Skip to main content

ஆதார் வாங்கவே ஆதார் கார்டு கேப்பாங்களோ?

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
ஆதார் வாங்கவே ஆதார் கார்டு கேப்பாங்களோ? 



ஆதார் இல்லாமல் எதெல்லாம் செய்ய முடியும் என்று கேட்டால் யோசிக்க வேண்டிய நிலைக்கு புதுப்புது உத்தரவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

அந்த அளவுக்கு இது என்ன உயிராதாரமான கார்டா என்றால் அப்படியெல்லாம் இல்லை.

தனிமனிதனைப் பற்றிய அடிப்படைத் தரவுகளை சேகரிக்க உதவும் 12 எண்கள் கொண்ட ஒரு அட்டை.

இதுஒன்றும் இந்தியக் குடியுரிமை அட்டை இல்லை. இந்தியாவில் 182 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் யாரும் இந்த அடையாள அட்டையை பெற முடியும்.

நீங்கள் இந்தியக் குடிமகன் என்பதற்கு காட்டவேண்டிய ஆதாரமே வேறு.

இந்திய குடியுரிமைச் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

1950 ஜனவரி 26ம் தேதிக்குப் பிறகும் 1987 ஜூலை 1ம் தேதிக்கு முன்னரும் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறப்பால் இந்தியன் என்று கூறிக்கொள்ளலாம். இவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் மட்டும் போதும்.

1987 ஜூலை 1ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர் இந்தியக்குடியுரிமை கோரிப் பெற முடியும். அவருடைய பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழும், பெற்றோரில் ஒருவரின் பிறப்புச் சான்றிதழும் இணைத்து குடியுரிமை பெற முடியும்.

2004 டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறமுடியும். இவர்களுடைய பெற்றொர் இருவரும் இந்தியராகவோ, ஒருவர் இந்தியராகவும், மற்றவர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவராக இல்லாமலும் இருக்க வேண்டும்.

இதெல்லாம் எதுக்குங்க என்று கேட்காதீர்கள். ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள இதெல்லாம் அவசியமாகிறது.

இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாக வாக்காளர் அடையாள அட்டையும், பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகும். டிரைவிங் லைசென்ஸ் அட்ரஸ் புரூஃபுக்குக்கூட செல்லாது.



2013ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் பாஸ்போர்ட்டைக்கூட இந்தியக் குடியுரிமைக்கு ஆதாரமாக கொள்ள முடியாது என்று தீர்ப்பளிக்கப்ப்டடுள்ளது.

அப்போ ஆதார் கார்டை ஏன் எல்லாத்துக்கும் அவசியம் என்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

அதுதான் புரியவில்லை. ஆதார் கார்டை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், மத்திய அரசோ எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டை கேட்கிறது.

கேஸ் கணக்கிற்கு ஆதார் எண், பான் கார்டுடன் ஆதார் எண், வங்கிக் கணக்கிற்கு ஆதார் எண், சிம் கார்டு இணைப்புக்கு ஆதார் எண் என்று எதுக்கெடுத்தாலும் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்துகிறது மத்திய அரசு...

இறப்புச் சான்றிதழ் பெறவும் ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதலில் இறந்தவருடைய ஆதார் எண் அவசியம் என்று சொன்ன மத்திய அரசு, அதில் ஏற்படும் குளறுபடிகள் வெளியானவுடன், விண்ணப்பிக்கிறவர்களின் ஆதார் எண் அவசியம் என்று திருத்தியுள்ளது.

இப்போது டிரைவிங் லைசென்சுக்கும் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிடப்படுகிறது.

ஆனால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூப்பாடு போடுவதை காதிலேயே வாங்க மறுக்கிறார்கள்.

மக்களுடைய ரகசியங்களை சேகரிக்கும் வகையில் ஆதார் எண்ணை பயன்படுத்தும் அரசு, அரசியல் கூத்துக்களை அம்பலப்படுத்த உதவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க மறுப்பதில் ஆச்சர்யமே இல்லை.

ஆதார் எண்ணைக் கொண்டு தனிநபர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்கிறது. ஆனாலும், மத்திய அரசு வற்புறுத்துகிறது.

ஆதார் எண் வழியாக பெறப்படும் ரகசியத் தகவல்கள் மூலம் யாரையும் அரசாங்கம் மிரட்ட முடியும் என்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கும்  ஏன் ஆதார் எண் என்ற சந்தேகம் எழும்.

இந்தியாவில் யாருடைய இறப்புச் சான்றிதழையும் யாரும் வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறதே.

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு உயிரோடு இருக்கும்போதே அவருடைய பெயரில் இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது உண்மைதானே...

அதுபோன்ற 'அசம்பாவிதங்களை' தடுக்கவே இந்த உத்தரவு என்று நம்பி வரவேற்கலாம்.

போகிற போக்கைப் பார்த்தால் ஆதார் எண் வாங்கவே ஆதார் கார்டு வேண்டும் என்று உத்தரவு வந்தாலும் வரும்போல...

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்