"கபடி போட்டி, மாட்டு வண்டி பந்தயம், பொங்கல் விழா என எந்த விழாவுக்கும் நான் வரத் தயார்! ஆனால், உங்கள் ஊரில் இத்தனை மரங்களை நடுங்கள். மறக்காமல் வந்துவிடுவேன்'' என மரக் கன்றுகளை வழங்கி, திருமணம், காது குத்து என, தான் கலந்து கொள்ளும் அத்தனை விழாக்களிலும் மரம் வளர்ப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, "வனத்துக்குள் விளாத்திகுளம்' திட்டத்திற்கு வலுச் சேர்க்கின்றார் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன்.

தூத்துக்குடி மாவட்டத்தின் வட கடைக்கோடியில் அமைந்துள்ளது விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழில் என்றாலும், கரிசல் பூமியான இத்தொகுதியில் மானாவாரி விவசாய நிலங்களுடன் வேலிக்கருவை மரங்களும் போட்டி போட்டி நிலத்தை ஆக்ரமித்துள்ளன. விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 139 ஊராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், கயத்தாறு ஒன்றியத்திற்குட்பட்ட 7 கிராமங்களுடன் சுமார் 5.2 லட்சம் மக்கட்தொகை கொண்டது இந்த சட்டமன்றத் தொகுதி.

ff

Advertisment

விவசாயத்திற்காக விளாத்திகுளம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 105 கண்மாய்கள், ஊருணிகளுடன், பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் புதுப்பட்டி, கருப்பூர், அயன் கரிசல் குளம், பிதப்புரம், எப்போதும்வென்றான், கீழக் கரந்தை, மேல்மந்தை என 30-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. அத்துடன் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயன்ராஜாப்பட்டியிலிருந்து வைப்பாறு வரை பாயும் சுமார் 55 கி.மீ. நீளமுள்ள வைப்பாறு ஆறும் உள்ளது. தொகுதிக்குட்பட்ட 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு பாசனத் திற்கு தேவையான நீரை இருக்கன்குடி அணை வழங்குகிறது. 4 ஆயிரம் ஹெக்டேர் பாசனப் பரப்பு ஆற்று நீரின் மூலமும், 4 ஆயிரம் ஹெக்டேர் பாசனப் பரப்பு குளங்கள், கண்மாய், ஊருணிகள் மூலமும் மீதமுள்ள பாசனப் பரப்பு குட்டைகள், நீர்க்கசிவுகளின் மூலமே பயன்பெற்று வந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் வெறும் ஆயிரம் ஹெக்டேருக்கு குறைவான நிலங்களிலேயே விவசாயம் நடைபெறுகின்றது. நீர்நிலைகளை ஆக்ரமித்த சீமைக்கருவைகளாலேயே இந்த பாதிப்பு.

அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் தொகுதி முழுவதும் 5 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்யும் நோக்கில் பணிகளில் ஈடுபட்டுவரும், மக்கள் மரங்கள் இயக்கத் தினர், "தொடர்ந்து அவரவர் பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யவேண்டும் என எண்ணுவோர், மரக்கன்றுகளை தாங்களே வாங்கிச் சென்று நடவுசெய்து பராமரிக்க லாம். இல்லையென்றால், இயக்கத்தினரே அதனை நடவுசெய்து, வேலியமைத்து 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்வார்கள். இதற்கு ரூ.3 ஆயிரம் செலுத்தி உதவலாம்'' என தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக தொகுதி முழுவதுமுள்ள ஊராட்சிமன்ற தலைவர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி, பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

ff

Advertisment

இதுகுறித்து பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., "வனத்துக்குள் விளாத்திகுளம்” என்ற ஹேஷ்டேக்குடன் தொடங்கப்பட்டுள்ள இத் திட்டத்தை, மக்கள் மரங்கள் இயக்கம் சார்பில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 5 கோடி மரக்கன்று கள் நடவுசெய்து பராமரிக்கும் பணிகளை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளோம். மரங்களைப் பராமரிக்க ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் மரங்கள் மக்கள் இயக்கத்துக்கு பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்கிறோம். மரக்கன்றுகளை பராமரிக்க தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மரங்கள் நடவுசெய்வது மட்டுமின்றி வேலியமைத்து பராமரிக்கவும் மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணித்து, டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றுவது என அனைத்து பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.

dd

பொது இடங்களில் முதலில் மரக்கன்றுகளை நடவு செய்யவுள்ளோம். தனியார் இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ஒப்பந்தம் போடப்படும். விளாத்திகுளம் தொகுதி மண்ணைப் பொறுத்தவரை வேம்பு, புங்கை, ஆலமரம், அத்தி, நாவல் மரங்கள், ஊருக்கு வெளிப்பகுதியில் புளிய மரங்கள் நடவுசெய்ய உள்ளோம். ஒரு செடிக்கு 5 ஆண்டுகளுக்கும் தண்ணீர் வழங்கவேண்டும் என திட்டமிட்டுள்ளோம். வைப்பாற்றிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து தொகுதிகளிலுள்ள மக்களிடையே கொண்டுசேர்க்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதனை கருத்தில் கொண்டு விளாத்திகுளம் தொகுதி, பிரதான இடத்தை பிடிக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம். விளாத்திகுளம் தொகுதி வருங்காலத்தில் ஒரு பசுமை சுற்றுலா மையமாக மாறும். ‘வனத்துக் குள் விளாத்திகுளம்’ என்பதை எங்கள் மக்களால் நிச்சயம் நிறைவேற்ற முடியும்'' என்கிறார் அவர்.

மார்க்கண்டேயனின் செயல்திட்டத்திற்கு உறுதுணையாக பேரிலோவன்பட்டி பள்ளிச் செயலாளர் செல்வகுமார், விளாத்திகுளத்திலுள்ள ஒப்பந்ததாரர் ஆறுமுகச்சாமி, ஆற்றங்கரை சீதா ராமன், கோயம்பேடு செல்வகுமார், தன்னார்வலர் குமார் உள்ளிட்டோர் மரங்கள் மக்கள் இயக் கத்திற்காக டிராக்டர்களையும், தண்ணீர் டேங்கர் களையும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: மூர்த்தி & விவேக்