டந்த சில வருடங்களாகவே இந்தியாவுடன் எல்லைத் தகராறில் இறங்கிவரும் சீன ராணுவம், இந்த முறை பாங்காங் சோ ஏரியின் லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதியில் புதிதாக பாலம் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது இந்தியாவைக் கவலையடையச் செய்துள்ளது. இதே ஏரிப்பகுதியில் தொடங்கிய தகராறுதான் 2020-ல் இந்திய- சீன மோதலாக வெடித்து 20 இந்திய வீரர்கள் பலியாக வழிவகுத்தது.

china

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா-சீனா இடையே பரபரப்பை ஏற்படுத்திய சில நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்ப்போம்.

2017, ஜூலை: பூடான் எல்லைக்குள் சீனா வேகவேகமாக ஆறு சாலைகளை அமைக்க முயல, பூடானிலிருந்து இந்தியாவின் உதவி கோரி குரலெழுந்தது. இங்கு சாலைகள் அமைத்து அப்பகுதியை சீனா ஆதிக்கம் செலுத்துமெனில், வடகிழக்கு இந்திய எல்லைகளை நமது ராணுவம் அணுகச் சிரமம் ஏற்படும் என்பதால் வேகவேகமாக இந்திய ராணுவம் இப்பிரச்சனையில் வரிந்துகட்டி இறங்கியது கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இப்பகுதியில் இருநாட்டு ராணுவங்களும் விறைப்புடன் நின்றன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பூடான் எல்லை தொடர்பாக இன்றுவரை 470 கிலோமீட்டர் நீள எல்லைப் பிரச்சினை பேசி முடிக்கப் படாமலே இருக்கின்றது.

2018, ஜனவரி 27: இந்திய-சீன எல்லைப் பகுதியான டோக்லாம் பகுதியில் சீன ராணுவ நடமாட்டம் தென்பட்டது. இப்பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்புப் பகுதிகளை நிறுவியிருப்பதையும் ஹெலிகாப்டர்கள் வந்திறங்குவதற்கான சில ஹெலி பேடுகளை அமைத்திருப்பதையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தின.

Advertisment

china

2018, அக்டோபர் 25: லடாக்கையும் சீனாவையும் இணைக்குமிடத்தில், முக்கியமாக, இந்தியப் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ஹெலிகாப்டர் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பறந்தது சர்ச்சைக்குரியதாக ஆனது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் தொடர்பாளர், சீனாவை கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

2018 டிசம்பர்: இந்திய- சீன எல்லைப் பகுதி களில் சாலையமைத்துவந்த சீனா, இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலுள்ள அருணாசலப்பிரதேசத் தின் உள்ளே ஊடுருவி 1 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையமைக்க, இந்திய ராணுவம் முன்னேறிச் சென்று சீனாவின் சாலைப் பணிகளைத் தடைசெய் தது. இதையடுத்து இருநாட்டு ராணுவத் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்ததையடுத்து அந்த சாலைப் பணி கைவிடப்பட்டது. ஆனால் அப்போது சீனா வின் தரப்பில் பேசிய வெளியுறவுத் துறை அமைச் சர் கெங் சுவாங் குறிப்பிட்ட சொற்கள் முக்கியமானது. “"அருணாசலப்பிரதேசம் என்ற எந்தப் பகுதியையும் எங்களுக்குத் தெரியாது. எல்லை தொடர்பான பிரச்சனைகளைக் கவனிக்க சீன -இந்தியத் தரப்பில் முதிர்ச்சியுள்ள நிர்வாக அமைப்பு இருக்கிறது. அது இதனைக் கவனித்துக்கொள்ளும்''’என்றார். அதாவது, அருணாசலப்பிரதேசத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதுதான் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்திய சேதி.

Advertisment

china

2019, ஆகஸ்டு 9: இந்தியா, ஜம்மு-காஷ்மீர் பகுதிக்கு அளித்திருந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் முகமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. நமது சொந்த விவகாரமான இதில் கருத்துத் தெரிவித்த அப்போதைய சீன வெளியுறவுத் துறை பேச்சாளர் ஹூவா சுனியுங், “ஒருதலைப்பட்சமாக இந்தியா, அதன் உள்ளூர் சட்டங்களை மாற்றி யமைக்கிறது. இதன்மூலம் சீனாவின் பிராந்திய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவ தாக”குற்றம்சாட்டினார்.

காஷ்மீர் -இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்று நாடுகளால் பகிர்ந்துகொள்ளப் பட்டிருக்கிறது. அக்சாய்சின் பகுதியை சீனா தன் வசம் வைத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே காஷ்மீரில் 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்டபோது தன் குரலை உயர்த்தியது.

2020, மே 5: சத்தமின்றி லடாக்கில் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் இப்பகுதியில் டெண்ட் அடித்து தங்குமளவு செல்ல, இருதரப்பு ராணுவ வீரர்களும் கைகளாலும் மரக் கட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இருதரப்பும் ராணுவத்தைக் குவித்தன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பகுதிக்கு வந்தடைந்தன. பேச்சுவார்த்தை சில நாட்களுக்குத் தொடர்ந்தன.

2020, மே 9: சிக்கிம் நாகு எல்லையில் இந்திய -சீன ராணுவங்கள் மோதிக்கொண்டன.

