Skip to main content

எடப்பாடியை நெருக்கும் மாவட்டச் செயலாளர்கள்! கூட்டு சேரும் ஓ.பி.எஸ். சசிகலா! 

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

ADMK leader issue ops and sasikala

 

அ.தி.மு.க.வின் அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த பொதுக்குழுவுக்காக மீண்டும் ஆயிரக்கணக்கான கோடிகளை இறைக்கும் கட்டாயத்திற்கு எடப்பாடி தள்ளப்பட்டிருக்கிறார்.

 

மா.செ.க்களுக்கு மட்டும் 23-ஆம் தேதி பொதுக்குழுவுக்காக பத்து கோடி பேசப்பட்டது. அதில் 8 கோடி தரப்பட்டது. மீதம் பிறகு தருகிறோம் என தவணை கூறப்பட்டது. இப்போது மீண்டும் பொதுக்குழு கூடுவதால் மீதம் தரவேண்டிய 2 கோடியுடன் மூன்று கோடி சேர்த்து ரவுண்ட்டாக ஐந்து கோடி கொடுங்கள் என மா.செ.க்கள் தரப்பிலிருந்து டிமாண்ட் வந்திருக்கிறது.

 

எடப்பாடிக்கு இந்த பொதுக் குழுவை நடத்துவதற்கு விஜயபாஸ்கர் பெரிய தொகை கொடுத்துள்ளார். அது தவிர கொங்கு மண்டல தொழிலதிபர்களிடம் பெரும் நிதி வசூல் செய்யப்பட்டது. 23-ஆம் தேதியே எடப்பாடி தான் ஒற்றைத் தலைமை. அவர்தான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் என நிரூபிக்கப்பட்டுவிட்டது. மறுபடியும் பொதுக்குழு கூட்ட எதற்கு மீண்டும் செலவு செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் தயக்கம் காட்டியிருக்கிறார்கள். அதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பினர், "நடைபெற்றது பொதுக்குழு அல்ல. காலை பத்து மணிக்கு நடை பெறும் பொதுக்குழுவுக்கு அதிகாலை 5:00 மணிக்கே திருமண மண்டபத்தில் கொங்குமண்டலத்தில் இருந்து ஆட்களை கொண்டு போய் நிரப்பினார்கள். காலை 6:30 மணிக்கு லைவ் ரிலே எடுத்த தொலைக்காட்சிகளில் ஒற்றைத் தலைமை எடப்பாடி என கொங்கு பாஷையில் மண்டபத்தில் இருந்தவர்கள் பேசினார்கள். செயற்குழு, பொதுக்குழு என்றார்கள்.

 

ADMK leader issue ops and sasikala

 

ஜெ. காலத்தில் செயற்குழு கூட்டம், பொதுக்குழுவுக்கு முன்பு ஐந்து நிமிடம் டிராமா போல நடத்துவார்கள். இந்தமுறை அதெல்லாம் நடத்தவில்லை. நேரடியாக பொதுக்குழு நடத்தப்பட்டது. அதில் ஒருமாதம் கஷ்டப்பட்டு நடத்திய கட்சித் தேர்தலுக்கு அங்கீகாரம் பெற வேண்டிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுது கட்சி என்பதே இல்லை. கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர்பேடில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட யார் பெயரும் இல்லை. ஓ.பி.எஸ். பெயரை நீக்குகிறோம் என ஆரம்பித்து, எல்லோர் பெயரையும் நீக்கிவிட்டார்கள். எனவே இந்த முறை மறுபடியும் பொதுக்குழு நடைபெறாவிட்டால் அ.தி.மு.க. என்கிற கட்சியே இருக்காது என பதில் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டது.

 

கடந்த முறை காசு கொடுக்க மந்திரிகளிடம் எடப்பாடி அதட்டி, உருட்டி பணம் கேட்டிருக்கிறார். அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். மறுபடியும் கோடிகளில் செலவு செய்து பொதுக்குழு நாடகம் அரங்கேற்றப்படுகிறது என்கின்றன அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

இதற்கிடையே இந்தக் குழப்பத்தில் குளிர் காய்வதற்கு பா.ஜ.க.வும் களமிறங்கிவிட்டது. பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வமான நிதி திரட்டித் தருபவரும் மோடியின் வலதுகரமான மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், கோவைக்கு வந்திருக்கிறார். பியூஷ்கோயல், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் அதிகபட்ச மரியாதையும் பணிவும் காட்டினார். கோவை வந்த பியூஷ்கோயலை எடப்பாடிக்காக பண உதவிகள் வழங்கும் திரிவேணி எர்த் மூவர்ஸ் மற்றும் லாட்டரி அதிபர் மார்ட்டின் ஆகியோர் சந்தித்தார்கள். அவர்களோடு கோவையில் எடப்பாடிக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களும் சந்தித்தனர். ஒரு பெரிய தொகை அங்கே பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பியூஷ்கோயல் மிகவும் பணிவுடன் வேலுமணியிடம் நடந்துகொண்டார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

 

இப்படி எல்லா வகையிலும் அடுத்த பொதுக்குழுவுக்காக தயாராகி வரும் எடப்பாடி, அ.தி.மு.க.விற்கு புதிய நிர்வாகிகளையும் நியமிக்கவுள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி, துணை பொதுச்செயலாளரான கே.பி.முனுசாமி, விஜயபாஸ்கர், பொருளாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளராக ஜெயக்குமார், சி.வி.சண்முகம் என லிஸ்ட் தயாராகி வருகிறது என்கிறது க்ரீன்வேஸ் சாலை வட்டாரங்கள்.

