Skip to main content

மோடிக்காக வேலை செய்யும் அதிமுக முக்கியஸ்தர்கள்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
AIADMK leaders working for Modi!

பிரதமர் நரேந்திரமோடி விசிட் பல அரசியல் திருப்பங்களை உருவாக்குமா அல்லது வழக்கம்போல பி.ஜே.பி.யினர் மட்டும் கலந்துகொள்ளும் கலகல கச்சேரி விசிட்டாக சுருங்கிப் போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை ஒட்டி பா.ஜ.க.வினர் மிகவும் ஆக்டிவாக இருப்பதாக ஒரு இமேஜை தங்களது தேசியத் தலைமைக்கு சொல்லி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதையே ஒரு நெகட்டிவான விசயமாக தேசியத் தலைமை பார்த்துவிடக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க. உறுதியாக நிற்கிறது. அதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாததால் தமிழக பா.ஜ.க. வளர்கிறது என்பதுதான் பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் திட்டம். அதற்காகத்தான் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்ததாக ஒரு கதையைக் கிளப்பி விட்டார்கள்.

அந்த ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை வானதிக்கு கொடுத்தது பா.ஜ.க.வின் சமூக வலைத்தள பொறுப்பாளர் ஷாலு குப்தாவின் கம்பெனி. வானதி அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஒரு நபர் மர்மமாக இறந்தார். வானதியின் உறவினரான ஏ.எம்.கே.மணிவண்ணன் என்பவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக ஒரு புகார் எழுந்தது. இப்படி மரணம், பாலியல் தொந்தரவு என புகழ்பெற்ற வானதியின் மர்ம அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் எப்படி வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழை சபாநாயகரிடமும் பா.ஜ.க. தலைவர்களிடமும் மட்டும் காட்டி போட்டோ எடுத்துக்கொண்டார் வானதி.

AIADMK leaders working for Modi!

வானதியைப் போலவே நயினார் நாகேந்திரனும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். பிரதமரின் 27ஆம் தேதி விசிட் தமிழக பா.ஜ.க.வின் "என் மண் என் மக்கள்'’ யாத்திரையோடு முடிந்துவிடக் கூடாது. தமிழகத்தின் தென் பகுதிக்கும் பிரதமர் வரவேண்டும் என அவரது தொகுதியான திருநெல்வேலிக்கு மோடி வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். நயினாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. பிரதமர் 28ஆம் தேதி திருநெல்வேலிக்கு செல்கிறார். பிரதமரை வரவேற்க திருப்பூரில் நடைபெறும் கூட்டத்திற்காக கொங்கு பெல்ட் பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டுவதற்காக பியூஷ்கோயல் மூலம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பொதுமக்களைத் திரட்டும் பொறுப்பு ஓ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்று ஆனாலும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் நரேந்திர மோடிக்காக ஆட்களைக் கொண்டுவரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டும் போதாதென்று அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய பிரபலங்களை பா.ஜ.க.வில் கொண்டுவந்து சேர்ப்பதற்கென முன்பு கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பிடித்து பணம், மற்ற பல வசதிகள் செய்து கொடுத்தது போல கோடிக்கணக்கில் பணம் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைமையில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் சுற்றிவருகிறார்கள். யார், யார் எந்தக் கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒரு ரேட் என கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டு வருகிறது.

AIADMK leaders working for Modi!

ஏற்கெனவே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பதினைந்து பேரை பிடித்து வேலுமணி ஆதரவுடன் கொங்கு பெல்ட் பகுதிகளில் திரட்டப்பட்ட அந்த நபர்கள் மிகவும் வயதானவர்கள், அரசியல் செயல்பாட்டில் இல்லாதவர்கள் என கேலியும் கிண்டலும் எழுந்தது. இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் வயதானவர்களை சேர்க்கிறார்கள் என நக்கலான விமர்சனம் எழுந்தது. அதனால் பிரதமர் முன்னிலையில் சேரும் நபர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஒரு டீம் தமிழகம் முழுவதும் அலைந்துகொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக வருபவர்கள் கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி பதவிகளை இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை வந்தால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு தொகை நாங்கள் தருகிறோம் என வலை வீசப்படுகிறது. எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லை, பிரதமரின் விழாவை வெற்றிகரமாக மாற்றுவோம் என தமிழகத்தில் உள்ள வி.ஐ.பி.க்களைக் குறிவைத்து அவர்களை பிரதமர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைப்போம் என தமிழக பா.ஜ.க. டீம் சூதாட்ட பாணியில் காய் நகர்த்தி வருகிறது.

இந்தத் தேடலில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஐந்து எம்.எல்.ஏ.க்கள் சிக்கியுள்ளார்கள். அந்த ஐந்து பேரையும் பா.ஜ.க.வில் சேர்த்தால் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாயாது. அவர்களில் ஒருவர் ஒரு மிகப்பெரிய தலைவர். இன்னொரு முக்கியத் தலைவர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிகப்பெரிய தலைவரை பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் அவரது விசுவாசியான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவரை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகவும் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது. முக்கியத் தலைவரும் தஞ்சை மாவட்டத் தலைவரும் எடப்பாடிக்கு எதிரானவர்கள். பிரதமர் தனது பேச்சில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத எடப்பாடியையும் மறைமுகமாக விமர்சிப்பார் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.