உதிர்ந்து கிடக்கும் விவசாயிகள் ஒற்றுமை!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
'ஹைட்ரோ கார்பன் திட்டம்'- மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் அருகே வடத்தெரு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தை இன்று (13/06/2021) தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஆர்.பாண்டியன், "மத்திய அரசு தொடர்ந்து காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தமிழகத்தில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2019- ஆம் ஆண்டில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்தது.
அதனை தொடர்ந்து வேளாண் துறை மற்றும் மாசுக்கட்டுபாட்டுத்துறை சார்பில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே (கருக்காகுறிச்சி) வடத்தெரு என்கிற கிராமத்தை மையமாக வைத்து ராமநாதபுரம் கடற்பகுதி வரையிலும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான தொகுப்பு ஒப்பந்தத்தை ஒற்றை சாளர முறையில் கோரப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒப்பந்தம் பெரு நிறுவனங்கள் பூமிக்கு கீழ் உள்ள மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயு, நிலக்கரி, கச்சா, நிலவாயு உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நிறுவனம் எடுத்துக் கொள்வதற்கு முழு அதிகாரம் வழங்கும் அடிப்படையில் ஒப்பந்தம் வழி வகுக்கிறது. பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் ஏல அறிவிப்பு தமிழக நலனுக்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மாநில அரசு தனது பட்டியலில் வேளாண்மை உள்ளதால் பேரழிவு திட்டங்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்ட நிலையில், அதனை முடக்கும் நோக்கோடு மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களை ஒப்பந்தத்திற்கு கோருவது காவிரி டெல்டா விவசாயிகளை ஒடுக்க நினைக்கும் செயல் ஆகும்.
மத்திய அரசு திட்டமிட்டு பன்னாட்டு பெரும் நிறுவனங்களோடு டெல்டா விவசாயிகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதன்மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது. போராட்ட களத்திற்கு மத்திய அரசே விவசாயிகளை தள்ளுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
எனவே தமிழக முதலமைச்சர் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அமைச்சரவை அவசரமாகக் கூட்டி தற்போது அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அரசாணையில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பின் அதனை செய்து சட்டம் குறித்து உண்மை நிலையை தமிழக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பதற்கு முன் கொடுத்த அனுமதிக்கான கிணறுகள் தோண்டப்படும் என்கிற தவறான செய்தி பரப்பப்படுகிறது; இது உண்மைக்கு புறம்பானது. 2016- ஆம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவில் எந்த ஒரு கிணறு தோண்டவும், எந்த நிறுவனத்திற்கும் தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு ஒப்புதலின்றி எண்ணெய் நிறுவனங்கள் காவிரி டெல்டாவில் விளை நிலப்பகுதிகளில் பேரழிவு திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவது சட்டவிரோதம் என அறிவித்திட வேண்டும். மாநில அரசின் ஒப்புதல் இன்றி எண்ணை நிறுவனங்கள் ஒப்பந்தம் கோருவதற்கு தடை விதிக்க வேண்டும். வரும் 17- ஆம் தேதி பிரதமரை முதல்வர் சந்திக்கும்போது அமைச்சரவை முடிவை முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக வழங்கி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கொள்கை நிலை குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்திட வேண்டும்.
போராட்டக் களத்தில் விவசாயிகள் தள்ளப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லையேல் மீண்டும் தீவிர போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
Next Story
மரம் பெ.தங்கசாமி வாழ்க்கை பாதையை பள்ளி பாடமாக்க வேண்டும் -பி.ஆர்.பாண்டியன்
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தில் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசும் போது..
தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தியவர் சேந்தன்குடி கற்பகசோலை மரம் பெ.தங்கசாமி. அரசு, தனியார் நிறுவன விழாக்கள், திருமணம், குழைந்தை பிறப்பு, அரசியல் தலைவர்களின் மறைவு, நினைவு தினம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் நினைவாக மரக்கன்றுகள் நட்டும் வழங்கியும் ஊக்கப்படுத்தி வந்தார்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களோடு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். தனது வீட்டை சுற்றி சுமார் 4 ஏக்கர் தோட்டத்தில் தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட சுமார் 200 வகையான மரங்களை ஆயிரக் கணக்கில் வளர்த்துள்ளார். அதை பார்ப்பதற்கு பசுமை சூழ்ந்த சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பாலைவனத்தையும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதை தனது உழைப்பால் நாட்டுக்கு உணர்த்தியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவரை மரம் தங்கசாமி என்று அன்போடு அழைத்து வந்துள்ளனர்.
இவரது வாழ்க்கை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இவருடைய தொலைநோக்கு பார்வையுடனான வாழ்க்கை பாதையை தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் அரசு இணைத்திட வேண்டும் என்றார்.
மேலும் இவரது மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வரும் அனைவருக்கும் பசுமை கரங்கள் அமைப்பும், குடும்பாத்தாரும் இணைந்து இலவசமாக மரக்கன்றுகள் வழங்கியும், நட்டும் வருகின்றனர் என்றார்.
மேலும் பி.ஆர்.பாண்டியன் மரங்களை வழங்க பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு பெற்றுக்கொண்டார். இவருடன் பள்ளத்தூர் முருகையன், மன்னை மனோகரன், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.