Skip to main content

ஆவின் தலைமை அதிகாரிக்கு கரோனா! அச்சத்தில் சென்னைவாசிகள்! அலட்சியத்தில் அதிகாரிகள்! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
madhavaram aavin milk


 

கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கரோனா விபரீதம் போல ஆவின் பால்பண்ணையிலும் ஏற்படும் என அலறுகிறார்கள் அதன் பணியாளர்கள். கடந்த மாதம் சென்னையிலுள்ள மாதவரம் பால்பண்ணை ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை ஆவின் நிர்வாக உயரதிகாரிகள் மூடி மறைக்க முயற்சித்த நிலையில் அதனை நக்கீரன் இணையதளத்தில் அம்பலப்படுத்தினோம். 


மேலும், சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.  உரிய நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ்.சுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உயரதிகாரிகள் அறிவுறுத்தினர். 

அதேசமயம், மாதவரம் பால்பண்ணையை முழுமையாக லாக் டவுன் செய்து, பால் பண்ணை மற்றும் பால் டேங்கர் லாரிகள் அனைத்தையும் மருத்துவரீதியாக சுத்தப்படுத்த வேண்டிய அவசியத்தையும் உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். தமிழக சுகாதார துறையின் அறிவுறுத்தல்களும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால், மாதவரம் பால்பண்ணையில் பரவிய தொற்று குறித்து போதிய அக்கறை காட்ட மறுத்ததுடன், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதிலும் உயரதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. 
                     
இதன் விளைவு, தற்போது ஆவின் நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ள உயரதிகாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து, ஆவின் நிறுவன பணியாளர்கள் மட்டுமல்லாமல்  சம்மந்தப்பட்ட தலைமை அதிகாரி சென்று வந்துள்ள அலுவலக பணியாளர்களும் மிரண்டு போயிருக்கிறார்கள். 
                         

 

இந்த சம்பவம் ஆவின் பணியாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘’தமிழக ஆவின் நிறுவனத்துக்கு சென்னையில் மாதவரம், அம்பத்தூர், காக்களூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் பண்ணை இருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் தலைமை அதிகாரி ஒருவருக்குத்தான் தற்போது கரோனா தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பண்ணைகளில்தான் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தினந்தோறும் கொண்டு வரப்படும் பால், குளிரூட்டப்பட்டு பால் பாக்கெட்டுகளாக மாற்றப்படுகின்றன. 
                     
அவைகள் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கு மக்களுக்கு விநியோக்கிக்கப்படுகிறது. தினமும் சென்னையில் மட்டும் 15 லட்சம் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன. அந்த வகையில் சுமார் 60 லட்சம் பேர் தினமும் ஆவின் பாலை பயன்படுத்துகிறார்கள். மக்களின் உணவு பொருளாக இருக்கும் பால் விசயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதுவும் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் கவனம் தேவை. 
                         
 

nakkheeran app




ஆனால், கடந்த மாதம் 2 பேருக்கு கரோனா தொற்று செய்யப்பட்ட சூழலில், மாதவரம் பால் பண்ணையை மூடுங்கள் என ஆவின் உயரதிகாரிகளுக்கு ஆவின் பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த யோசனையை குப்பையில் வீசிவிட்டனர். பால் பண்ணைகள் வழக்கம்போல் இயங்கின. பாதுக்காப்பற்ற தன்மை நிலவியது. ஒப்பந்த பணியாளர்களை மிரட்டி வேலை வாங்கினர். அவர்களில் பலர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.  இரண்டு பேருக்கு இருந்த அந்த தொற்று மெல்ல பரவி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று பரவி விட்டது. அதன்பிறகாவது ஆவின் நிர்வாகம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அப்போதும் அக்கறை காட்டவில்லை. 
                             
மாதவரம் பால் பண்ணையை மூடினால் தாங்கள் செய்துள்ள தவறுகள் எல்லாம் அம்பலமாகி விடும் என நினைத்தே தேவையான மருத்துவ நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. அதன் விளைவு, தற்போது, ஆவினின் தலைமை அதிகாரிக்கே  தொற்று தாக்கியிருக்கிறது. மேற்கண்ட 4 பால் பண்ணைகளுக்கும், நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்துக்கும் சம்மந்தப்பட்ட இணை நிர்வாக இயக்குநர் தினமும் வந்து போகிறவர் என்பதால் தற்போது அனைத்துப் பணியாளர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டது போல ஒரு விபரீதம், ஆவின் பால் பண்ணைகள் மூலம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிகாரிகளின் அலட்சியம், மக்களுக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் தொற்று பரவுமா? என சென்னைவாசிகள் பயப்படுவதில் அர்த்தமில்லாமல் இல்லை!‘’ என சுட்டிக்காட்டுகிறார்கள் ஆவின் பணியாளர்கள்.


 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.