிய தேனீர்) அருந்த விரும்பி வருவார்கள். மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்து விட்டு செல்வார்கள்.

 

நண்பர்கள் தனியரசு, கருணாஸ் ஆகியோர் அதிக நேரங்களை செலவிட்டதும் இந்த அறையில்தான். 

 

எத்தனையோ அரசியல், சமூக, இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தொண்டு இயக்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் இங்கு வந்து உரையாடி சென்றிருக்கிறார்கள்.

 

தேசிய, சர்வதேச பிரச்சினைகள், திராவிட இயக்கம், தமிழ் தேசியம், ஃபாசிச அபாயம், சமூக நீதி ஆகியவை குறித்த விவாதங்கள் இங்கு நிறைய  நடந்திருக்கிறது. 

 

பல மக்கள் போராட்டங்கள் தீர்மானிக்கப்பட்டதில் இந்த அறைக்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக காவிரி விவகாரம் பற்றியெறிந்தப்போது, சென்னையில் IPL கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற முற்றுகை போராட்டத்தின் 'கரு' இங்குதான் முடுக்கிவிடப்பட்டது. அது நாட்டையே உலுக்கியதை அனைவரும் அறிவர்.

 

பல அரசாணைகளை வெளியிட வைத்த பத்திரிக்கை அறிக்கைகளும், சட்டமன்ற உரைகளும் இந்த விடுதியில் தான் எழுதப்பட்டது.

 

அதில் ஒன்று, டெல்லியில் உள்ள தமிழ் நாடு இல்லங்களின் பெயரை மாற்றிய தகவல் வந்த அரை மணி நேரத்தில் மூவர் அணி சார்பில் நானும், தனியரசு, கருணாஸ் ஆகியோர் வெளியிட்ட கண்டன அறிக்கையாகும்.

 

அந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்வால் அடுத்த சில மணி நேரங்களில் அந்த பெயர் மாற்றும் முடிவு திரும்ப பெறப்பட்டது.

 

தமிழக அரசியலை உலுக்கிய பல பேட்டிகள் இங்குதான் எடுக்கப்பட்டன. அதனாலேயே இனி விடுதியில் யாரும் பேட்டி அளிக்க கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

ttttt

 

'நீட்' தேர்வுக்கு எதிராக அன்புத் தங்கை அனிதா இந்த அறைக்கு தன் தோழிகளுடன் வந்து, இரத்தத்தால் கையெழுத்திட்ட பதாகையை தந்து கண்ணீருடன் உரையாடியதை மறக்கவே முடியாது. 

 

பல பத்திரிக்கை நண்பர்கள், படைப்பாளிகள், திரைக் கலைஞர்கள், அரசியல் புள்ளிகள், சமுதாய பிரமுகர்கள் இங்கு வந்து உரையாடி , தங்களது பல ஆலோசனைகளை தந்து சென்றிருக்கிறார்கள். 

 

எத்தனையோ விளிம்புநிலை மக்கள், ஆதரவற்றவர்கள், போராடி களைத்து போனவர்கள் உரிமையுடன் இங்கு வந்து  கதவை தட்டி தங்களது கோரிக்கை மனுக்களை கையில் அளித்திருக்கிறார்கள். 

 

மருத்துவமனைக்கு வருபவர்கள், வெளியூர்களில் இருந்து வேலைக்கு நேர்காணல் வருபவர்கள், தூரப் பகுதிகளிலிருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள், வெளிநாடு புறப்பட விமான நிலையம் செல்லும் முன்பு ஓய்வெடுக்க விரும்புபவர்கள் என பலரும் மஜக-வினரின் பரிந்துரையோடு வந்து தங்கி விட்டு சென்றிருக்கிறார்கள்.

 

தொகுதிவாசிகள், மஜக-வினர் மட்டுமின்றி, பலரும் தங்கி பயனடைந்த அன்பின் இல்லமாகவே இது திகழ்ந்தது. 

 

மக்களுக்கு குரல் கொடுக்கும் களப் போராளிகள் இந்த விடுதிக்கு அவ்வளவாக வந்ததில்லை, வர விரும்புவதும் இல்லை, நான் அவர்களை எல்லாம் அழைத்து வந்து இங்கு உரையாடுவது உண்டு. 

 

அவர்களில் கடைசியாக வந்து சென்றவர் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள். கடந்த மார்ச் முதல் வாரத்தில் வந்து எப்படியாவது நீங்களும், தனியரசும் மீண்டும் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அது எங்களை போன்றவர்களுக்கு மகிழ்வளிக்கும் என்று அன்புடன் வலியுறுத்தி சென்றார். அவரது அன்பு மறக்க முடியாதது.

 

மஜக நிர்வாகிகள் அடிக்கடி ஒன்றுகூடும் மையமாகவும், அவர்களின் அரண்மனையாகவும் இது இருந்தது. 

 

சக சட்டமன்ற உறுப்பினர்கள் இது விடுதி அறையா? மணக்கும் விருந்தோம்பல் அறையா? என கேட்டதுண்டு. மதியம் வருகை தரும் எல்லோருக்கும் விருந்துணவு நடைபெறும்.

 

கட்சி சார்பற்று பலரும் கூடி மகிழும் இணக்கமான இடமாகவே இருந்தது.

 

விடியற்காலை பொழுதுகளில் இங்கு நடைபயிற்சி போவது ஒரு சுகம்.

 

காங்கிரஸ் கட்சி MLA நண்பர்கள் ராஜேஷ், பிரின்ஸ், ஊட்டி கணேஷ் மற்றும் தனியரசு என ஒரு 'நடைப்பயிற்சி தோழமை' மறக்க முடியாதது 

ttttt

மாலை நேரங்களில் அங்கு உள்ள பூங்காவில் குயில்களும், பறவைகளும் நடத்தும் இன்னிசை கச்சேரி அலாதியானது. அதற்காகவே அங்கே உட்காரச் சொல்லும்! 

 

நான் 'ஹவுஸ் கமிட்டி' உறுப்பினர் என்பதால், இந்த விடுதி வளாகத்தை அழகுபடுத்தி, தரப்படுத்துவதில் பல திட்டங்கள் போட துணையாயிருந்தேன். அந்த பணிகள் இப்போது துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இனி வருபவர்கள் அதை பயன்படுத்துவார்கள்!

 

ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, இங்கிருந்து புறப்படும் போது அதன் நிர்வாகிகள், பணியாளர்கள், காவலர்கள் என அனைவருக்கும் நன்றி கூறி, ரமலான் நோன்பு கஞ்சியை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

 

இன்று விடை பெறும் போது அவர்கள் அன்பு மிகுதியில் நெகிழ்ந்து விட்டார்கள்! 

 

வாழ்க்கை சுவராஸ்யமானது. அதில் பொது வாழ்வு என்பது வித்தியாசமான அனுபவங்களை தரக்கூடியது.

 

அதில் எந்த நினைவுகளும் மறப்பதில்லை!
பயணங்களும் முடிவதில்லை.

 

 

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.