திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கடந்த 26-09-2021 அன்று ‘"தமிழகம் நூறு தளபதி நூறு'’என்ற தலைப்பின் கீழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய 106 பேரைத் தேர்வுசெய்து அவர்களுக்கு கலைஞர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியமைந்து முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு சாதனையாளர் களுக்கு கலைஞர் விருது வழங்கினார்.
கலைஞர் விருது வழங்கும் விழா நடைபெறு வதற்கு முன்பும், நடந்துமுடிந்த பிறகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்திய விழா குழுவினருக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அமைச்சர் கடுப்பாகியுள்ளார்..
இந்த விழாவை நடத்த முதலில் திட்டமிட்ட வர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில மகளிரணிச் செயலாளராக இருக்கும் முனைவர்.மதினா. ஜீயபுரம் தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்துவருகிறார். அதோடு, தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
அவரை நேரில் சந்தித்து என்ன பிரச்சினை என்று கேட்டபோது, “"இந்த விழாவை அமைச்சர் கே.என்.நேருவை வைத்து நடத்திவிடலாம் என்று நினைத்தேன். அமைச்சரை நேரில் சந்தித்தபோது செப்டம்பர் 26-ஆம் தேதியைத் தேர்வுசெய்தார். அதற்கு முன் என்னிடம், நீங்கள் ஆசிரியராக இருக்கிறீர்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை அழைத்து அந்த நிகழ்வை நடத்துங்கள் என்று கூறியவுடன், நான் வேறொரு அமைப்பின் பெயரை வைத்து விழா நடத்திக்கொள்கிறேன், நீங்கள் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று கூறினேன். இருப்பினும் கண்டிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பெயரையும் அழைப்பிதழில் போட்டு அவரையும் இந்த விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கல்வியாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் தலைவரான கலைச்செல்வனும் நானும் இணைந்து விழா நடத்த திட்டமிட்டோம். முதலில் அறிவா லயத்திற்கு முன்பணம் கொடுக்கவேண்டும் என்று கூறினேன். அவர் 25ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அழைப்பிதழில் பள்ளி, கல்லூரி நிறுவனர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொடுத்தார். நான் அவர்களுடைய பெயரைப் போடமுடியாது என்று தெரிவித்தேன்.
கருத்து வேறுபாடு உருவானதால், முதலில் அடித்த அழைப்பிதழில் அவருடைய பெயரை நீக்கிவிட்டு வேறொரு அழைப்பிதழை அடித்தேன். அவர் கொடுத்த 25 ஆயிரம் பணத்தையும் நான் திருப்பியனுப்பி விட்டேன்.
அவரை நான் புறக்கணிப்பதாகக் கருதி, கலைச்செல்வன் நான் இந்த விழாவை நடத்துகிறேன் என்று கூறி என்னிடம் சவால்விட்டார். அவர் எல்லாரிடமும் விழா தன்னுடைய தலைமையில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார். விழா நடைபெறும் நாளில் அவர் எதுவும் பிரச்சினை செய்துவிடக்கூடாது என்பதற்காக நான் கோட்டை காவல்நிலையத்தில் அவர்மீது புகார் மனு கொடுத்திருந்தேன்''’என்று கூறி முடித்தார்.
இந்த விழா தொடர்பாக கலைச்செல்வனிடம் பேசியபோது,…“"மதினா என்பவர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் எனக்கு ஆறுமுகம் மூலம் அறிமுகமானார். அவர் தான் என்னிடம் இந்த விழாவை இணைந்து நடத்துவோமா என்று கேட்டார். நானும் அதற்கு சரி என்று சொன்னேன்.
விழாவிற்கான செலவுகள் எதுவாக இருந்தாலும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்வோம் என்று கூறினேன். அவர் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கான செலவை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இருவரும் அறிவா லயத்திற்கு அட் வான்ஸ் கொடுக்கச் சென்றபோது, வாடகை சமையலுடன் 2.50 லட்சம் மற்றும் கரன்ட் பில், தூய்மைப் பணி உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 3 லட்சம் என்று தெரிந்தது. இருவரும் இதை பகிர்ந்துகொள்வோம் என்று கூறினேன்.
இந்த விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடிக்கும்போது என்னுடைய குருநாதர் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் நிறுவனரின் பெயரை நான் அழைப்பிதழில் அச்சிடக் கொடுத்தேன். அவரால்தான் நான் தற்போது இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறேன். அதில்தான் பிரச்சனை உருவானது.
என்னைப் பற்றி அவர் விசாரித்து நான் சரியான மனிதர் இல்லை என்பதை தெரிந்து கொண்டவர் உடனே 25 ஆயிரம் பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டு, என்னை வெளியேற்றியிருக்கலாமே.. ஏன் விழாவின் கடைசி நேரத்தில் புகார் கொடுத்து என்னை வெளியேற்ற வேண்டும். அழைப்பிதழ் அச்சிட்டு அதனை அமைச்சர்களுக்கு கொடுத்து, 4 முறை சென்னைக்கு சென்று வந்தது உள்பட 2 லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன்.
இரண்டாவது, சாதிப் பாகுபாடு பார்க்க ஆரம்பித்துவிட்டார். என்னோடு இணைந்து விழா நடத்த அவருக்கு விருப்பமில்லை.
மதினா தரப்பின் குழப்பங்களைப் பார்த்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் இந்த விழாவிற்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். தற்போது முகநூல் பக்கங்களில் என்மீது அவதூறு பரப்பிவருகிறார். அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்''’என்று தெரிவித்தார் கலைச்செல்வன்.