Skip to main content

தலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா? - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்!  

Published on 02/07/2019 | Edited on 03/07/2019

"மஹன்த் என்ன சாதி"

"பிராமின் சார்"

"ஜாதவ் சார்.. நீங்க தலித் தான?"

"ஆமா சார்"

"அந்த பசங்களும் நீங்களும் அப்ப ஒரே சாதியா?"

"அய்யோ இல்ல சார்.. நான் சமர்.. அவங்க பாசிஸ்.. அவங்கள விட நாங்க கொஞ்சம் மேல"

"சரி... நீங்க?"

"நான் கயாஸ்து சார்"

"நான்?"

"பிராமின் சார்.."

"அப்ப மஹன்த்தும் நானும் ஒரே சாதியா?"

"ச்சே ச்சே.. அவர் கொஞ்சம் உயர்ந்த பிராமின்... நீங்க அவர விட கொஞ்சம் கீழ இருக்குற பிராமின்"

"What the f*** is going on here?"

ஆர்ட்டிகள் 15 படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி இது. மொத்த படத்திற்குமான ஒரு சோற்றுப் பதம் இதுவே. அந்தாதுன் புகழ் ஆயுஷ்மான் குரானா நடித்து, மல்க் படமெடுத்து அனுபவ் சின்ஹா இயக்கியிருக்கும் ஆர்ட்டிகள் 15 சென்ற வாரம் வெளியாகி பெரும் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. தனது கரியரின் துவக்க காலத்திலேயே இப்படி ஒரு படத்தில் நடிக்க முன்வந்த ஆயுஷ்மான் குரானாவுக்கு ஒரு சல்யூட்.

 

ayushman kurana



ஒரு கிராமத்திற்குக் கூடுதல் கமிஷனராக பணியேற்று வருகிறான் அயன். அதே நாளில் வெறும் மூன்று ரூபாய் கூலி உயர்வு கேட்டதற்காக காணாமல் போகிறார்கள் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மூன்று சிறுமிகள். போலீஸ் மிகவும் மெத்தனமாய் அந்த வழக்கை கையாள்வதை அயன் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போன பெண்களில் இருவர், ஊருக்கு நடுவே ஒரு மரத்தில் தூக்கில் மாட்டப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், அவர்கள் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று சொல்கிறது. ஆனால் அந்த ரிப்போர்ட்டை மறைக்க காவல்துறையிலேயே ஒரு சதி நடக்கிறது.

ஆரம்பத்தில் அந்த கிராமத்தின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே வருபவனுக்கு, இந்த வழக்கின் வழியாக விரிகிறது அங்கு  நிலவும் கெட்டித் தட்டிப் போன சாதிப் படிநிலைகளும், அது மக்களின் மேல் செலுத்தும் ஆதிக்கமும் வன்முறையும். இதை உணரும் அயன் அந்த வழக்கில் முழுமையாக ஈடுபட்டு, காணாமல் போன மூன்றாவது பெண்ணை கண்டுபிடிக்கவும் இறந்து போன இரண்டு பெண்களின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தரவும் முற்படுகிறான். சாதியின் அதிகாரநிலைகள் மூலம் அயனின் முயற்சிகளுக்கு வரும் தடைகளும் அதற்கு அயனின் எதிர்வினைகளுமே ஆர்ட்டிகள் 15.

ஆர்ட்டிகள் 15ல் அப்படி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? சுருக்கமாக சொல்வதானால் ஒரு மனிதனுக்கான எந்தவித அடிப்படை உரிமைகளும் சாதி, மதம், இனம், பால், பிறந்த இடம் இவற்றின் அடிப்படையில் மறுக்கப்படக் கூடாது என்பதுதான் ஆர்ட்டிகள் 15. அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் முக்கியமான ஒரு அரசியலமைப்புப் பிரிவு இந்த ஆர்ட்டிகள் 15. தொடர்ந்து பல்வேறு சாதிய, மத வன்முறைகளை இந்தியா சந்தித்து வரும் சூழலில் நாம் கண்டிப்பாக மறுவாசிப்பு செய்தேயாக வேண்டிய ஒரு பிரிவு ஆர்ட்டிகள் 15.

