ட்டமன்றத் தேர்தல் போல் பரபரப்புச் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது சேலத்தில் நடந்த தொழிற்சங்கத் தேர்தல். அங்குள்ள உருக்காலைத் தொழிற் சங்க அங்கீகார தேர்தலில், தி.மு.க. அசத்தலான வெற்றி பெற்றது. ஆனால் சி.ஐ.டி.யு. தோழர்கள் தரப்போ, "திருமங்கலம் பார்முலாதான் தி.மு.க.வை ஜெயிக்க வைத்திருக்கிறது' என புகாரைக் கிளப்புகிறது.

சேலம் உருக்காலை, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன்ஓவர் செய்து வருகிற பெரும் தொழிற்சாலையாகும். 651 நிரந்தரத் தொழி லாளர்களும், 800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் இங்கே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான தொழிற்சங்கத் தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடந்தது. கடந்தமுறை தி.மு.க.வின் தொ.மு.ச. தொழிற்சங்கத்துடன் கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகளின் எல்.எல்.எப்., இந்தமுறை ஐ.என்.டி.யு.சி. கூட்டணியில் இடம் பெற்றது.

salem

Advertisment

அதேபோல் எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர் சங்கம் இந்தமுறை தொ.மு.ச. கூட்டணிக்கு வந்தது. இடதுசாரிகளின் சி.ஐ.டி.யு. மற்றும் பா.ஜ.க.வின் பி.எம்.எஸ். தொழிற்சங்கங்கள் தனித்துக் களமிறங்கின. இதனால் களம் புதுவித தகிப்பைச் சந்தித்தது.

தேர்தலில் மொத்தம் உள்ள 651 வாக்குகளில் 647 வாக்குகள் பதிவாகின. இதில் தொ.மு.ச. அணி 255 வாக்குகள் பெற்று அமோக வெற்றியைப் பெற்றது. இரண்டாம் இடம் சி.ஐ.டி.யு.வுக்குக் கிடைத்தது. அந்த சங்கம் 215 வாக்குகளைப் பெற்றது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தொ.மு.ச.தான் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சேலம் உருக்காலை சி.ஐ.டி.யு. சங்கச் செயலாளர் சுரேஷ் குமாரோ, "தொ.மு.ச. அணி பெற்றவெற்றி முறையானது அல்ல. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், வெற்றி என்பது ஜனநாயகப்பூர்வமாக இருக்க வேண்டும். ஆனால் சட்டமன்றத் தேர்தலைப் போல, தொ.மு.ச.வுக்கு ஆதரவாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினரும், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளும் நேரடியாகக் களமிறங்கி, பத்து நாள்களுக்கும் மேலாக உருக்காலையில் பரப்புரையில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மூலமாக, தொ.மு.ச. செயலாளர் பெரு மாளுக்கு வாக்களிக்கக் கோரி, 398 தொழி லாளர்களுக்கும் தலா 5000 ரூபாய் வீதம், அவர்களின் வீடு களுக்கே நேரில் சென்று பட்டுவாடா செய்துள்ள னர். குறிப்பிட்ட சிலருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுக் கப்பட்டு உள்ளது. திருமங்கலம் பார்முலாவுக்கு பேர் போன தி.மு.க., தொழிற்சங்கத் தேர்தலிலும் அதே உத்தியைப் பின்பற்றியுள்ளது.

Advertisment

சில தொழிலாளர்கள் பணம் வாங்க மறுத்தபோது, அவர்களின் வங்கிக் கணக்கிற்கே கூகுள் பே, போன் பே மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளனர். சிலரை மிரட்டிப் பணத்தைத் திணித்துள்ளனர். உருக்காலைக்குள் பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து விளம்பர பேனர்கள் வைத்துள்ள னர்.

salem

அவர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தது குறித்து, வீடியோ ஆதாரத்துடன் உருக்காலை நிர்வாகம் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் இரண்டு முறை புகார் அளித்தோம். ஆனால், ஆளுங்கட்சி என்பதால் யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார் குமுறலுடன்.

தொ.மு.ச. தரப்பினரோ ''கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக உருக்காலை நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், தேர்தலையே நடத்தவிடாமல் தடுத்தனர். இப்போது அவர்கள் அந்த முயற்சியில் தோற்றுப்போனதால் தொ.மு.ச. மீது குற்றம் சாட்டுகின்றனர்'' என்றது.

சாதாரண தொழிற்சங்க தேர்தலில் இத்தனை பஞ்சாயத்தா? என தொழிலாளர் கள் தரப்பில் நாம் விசாரித்தபோது "இந்தத் தேர்தல் மூலம் கிடைக்கும் பதவிகளைக் கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை கைப்பற்றலாம். அதற்காகத்தான் இந்தப் போட்டி''’என்றார்கள் அழுத்தம் திருத்தமாய்.

salem

புகார்கள் குறித்து, சேலம் உருக்காலை தொ.மு.ச. செயலாளர் பெருமாளிடம் கேட்டபோது, "கடந்த முறை வெற்றிபெற்ற பிறகு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கேன்டீனில் சப்பாத்தி மெஷின், உருக்காலை பள்ளிக்குப் புதிய வகுப்பறைகள், மார்க்கெட்டிங் டிவிஷனை தனியாக பிரித்தது உள்ளிட்ட நிறைய ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். வாக்காளர்களுக்கு பணம் என்ற குற்றச்சாட்டுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அது கட்சி சம்பந்தப்பட்டது. தேர்தல் வெற்றி என்பது, கட்சியின் கவுரவப் பிரச்சினை என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்திய அளவில், துர்காபூர் உருக்காலையில் மட்டும் தான் சி.ஐ.டி.யு. அங்கீகாரம் பெற்றுள்ளது. அவர்களுடைய செயல்பாடு சரியில்லை. அதனால்தான் அவர்களால் எங்கேயும் வெற்றிபெற முடியவில்லை. தி.மு.க.வினர் வெற்றிபெற்று வந்தால்தான் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவார்கள் என தொழிலாளர்கள் நம்புகின்றனர். அதுதான் வெற்றியைத் தந்திருக்கிறது''’என்றார் புன்னகையோடு.

இது குறித்து அந்த உருக்காலையின் மக்கள் தொடர்பு அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்டபோது "தேர்தல் முறைப்படிதான் நடந்தது'' என்று முடித்துக்கொண்டார்.

தொழிற்சங்கத் தேர்தலில் தொ.மு.ச. பெற்ற வெற்றி, மற்ற தொழிற்சங்கங்களை கதிகலங்க வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.