 

ஆனால் கேம் இப்படி ஒன் சைடாகவே இருந்துவிடவில்லை. எப்பொழுதும் அ.தி.மு.க.வில் குறுக்குசால் ஒன்று ஓடும். இந்த முறையும் அந்த குறுக்குசாலை ஓட்டுபவர் சசிகலாவாகத்தான் இருக்கிறார். ஒரு கல்யாண மண்டபத்தில் பத்துபேர் கூடி எடுக்கிறது எல்லாம் ஒரு முடிவா? என நடைபெற்ற பொதுக்குழுவை சசிகலா கிண்டலடித்திருக்கிறார்.

 

அவர் அப்படிப் பேசுவதற்கு காரணம் இந்த பொதுக் குழுவிற்குப் பிறகு எடப்பாடி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் தவிர மற்ற அனைவரும் சசிகலாவிடம் பேச ஆரம்பித்திருப்பது தான். ஜெயக்குமார்கூட சசிகலாவின் சகோதரர் திவாகரனிடம் பேசுகிறார். ஓ.பி.எஸ். நேரடியாக சசிகலாவிடமும், டி.டி.வி.தினகரனிடமும் தினமும் பேசுகிறார். அந்த உற்சாகத்தில்தான் "நான் மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவேன். ஒற்றைத் தலைமையாக என்னை அமரைவைக்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்' என திருத்தணி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வட மாவட்டங்களில் நடக்கும் அரசியல் யாத்திரையின்போது சசிகலா பேசி வருகிறார். அத்துடன் தொண்டர்களும் வாக்காளர்களும் முடிவு செய்வதுதான் கட்சி என எடப்பாடி நடத்தும் கூட்ட வைபவங்களை சசிகலா நக்கலடிப்பது எடப்பாடி தரப்பை டென்ஷன் அடைய வைத்திருக்கிறது.

 

இந்நிலையில், இதேபோல ஒரு பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய நிகழ்வை எதிர்த்து இப்பொழுது ஓ.பி.எஸ். நடத்தும் சட்டப் போராட்டத்தில் சசிகலாவும் இணைந்து போராட திட்டமிட்டிருக்கிறார் என்கிறது சசிகலா வட்டாரங்கள்.

 

ADMK leader issue ops and sasikala

 

இந்நிலையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசித்திருக்கிறார் எடப்பாடி. கட்சியின் உயர்ந்தபட்ச அரசியல் முடிவுகளை எடுக்கும் வலிமை பொதுக்குழுவுக்குத்தான் இருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு சாதகமாக இருப்பதால் எடப்பாடி பொதுச்செயலாளராவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்தப் பதவிக்கு கிளைக் கழகங்களில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதரவையும் பெறவேண்டும். அதனால் பொதுச்செயலாளராக பதவியைப் பெற்றவுடன் அனைத்து கிளைக் கழகங்களையும் கூட்டி பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் போதும். தேர்தல் கமிஷன் அதை ஏற்றுக்கொள்ளும் என சட்ட வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.


ஆனால் கடந்தமுறை சசிகலாவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தேர்தல் கமிஷனில் உத்தரவு பெற்றதற்குக் காரணம் பா.ஜ.க. அந்த பா.ஜ.க. இந்தமுறை எப்படியிருக்கும் என டெல்லி சென்ற ஓ.பி.எஸ்., பா.ஜ.க.. வட்டாரங்களில் நல்ல அறிமுகத்தைப் பெற்றுள்ள தனது மகன் ரவீந்திரநாத் மூலம் முயற்சி செய்துவருகிறார்.


எடப்பாடிக்கு கோவை ஆர்.எஸ்.எஸ். டீம் ஆதரவு தருவதுபோல கடந்த முறை ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக களம் கண்ட பா.ஜ.க.வினரை ஓ.பி.எஸ். தொடர்புகொண்டார். அதில் குருமூர்த்தி தரப்பினரும் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக இயங்குகின்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில், குஜராத் கலவரத்திற்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு பெறுவது, ஜனாதிபதி தேர்தல், ஜெர்மன் பயணம் என பிஸியாக இருந்த மோடி, ஓ.பி.எஸ்.ஸை கண்டுகொள்ளவில்லை, அதனால் நிர்மலா சீதாராமனும், ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க விரும்பவில்லை. இருந்தாலும் பா.ஜ.க. பிரமுகர்களை மட்டும் சந்தித்துவிட்டு வந்தார் ஓ.பி.எஸ். என்கிறது டெல்லி வட்டாரங்கள்.


இதற்கிடையே மதுரையிலிருந்து தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.ஸுக்கு பொதுக்குழுவில் நிகழ்த்தப்பட்ட அவமானம், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம் என்கிற கோஷத்தை முன் வைத்து களமிறங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவருக்கு இணையாக சசிகலா, வட மாவட்ட டூர் தொடங்கியுள்ளார். எடப்பாடி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்த பொதுக் குழுவுக்கு தயாராகி வருகிறார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.