 

ambedkar



இதை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எழுதி எடுத்ததற்கும், அதில் எந்தவித சமரசங்களும், சமரசங்கள் என்றால் வணிக சினிமா சமரசங்களாகிய பாடல் நடனம் மட்டுமல்ல, சமூக/அரசியல் ரீதியான சமரசங்களும் இல்லாமல், வீரியத்துடன் இந்த களத்தை கையாண்டதற்கும் இந்த படைப்பாளிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்தியாவின் சாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து வரும் படங்கள் குறிப்பிட்ட சாதிகளை குறிப்பிடால், பொதுவான ஒரு இடத்தில் நின்று, அவர்கள் இவர்கள் என்று பொதுமைப்படுத்தி பாதுகாப்பாகப் பேசும். ஆனால் ஆர்ட்டிகள் 15, நேரடியாக சாதிகள் மீதான விமர்சனங்களை வைக்கிறது. படம் தலித்துகளை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் பிராமின்கள், பிராமின் கட்சியிடம் விலைபோகும் தலித் தலைவன், தொடர் அடக்குமுறைகளால் வன்முறை பாதையை கையிலெடுக்கும் தலித் தலைவன், ’பிராமின் - தலித் ஒற்றுமை தேவை, அதன் மூலம் இந்துக்கள் ஒற்றுமை வளரும்’ என்று மக்களை திசைமாற்றும் கட்சி என தற்கால இந்திய அரசியல் சமூக சூழலை நினைவுபடுத்தும் காட்சிகளை சமரசமின்றி முன்வைக்கிறது. கட்சியின் பெயர்கள் கூட அவற்றின் சின்னங்கள் மூலம் நேரடியாகவே குறிப்பிடப்படுகின்றன. மக்கள் நம்பியிருக்கும் ஒரு சாதிக் கட்சி, தேர்தல்களின் போது அதற்கு எதிராக பேசிவரும் கட்சியோடு இணைவதும், எத்தனை விதமாக இந்த தாவல்களும் கூட்டணிகளும் நடக்கிறது என்பதும், அதனால் எந்த கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்று மக்கள் குழம்புவதும் ஒரு காட்சியில் சரவெடியாக விளக்கப்பட்டிருக்கிறது.

சாதி எந்தளவுக்கு சமூகத்தில் ஊறியிருக்கிறது என்பதை அயன் அறிந்துகொள்ளும் காட்சிகளும், கிராமம், காவல்நிலையம் என்று அத்தனை மட்டுகளிலும் இருக்கும் சாதிய படிநிலைகளை கண்டு அருவருப்பு கொள்ளும் அயன் காவல் நிலைய நோட்டீஸ் போர்டிலே ஆர்ட்டிகள் 15 ஐ ப்ரிண்ட் எடுத்து ஒட்டிவைப்பதும் மிக நுணுக்கமான காட்சியமைப்புகள். அயனுக்கும் அவன் மனைவிக்குமான சின்ன சின்ன ஃபோன் சம்பாஷனைகளும், அதன் மூலம் சொல்லப்படும் விஷயங்களும் அழகான ஆழமான சித்தரிப்புகள். குறிப்பாக, அரசனை கீழிறக்கிவிட்டால், அடுத்து யாரை அரசனாக்குவது என்று அயன் கேட்பதும், எதற்கு ஒரு அரசன் வேண்டும் என்று அவள் திரும்பிக் கேட்பதும் அட்டகாசம்.

 

 

article 15



பெண்கள் காணாமல் போனதை தொடர்ந்து ஸ்ட்ரைக்கிற்கு செல்லும் தலித்துகளால், போலீஸ் ஸ்டேஷன் சாக்கடை சரிசெய்யப்படாமல் குளம் போல தேங்கி நிற்பதும், சமாதானத்திற்கு பிறகு ஒரு சகமனிதன், அந்த சாக்கடைக்குள் முழுமையாக இறங்கி அதை சுத்தம் செய்வதும் மனதிற்குள் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. சினிமா எனும் காட்சி ஊடகத்தை வீரியத்துடன் பயன்படுத்திய இடமாக இதை சொல்லலாம். படம் முடிந்து நாட்களாகியும் கூட, அந்த காட்சி தந்த அதிர்வு இன்னும் மறையவில்லை.

