mrunal

நயன்தாரா வெளியேற்றம்!

தமிழ் சினிமாவில் காதல் கதையையும், காவல் கதையையும் க்ளாசிக்காக சொல்லி 90'ஸ் கிட்ஸ்களை தன்பக்கம் திருப்பிய கௌதம்மேனனுக்கு, அண்மைக்காலமாக வெளியான படங்கள் எதுவுமே சரியாகக் கைகொடுக்கவில்லை. இடையே நடிப்பிலும் ஆர்வம் காட்டி வரும் கௌதம்மேனன், விக்ரமை வைத்து இயக்கி முடித்த ‘"துருவ நட்சத்திரம்'’ படம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

Advertisment

தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் இயக்கி வந்த கௌதம்மேனன், தற்போது மலையாள சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க கௌதம்மேனன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஏகப்பட்ட கண்டிஷன்களை நயந்தாரா போட்டிருக்கிறார். அதற்கெல்லாம் நோ சொல்லி கௌதம்மேனன் எண்ட் கார்ட் போட... படத்திலிருந்து வெளியேறினார் நயன்தாரா.

Advertisment

சற்றும் சளைக்காத கௌதம்மேனன் தனது முந்தை படங்களின் நாயகியான சமந்தாவை அணுக, அவரும் ஓ.கே. சொல்லியிருக்கிறாராம். அழுத்தமான ஹீரோயின் கதாபாத்திரம் கௌதமின் படங்களில் இருக்கும் என்பதாலேயே மம்மூட்டி படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்தாராம் சமந்தா

.

இணைந்த கைகள்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள "கங்குவா'’இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து சுதா, கார்த்திக் சுப்புராஜ் என சூர்யாவின் அடுத்தப்பட தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. அதேசமயம் எத்தனை அப்டேட்கள் வந்தாலும் சூர்யா ரசிகர்களையும் தாண்டி பலரையும் எதிர்பார்க்க வைக்கிற படம் வெற்றிமாறனின் ‘"வாடிவாசல்'’. வெற்றிமாறன் -சூர்யா -தயாரிப்பாளர் தாணு கூட்டணியில் உருவாகும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020 ஆம் ஆண்டே வெளியானது. ஜல்லிக்கட்டு குறித்தும், அதன் வாழ்வியல் குறித்தும் உருவாகவுள்ள ‘"வாடிவாசல்'’ படத்திற்காக ஒரு காளையை வாங்கி சூர்யாவே வளர்த்தும் வருகிறார். வாடிவாசலில் இயக்குநர் அமீரும் நடிக்கவிருக்கிறார்.

இதனிடையேதான் சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடித்த ‘"பருத்தி வீரன்'’ படம் தொடர்பான பிரச்சனை பூதாகரமான நிலையில் சூர்யாவும் -அமீரும் இணைந்து படம் நடிப்பார்களா? படம் தொடங்கப்படுமா? சூர்யா படத்திலிருந்து வெளியேறுகிறாரா? என்ற பல கேள்விகள் கோலிவுட்டில் உலாவந்தன. ஆனால், தற்போது "வாடிவாசல்'’ படம் கைவிடப்படவில்லை என்றும், அக்டோபர் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக வாடிவாசலில் சூர்யாவும் -அமீரும் இணைந்தே நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

அரசியல் தூக்கல்!

தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை வணிகரீதியான நடிகராக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன், தொடர்ந்து படங்களை கமிட்செய்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் "அமரன்'’ படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடத்து வருகிறார். படத்தின் வேலைகள் படு ஜோராக நடக்கிறது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுடன் கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்காக பக்காவான ஒரு அரசியல் ஸ்க்ரிப்ட்டை எழுதியுள்ளார் வெங்கட் பிரபு. படத்தில் அரசியல் சற்று தூக்கலாக இருக்குமாம். விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘"தி கோட்'’ படம் முடிந்தவுடன், இந்த படத்தில் வெங்கட் பிரபு கவனம் செலுத்தவுள்ளாராம்.

மிருணாள் தாக்கூர் ஆர்வம்!

"சீதா ராமம்' படத்தின் மூலம் இந்தியாவில் பிரபலமான மிருணாள் தாக்கூரை டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்துவருகிறது. எதார்த்தமான நடிப்பாலும் வசிகரமான அழகாலும் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் மிருணாள் தாக்கூரை, தமிழுக்கு அறிமுகப்படுத்த பல இயக்குநர்கள் முயற்சித்துவருகிறார்கள். மிருணால் தாக்கூருக்குமே கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். அதனால் தொடர்ந்து தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் மிருணாள் தாகூர் ஒப்பந்தமானார் என்றும் பின்னர் கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.