2020, மே 20: வழக்கத்திற்கு மாறாக இந்தியா சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் அக்சாய் ஷின் பகுதியில் சாலைகள், பாலங்கள் அமைப்பதாகவும், ராணுவ பலத்தை விஸ்தரிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் சீன ஊடகத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

china

2020, ஜூன் 15: லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீனப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு பலியாகினர். கடந்த 45 வருட இந்திய -சீன மோதலில் ஏற்பட்ட மோசமான இழப்பு இதுவாகும். இம்மோதலில் சீனத் தரப்பிலும் உயிர்ப்பலிகள் ஏற்பட்டாலும் அதனை அவர்கள் தெரிவிக்காமல் மூடி மறைத்துவிட்டனர்.

2020, ஜூன் 17: இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள், தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின் சீன ராணுவத்தால் பிடித்துவைக்கப் பட்டிருந்த இந்திய ராணுவத்தினர் 10 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இவ்விவ காரத்தை இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். கிட்டத்தட்ட 14 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. முடிவில், இருதரப்பும் தங்களது பழைய எல்லைக்கே மாற்றிக்கொள்வதென முடிவெடுக்கப்பட்டு படைகள் பின்வாங்கப்பட்டன.

2020, செப்டம்பர் 5: அருணாசலப்பிரதேசத் தைச் சேர்ந்த 5 பேர் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டனர். அருணாசலபிரதேசத்தின் மேல்சுபன்ஸ்ரீ பகுதியைச் சேர்ந்த ஏழுபேர் அங்குள்ள காட்டுப்பகுதியில் வேட்டையாடச் சென்றிருந்தனர். அவர்களை சீன ராணுவம் பிடித்துச்சென்றது. தப்பிவந்த இரண்டுபேர் அளித்த தகவலாலேயே இந்த விவரம் வெளிப்பட்டது. கடத்தப்பட்டவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு வழிகாட்டிகளாகவும், சுமைதூக்கி களாகவும் செயல்பட்டவர்கள் என்பதால், ஏதோ குறிப்பிட்ட நோக்கத்திலேயே இவர்கள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமென சந்தேகமும் எழுந்தது. எனினும் அடுத்த சில தினங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

2021, பிப்ரவரி 5: கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப்பின் முதல்முறையாக கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனத் தரப்பில் 5 வீரர்கள் இறந்ததாக ஒப்புக்கொண்டனர்.

2021, நவம்பர் 18: டோக்லாமுக்கு அருகே பூடான் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை நிலுவையில் இருக்கும் பகுதியில், சீனா புதிய கிராமங்களைக் கட்டியெழுப்பிவருவது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது. மே மாத செயற்கைக்கோள் புகைப்படத்தில் காலியாக காணப்படும் அந்த இடம், நவம்பர் மாத புகைப்படத்தில் 100 சதுர கிலோமீட்டருக்குள் நான்கு கிராமங்களைக் கட்டியெழுப்பிவருவது கண்டறியப்பட்டது. அவை வெறும் கிராமங்கள் மட்டுமல்ல, ஹெலிகாப்டர் இறங்குதளங்கள், ஏவுகணை செலுத்தும் வசதியுடன் கூடிய இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதே பகுதியில்தான் 2017-ல் இந்திய- சீன ராணுவங்கள் முட்டிக் கொண்டு நின்றன.

இதுதவிர திபெத் விமான நிலையத்தின் அருகே, சாலை மற்றும் சில கட்டுமானப் பகுதிகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் சமீபத்தில் அருணாசலபிரதேசத்தின் பதினைந்து முக்கிய இடங்களின் பெயர்களை தனது வரைபடத்தில் மாற்றிக் குறிப்பிட்டுள்ளது சீனா. தவிரவும் அருணாசலபிரதேசம் திபெத்தின் பகுதி என்றும், தெற்கு திபெத் என பொருள்படும் ஜங்னான் எனவும் அந்த வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “"இது முதல் முறையாக நடப்பதல்ல. 2017-லும் இதே போன்றதொரு நடவடிக்கையில் சீனா இறங்கியது''’என விமர்சித்துள்ளார். இந்தியத் தரப்பில், “பெயர்களை மாற்றுவது கள நிலவரத்தின் உண்மைகளை மாற்றாது எனவும், அருணா சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்''’எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

china

இந்நிலையில்தான் 2020-ல் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியான லடாக்கின் பாங்காக் சோ பகுதியருகில், சீனா பாலம் கட்டும் விவகாரம் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது. இதன்மூலம் இப்பகுதியை சீனா விரைந்து அணுகமுடியும்.

எல்லைப் பகுதிகளில் மீறல்களில் ஈடுபடுவது, இந்தியாவின் கவனம் வேறு திசையிலிருக்கும்போது கிராமங்கள், பதுங்கு குழிகள், ஹெலிபேடுகள், விமான ஓடுதளங்கள் அமைப்பது என... பல்வேறு அத்துமீறல்களில் கடந்த ஐந்தாண்டுகளாகவே சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியத் தரப்பிலிருந்து கண்டனங்களைத் தவிர பெரிய பதிலடி எதுவும் தரப்படவில்லை.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் சீனர்களிடம், இந்தியாவின் நிலப்பகுதிகளை நேரு இழந்ததைத் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் பா.ஜ.க.வினர், இந்திய எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து சீண்டி வருவதை வாடிக்கையாக்கியிருக்கும் சீனாவைக் கட்டுப்படுத்தவோ, சீனாவின் கட்டுமானங்களைத் தடுக்கவோ வழியற்று அறிக்கைப் போரில் ஈடுபட்டு வரும் மோடிக்கு எதிராக வரும் விமர்சனங்களை என்ன செய்யப்போகின்றனர்?