சாதிய ஆதிக்கத்தை பின்பற்றும் சமூகத்தின் வெவ்வேறு அடுக்கில் உள்ளவர்கள் தேவைக்கேற்ப கைகோர்த்துக் கொள்வதும், அதே தேவைக்கேற்ப ஒன்றையொன்று முதுகில் குத்தத் தயங்காததும் வெகு இயல்பான ஜோடனை. அந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு நடந்தது காட்சியாக விரியவில்லை. ஆனாலும் அது நமக்குள் ஏற்படுத்தும் சலனம் அதிகம். படம் முழுக்க இயக்கம் வெகு நுணுக்கத்துடன் சின்ன அதிர்வுகளை ஏற்படுத்தியபடியே பயணிக்கிறது. இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அந்த அதிர்வை நமக்கும் மிகச்சரியாக கடத்துகின்றன.

பதினைந்து வயதிற்குட்பட்ட தன் பெண் குழந்தையை, ஆதிக்க சாதி வெறியர்கள் இரண்டு மூன்று நாட்கள் அடைத்து வைத்திருந்து, பாலியல் வன்கொடுமை செய்து, கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். அந்த வலியிலும் அந்த தகப்பன்கள் ஆற்றாமையோடு புலம்புவது, ‘எங்கள் பெண்களை பத்து நாட்கள் வைத்திருந்து கூட விட்டிருக்கலாமே.. ஏன் கொன்றார்கள்’ என்பதுதான். சில வருடங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது என்ன இது செயற்கைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றியிருக்கும். ஆனால் இப்போது தினம் தினம் சமூக வலைதளங்களில் வெளியாகும் வன்கொடுமை வீடியோக்கள் இந்த காட்சிகள் கற்பனையானது அல்ல எனும் வலியை நமக்குள் விதைக்கின்றன.

 

article 15



நீதி கேட்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டு போராடவில்லை. ஊடகங்களிடம் சென்று பேசவில்லை. கொல்லாமலாவது விட்டிருக்கலாமே என்று கதறும் இந்த தகப்பன்களைத்தான் காவல்துறை குற்றவாளிகள் என சித்தரித்து உள்ளே அடைக்கிறது. அதுவும் என்ன காரணம் சொல்லி? அந்த இரண்டு பெண்களும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதைப் பார்த்த கோபத்தில் அந்த தகப்பன்கள் செய்த ஆணவக் கொலை இது என வழக்கு எழுதப்படுகிறது. தினம் தினம் இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தில், இதை மறுத்து மறந்து வாழ்பவர்கள்தானே நிஜமான ஆன்ட்டி இந்தியர்கள்?

படத்தின் பெரும் பலமாக பல வசனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் மொத்த படத்திலும் என்னை உலுக்கிய ஒரு வசனம் - நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் இத்தனை வன்கொடுமைகளையும் மறைத்துதான், நம் சினிமாக்களிலும் டிவிக்களிலும் ஒரு சுகமான வாழ்வை காட்டிக்கொண்டிருக்கிறோம், நம்பிக்கொண்டிருக்கிறோம். எத்தனை சத்தியம் புதைந்த வசனம் இது!

