எளியவர்களின் பயாஸ்கோப்!
கோடி மழைத்துளிகள் பெய் தால் ஒரு காளானாவது முளைக்கத்தானே செய்யும்! ஒரு சிறுவன் கல் எறிந்தாலும் பெரும் குளத்தில் சிறு சலனமாவது ஏற்படும். அதுபோல நல்ல படைப்புகள் எத்தனை சிறியதாக, எத்தனை சிரமங்களையும் தாண்டி வெளிவந்துவிட்டால், அப்படைப்பு ஒருவர் வாழ்விலாவது தாக்கத்தை ஏற்படுத்தும்.
நக்கீரன் எப்போதுமே நல்ல படங்களை, சமூகத்துக்கான செய்திகள் கொண்ட படங்களை கொண்டாடத் தவறியதில்லை. அப்படி 2011இல் வெளிவந்த சங்ககிரி ராச்குமாரின் 'வெங்காயம்' திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து 2012இல் ஒரு கட்டுரை வெளியிட்டது நக்கீரன். மூலநட்சத்திரம் கொண்ட பெண், மகனுடன் வாழ்ந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று நினைத்த தந்தை, மகனையும், மருமகளையும் பிரித்தார். பிறகு "வெங்காயம்' படம் பார்த்து ஏற்பட்ட விழிப்புணர்வில் மனம் மாறி மகனையும், மருமகளையும் சேர்த்துவைத்தார். இதை விட வேறு என்ன வெற்றி பெற்றுவிட முடியும் ஒரு படம்? இதை நக்கீரன் வெளியிட்டு "வெங்காயம்' படத்தை பாராட்டியது. இந்த சம்பவம் வெங்காயம் இயக்குனர் சங்ககிரி ராச்குமாரை இன்னொரு படமெடுக்கத் தூண்டியிருக்கிறது. ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான் இது. படத்தின் தொடக்கத்திலேயே இதை சொல்லியிருக்கிறார்.
தான் "வெங்காயம்' படம் எடுத்த காரணத்தை, எடுக்கும் போது பட்ட கஷ்டத்தை, வெளி யிட பட்ட பாட்டை, பணத்துக் காக நடந்த வஞ்சகத்தை, படத்தை தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் கொண் டாடிய விதத்தை... என கதையின் கதையை "பயாஸ்கோப்'பாக உருவாக்கியிருக் கிறார் சங்ககிரி ராச்குமார். வழக்கமான எதையும் தான் செய்துவிடமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், இந்தப் படத்திலும் எதிர்பாராத பல ஆச்சரி யங்களை, ஆனந்தத்தை தந்திருக்கிறார். சினிமா என்பது ஒரு பிரமாண்ட கனவு, சினிமா என்பது ஒரு ராட்சச துறை, சினிமா என்பது யார் யாரோ எங்கேயோ எடுப்பது... என்ற சாதாரண மக்களின் மனதில் படிந்திருக்கும் எண்ணத்தை உடைத்து... நாம வைக்குறதுதான் கேமரா, நம்ம வாழ்க்கைதான் கதை என சினிமாவின் தோளில் கைபோட்டு சினிமா எடுத்திருக்கிறார் ராச்குமார்.
எளிமையாக எடுத்த படம் ஏனோதானோ என்று இல்லை என்பதுதான் முக்கியம். தாஜ்நூரின் இசை படத்தை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசெல்கிறது. அடுத்தடுத்து சிரிக்க வைத்து, ஆங் காங்கே கலங்கவைக்கும் இந்த பயாஸ்கோப், மக்களுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. "ஆஹா' நிறுவனத்தின் வெளியீடாக திரையரங்கு களில் வெளிவந்திருக்கும் இப்படம், இத்தகைய முயற்சிகளுக்கு நல்ல துவக்கம். "ஜெயிச்சோமா, தோத்தோமா என்பதை வேடிக்கை பாக்குறவன் சொல்லக்கூடாது' என்று தொடர்ந்து விளையாடிவரும் சங்ககிரி ராச்குமாருக்கு "பயாஸ்கோப்' இன்னொரு வெற்றிதான்.
-வசந்த் பாலகிருஷ்ணன்
அஞ்சலி குஷி!
சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்திவரும் அஞ்சலி, தற்போது ராம்சரண் நடித்துள்ள "கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தில்ராஜூவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தற்போது திரை யரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் கூடுதல் குஷியில் இருக்கிறார் அஞ்சலி. காரணம், அவர் நடித்து 12 வருடங்களுக்கு மேலாக ரிலீஸாகாமல் இருந்த தமிழ் படமான ‘"மதகஜராஜா'’ வருகிற 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழில் தன்னுடைய படங்கள் வெளியாகி நீண்ட காலம் ஆகியுள்ளதால், இந்தப் படம் அந்த குறையை தீர்த்துவிடும் என அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லி வருகிறார்.
வசூலிலும் வெற்றி!
தான் எடுத்த நான்கு படங்களில் இரண்டு படங்களுக்கு தேசிய விருது வாங்கி கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கிறார் மணிகண்டன். "கடைசி விவசாயி' படத்தை அடுத்து மதுரையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒரு வெப் சீரிஸுக்கான படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். தற்போது மீண்டும் படம் எடுக்கத் தயாராகி, அதற்கான ஸ்கிரிப்டையும் எழுதி முடித்துவிட்டார். வழக்கம்போல அவரது ஆதர்ஷ கதாநாயகனான விஜய்சேதுபதியை இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய் துள்ளார். ஆனால் மணிகண்ட னோ இப்படம் விமர்சன ரீதியாக எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறதோ, அதே அளவு வசூல்ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
-கவிதாசன் ஜெ.