துப்புறவாளரின் மகனாக வளர்ந்து போலீஸாகி, ஆதிக்க சாதியினருடன் அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழும் ஒரு தலித், சமூகத்தின் இயல்பே இதுதான் என்று நம்பி சாதியை தக்க வைக்க நினைக்கும் ஒரு போலீஸ், உள்ளுக்குள் எத்தனை வலிகள் இருந்தாலும் ஆதிக்க சாதி அதிகாரிகளிடம் ஒருபோதும் அதை கோபமாக வெளிப்படுத்தாமல் வாழும் காவல்துறை அதிகாரிகள், என்ன பேசி என்ன மாறிவிடப்போகிறது என்று நினைக்கும் ஒருவன் என பலவிதமான பரிமாணங்களுடன் கூடிய கதாப்பாத்திரங்கள் சமூகத்தின் பல அங்கங்களை பிரதிபலிக்கின்றன. அதுவும் இறுதிக்காட்சியில் ‘நீலாம் கடைசி வரைக்கும் கூட்டி பெருக்கிட்டே இருந்துருக்கனும்.. உன்ன எங்களோட ஒன்னா சேர விட்டோம் பாரு’ என்று சொல்லும் ஆதிக்க சாதி அதிகாரியிடம் அந்த தலித் அதிகாரியின் எதிர்வினை... தியேட்டரில் விசில் பறக்கிறது. மனதிற்குள்ளும்.

நாசர் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கு சி.பி.ஐ க்கு மாறுவதும், சி.பி.ஐ அதிகாரி குற்றவாளிகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து படம் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இருண்மையோடு முடியப்போகிறதோ என்கிற சின்ன பயம் எழுகிறது. ஆனால் ஒரு அழகான நம்பிக்கையோடு, வெளிச்சக் கீற்றோடு முடிந்திருப்பது வெகுசிறப்பு. இதுபோன்ற முடிவுகள்தான் இந்த இழிவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையை நமக்களிக்கும்.

 

article 15



படத்தின் மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. படம் விமர்சனம் செய்த நபர்கள் படத்தை தடை செய்யச் சொல்லிக் கூட கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை விட்டுவிடுவோம். ஆனால் சில விமர்சனங்கள் படத்தின் கருத்தியலைப் பற்றி, அரசியலைப் பற்றி கேள்வியெழுப்புகின்றன. அதில் பிரதானமானது, தலித்துகளை சாதிக் கொடுமைகளில் இருந்து காப்பாற்றக் கூட ஒரு பிராமின்தான் வரவேண்டுமா, அந்த இடத்தில் ஏன் ஒரு தலித்தை வைத்திருந்திருக்கக் கூடாது எனும் கேள்வி. அந்த ஆபத்பாந்தவன் கூட பிராமினாக இருப்பதே ஒரு சாதியப் பார்வைதானே என்பது அவர்கள் வைக்கும் வாதம்.

நாயகன் அயன் பிராமினாக சித்தரிக்கப்பட்டிருப்பதனால் இந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு படத்தின் இயக்குனர் அனுபவ் சின்ஹா அருமையான ஒரு பதிலை கொடுத்திருக்கிறார். ‘The privileged should challenge privilege’ - அதாவது சாதியின் இந்த அனுகூலங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களே அதை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அனுபவ் சின்ஹா.

மேலும், தலித்துகள் மிகவும் தாழ்த்தப்பட்டு, சமூகத்தின் பல அடுக்குகளினாலும் கொடுமைக்கும் ஆளாக்கப்படும் ஒரு ஊரில், ஒரு தலித் அப்படிப்பட்ட உயர் பதவிக்கு வந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது முற்றிலும் வேறான ஒரு படம். முற்றிலும் வேறான ஒரு களம். முதலில் அங்கு அந்தப் பதவிக்கு அப்படிப்பட்ட ஒருவன் வந்திருக்க முடியுமா, வந்திருந்தாலும் கூட அவன் உத்தரவுகள் மதிக்கப்பட்டிருக்குமா என்பதே கேள்விக்குறிதான். அவன் காவல்துறையில் இருக்கும் சாதிய படிநிலைகளை சமாளிப்பதிலேயேதான் முழு கதையும் சென்றிருக்கும்.

வெளிநாட்டில் படித்த, இந்தியாவின் எந்த ஏற்றத்தாழ்வுகளும் தெரியாமல் வளர்ந்த ஒரு பிராமின், இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திற்கு செல்வதும், அங்கு நடக்கும் சம்பவங்களின் மூலம் அசல் இந்தியாவை கண்டுகொள்வதும், அதற்கெதிராக கேள்வியெழுப்பி எதிர்வினை புரிவதும், அதில் அவனுக்கு வரும் தடைகளும்தான் ஆர்ட்டிகள் 15ன் பேசுபொருள். படிநிலைகளின் உச்சத்தில் இருக்கும் ஒரு பிராமினே கூட இந்த சாதிப் படிநிலைகளை எதிர்க்கும்போது எப்படி ஓரங்கட்டப்படுகிறான் என்பது கூட ஒருவித அரசியல்தானே? தனிமனிதனின் சாதியைத் தாண்டி, ஒட்டுமொத்தமாக இந்த அமைப்பின் இருப்புதான் இங்கே பிரதானம் என்பதும், அதை காப்பதற்கு தன்னில் இருந்தே ஒருவனை பலிகொடுக்கக் கூட அது தயங்காது என்பதையும் பேசியிருக்கிறது ஆர்ட்டிகள் 15.

ஒருவனின் சாதியை வைத்து, அவன் தலித் என்று அவனை ஒதுக்குவது எவ்வளவு தவறோ, அதேயளவு தவறு, அவன் சாதியை வைத்து, நீ பிராமின் என்று அவனை ஒதுக்குவது. எதிர்க்கப்பட வேண்டியது சித்தாங்கள்தானே தவிர தனிமனிதர்கள் அல்லர். சாதியால் அடக்குமுறைக்கு ஆளாகி, ஆனால் சமூக அரசியல் லாபங்களுக்காக ஆதிக்க சாதியினருடன் கூட்டு சேர்ந்தால் தாழ்த்தப்பட்டவனாய் இருந்தாலும் அவன் சமூக எதிரிதான். பிறப்பால் ஆதிக்க சாதியாக இருந்தாலும், சமூக ஏற்றத்தாழ்வுகளை தட்டிக்கேட்டு அதை களைய கை கொடுக்கிறான் என்றால், பிராமினாய் இருந்தாலும் அவன் நம் தோழனே. பெரியார் சொல்லிக் கொடுத்த பகுத்தறிவு இதுதானே?

அதன்படி பார்த்தால், தற்கால சூழலில் மிக அவசியமான, அத்தியாவசியமான, நாம் பெருமை கொள்ளத்தகுந்த  நேர்மையான ஒரு படைப்பு ஆர்ட்டிகள் 15. இந்திய சினிமா அசல் பிரச்சினைகளை பேச ஆரம்பித்திருக்கிறது. கைதட்டி வரவேற்போம்.

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவத் தேவை நிறைவேறியதா? - ‘நாடு’ விமர்சனம்!

 

naadu movie review

 

நம் நாடு இத்தனை ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சிகள் பெற்ற நிலையிலும் இன்னமும் பல்வேறு மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் இன்றளவும் நிலவத்தான் செய்கிறது. மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு மலைக் கிராமத்தில் உள்ள மக்கள் சின்ன சின்ன உடல் நலக் கோளாறுகளுக்கு கூட சரியான மருத்துவம் கிடைக்காமல் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள் என்பதை நாடு படம் மூலம் நம் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் ‘எங்கேயும் எப்போதும்’ படப் புகழ் இயக்குநர் சரவணன். சில படங்களால் சருக்கல்களைச் சந்தித்த இயக்குநர் சரவணன் நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

பழங்குடி மக்கள் அதிகம் வாழும் கொல்லிமலையில் அமைந்துள்ள தேவநாடு என்ற கிராமத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பணிபுரிய எந்த டாக்டரும் முன் வரவில்லை. அப்படியே அவர்கள் வந்தாலும் உடனடியாக டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றனர். அடிப்படை வசதிகள் கொஞ்சம் கூட இல்லாத அந்த மலை கிராமத்தில் எந்த மருத்துவரும் சேவை செய்ய முன்வராத காரணத்தினால், பிரச்சனை கலெக்டர் அருள் தாஸ் வரை சென்று விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் முயற்சியில் தானே இதற்கு முழு பொறுப்பு ஏற்று தன் மகளான டாக்டர் மகிமா நம்பியாரை அந்த கிராமத்திற்கு மருத்துவம் பார்க்க அனுப்புகிறார் கலெக்டர் அருள் தாஸ்.

 

அந்த கிராமத்துக்கு வரும் டாக்டர் மகிமா நம்பியாரை நல்லபடியாக கவனித்துக் கொண்டு அவருக்கு போதுமான வசதிகளை ஊர் மக்கள் செய்து கொடுத்து மகிமாவை அந்த ஊரை விட்டு செல்லவிடாமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது என ஊர் மக்களிடம் கலெக்டர் தெரிவிக்க, நாயகன் தர்ஷன் உள்ளிட்ட ஊர் மக்கள் மருத்துவர் மகிமாவை அந்த கிராமத்திலேயே எப்படியாவது தங்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் எடுக்கும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, இல்லையா? மகிமா இந்த ஊரிலேயே இருந்து மருத்துவம் பார்த்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

 

எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு நீண்ட நாட்களாக அதுபோல் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் முயற்சியில் பல்வேறு சருக்கல்களை சந்தித்த இயக்குநர் சரவணன், தற்பொழுது நாடு படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறார். மலைக் கிராமம் மலைவாழ் மக்களின் வாழ்வியல், அவர்களுக்குள் இருக்கும் ஏக்கம், இன்பம், சோகம், விசுவாசம் என அந்த கிராம மக்களின் வலி வேதனைகளை அப்படியே கண்முன் நிறுத்தி அதை அழுத்தமாகவும் ஆழமாகவும் நெகிழ்ச்சியாக ரசிக்கும்படி கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார். இது ஒரு சிறிய கதையாக இருந்தாலும் இதற்கான திரைக்கதையை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தி அதையும் ரசிக்கும்படி கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

 

படத்தில் பல இடங்களில் மனதை கணக்க செய்து கண்கலங்க வைக்கும் காட்சிகள் இருந்தாலும் அதனுடன் கலகலப்பான சில பல காட்சிகளையும் வைத்து கலகலப்பாகவும், கலங்கடித்தும் கதையை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு புதுமையான சிறிய கதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட கிளிஷேவான காட்சிகள் எங்கும் இல்லாமல் பார்த்துக்கொண்டு குறிப்பாக நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் நாம் எதிர்பார்க்கும்படி இல்லாமல் ஒவ்வொரு காட்சியும் பிரஷ்ஷாக இருக்கும்படி பார்த்துக்கொண்டு படத்தை கரை சேர்த்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டில் இன்னமும் இப்படியான கிராமங்கள் நம் நாட்டில் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அங்கு நடக்கும் அவலங்களையும் பாரபட்சம் இன்றி காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். 

 

பிக் பாஸ் புகழ் நாயகன் தர்ஷன் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதற்கான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பும், அமைதியான வசன உச்சரிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த ஸ்பேசில் எந்த ஒரு இடத்திலும் தேவையில்லாத நடிப்பை வெளிப்படுத்தாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். நாயகி மகிமா நம்பியார் வழக்கமான நாயகியாக இல்லாமல் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை சரியாக செய்து எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நிறைவாக செய்து தானும் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

முக்கியமாக படத்தில் காதல் காட்சிகள் இல்லாதது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. ஊர் தலைவராக வரும் சிங்கம் புலி சில இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைக்கிறார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அதை சரிவர செய்து ரசிக்க வைத்துள்ளார். கலெக்டராக வரும் அருள்தாஸ் இந்த படத்தில் நல்ல அரசு அதிகாரியாக நடித்திருக்கிறார். பொதுவாக வில்லன் வேடங்களிலேயே நடிக்கும் அவர் இந்த படத்தில் ஒரு நிறைவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மனதில் பதிகிறார். மகிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷனின் அப்பாவாக நடித்திருக்கும் மறைந்த ஆர்.எஸ். சிவாஜி தன் அனுபவ நடிப்பால் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். தர்ஷனின் நண்பராக நடித்திருக்கும் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார். 

 

பாடல்களை காட்டிலும் சத்யாவின் பின்னணி இசை இந்த படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அழுத்தமான கலங்க வைக்கும் காட்சிகளில் அழகான இசையை கொடுத்து கலங்கடித்துள்ளார். சக்திவேலின் ஒளிப்பதிவில் மழையும் அதை சுற்றி உள்ள கிராமங்களும் அழகாகவும் எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டில் உள்ள அனைவருக்கும் அடிப்படை வசதிகள் என்ற மிக அவசியமான ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்த இயக்குநர் சரவணன் அதை ஒரு கதைக் கருவாக வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு எளிமையாகவும் அதேசமயம் எதார்த்தமாகவும் திரைக்கதை அமைத்து அதை ரசிக்கும் படியும், கலங்கடிக்கும் படியும், மனதில் ஆழமாகப் பதியும் படியும் கொடுத்து படத்தை கரை சேர்த்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டலும் பெற்றிருக்கிறார்.

 

நாடு - அவசியம்!

 


 

Next Story

போலீஸ் நாயகன் வென்றாரா? - ‘சூரகன்’ விமர்சனம்!

 

Sooragan movie review

 

கவனம் ஈர்க்கும் முயற்சியில் வாரம் குறைந்தபட்சம் இரண்டு மூன்று சிறு முதலீட்டு படங்கள் திரையுலகில் வெளியாகி அதில் சில படங்கள் வரவேற்பையும் பெறுகின்றன. அந்த வரிசையில் இணைய முயற்சி செய்து வெளியாகி இருக்கும் சூரகன் திரைப்படம் பார்ப்பவர்களை கவர்ந்ததா?

 

சில காரணங்களால் பணி நீக்கத்தில் இருக்கும் போலீஸ் நாயகன் கார்த்திகேயன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்பொழுது ரோட்டில் ஒரு பெண் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு கிடக்கிறார். அவரை நாயகன் கார்த்திகேயன் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார். போன இடத்தில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண்மணி இறந்துவிடுகிறார். அவர் எப்படி இறந்தார்? அந்தப் பெண்மணி இறப்பிற்கு யார் காரணம்? அது கொலையா? அல்லது விபத்தா? என்று துப்பறிய களம் இறங்குகிறார் சஸ்பென்ஷனில் இருக்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி கார்த்திகேயன். இறுதியில் அந்தப் பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பதை நாயகன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே மீதிக் கதை.

 

நாம் ஏற்கனவே பார்த்து பழகிய மர்டர் மிஸ்டரி கதையாக இது இருந்தாலும் அதை சற்றே விறுவிறுப்புடன் கூறி இருக்கிறார் இயக்குநர் சதீஷ் கீதா குமார். ஒரு சிறிய பட்ஜெட்டில் எந்த அளவு விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு விறுவிறுப்பாக கொடுத்து முடிந்தவரை அயர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். படத்தில் நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து யூகிக்கும்படி இருப்பதை மட்டும் சற்றே தவிர்த்திருக்கலாம்.

 

புதுமுக நாயகன் கார்த்திகேயன் மிடுக்கான தோற்றத்துடன் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ்க்கு உண்டான ஆக்ரோஷமும் அதற்கான உடல் மொழியும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நடிகை சுபிக்ஷா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை தனக்கு கிடைத்த ஸ்பேசில் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

வில்லன் வின்சென்ட் அசோகன் எப்பொழுதும் போல் இந்த படத்திலும் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். அவரது நடை, உடை, பாவனை என அனைத்தும் பயமுறுத்தும்படி அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் சில பல காட்சிகளே வந்தாலும் இறுதிக்கட்ட காட்சிகளில் அதிரடியாக வந்து மாஸ் காட்டியிருக்கிறார் மன்சூர் அலிகான். இவரது ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, சுரேஷ் மேனன், வினோதினி ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.

 

ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அச்சு ராஜாமணி இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை ஓகே. கிரைம் திரில்லர் பாணியில் இப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் சதீஷ் கீதா குமார் அதை சற்றே யூகிக்கும்படி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

 

சூரகன் - நேர்மையானவன்!