உலகின் மிக முக்கியமான 20 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஜி-20 அமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.
டெல்லியில் 2 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு முக்கிய ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் உலக நாடுகளுக்கு ஏற்படும் நன்மை என்ன? இந்தியா நடத்தியிருக்கும் இந்த உச்சி மாநாடு வெற்றியா? என்பதெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவிலான பொருளாதார சூழல் கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், நாடுகளுக்குள் நடக்கும் யுத்தம், அறிவியல் வளர்ச்சி, கால நிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஜி-20 அமைப்பு.
இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, இந்தோனேசியா, ஜப்பான், அர்ஜெண்டினா, கனடா, பிரேசில், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, துருக்கி, மெக்சிகோ, தென்கொரியா ஆகிய 20 நாடுகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடக்கும். உச்சி மாநாடு நடந்து முடிந்ததும் அடுத்தாண்டுக்கான தலைவராக ஒரு நாடு தேர்வு செய்யப்படும். அப்படி தேர்வு செய்யப்படும் நாடு, அந்தாண்டுக்கான மாநாட்டை நடத்துகிற பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
அந்தவகையில், கடந்த ஆண்டு இந்தோ னேசியாவில் நடந்த மாநாட்டின் முடிவில் 2023-க்கான உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில், இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாட்டை கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடத்தியது இந்தியா.
இந்த மாநாட்டுக்காக டெல்லியிலிருக்கும் பிரகதி மைதானத்திலுள்ள பழைய கட்டிடம் ஒன்றை இடித்து புதிதாக ஒரு மண்டபம் உருவாக் கப்பட்டது. அதற்கு பாரத் மண்டபம் என பெயர் சூட்டியது ஒன்றிய அரசு. பாரத் மண்டபம் உருவாக்குவதில் தொடங்கி டெல்லியை அலங் கரிப்பது வரையில் பிரமாண்டமான ஏற்படுகள் செய்யப்பட்டன. இந்த மாநாட்டிற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை மட்டும் 4,000 கோடி ரூபாய்! இதில் பாரத் மண்டபத்தை உருவாக்குவதற்கு மட்டும் 2,700 கோடி. டெல்லியில் பெய்த ஒருநாள் மழையிலேயே இந்த மண்டப வளாகம் முழுக்க மழைநீர் தேங்கிய நிலையை வீடியோவாக வெளியிட்டு காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருக்கிறது.
இந்தியாவில் முதன்முறையாக நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் (இங்கிலாந்து) பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் (சீனாவை தவிர) டெல்லி வந்திருந்தனர்.
மேலும் மாநாட்டிற்கு சிறப்பு அழைப் பாளர்களாக ஸ்பெயின், சிங்கப்பூர், பங்களாதேஷ், நெதர்லாந்து, ஓமன், எகிப்து, மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தலைமையேற்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார் பிரதமர் மோடி.
மாநாட்டின் முதல்நாளில் பேசிய மோடி, "சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையே அதிகரித்துவரும் நம்பிக்கை குறைபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி-20 அமைப்பில் இணைப்பது குறித்துப் பேசினார். இதனை தலை வர்கள் அனைவரும் ஒருமித்தமாக ஏற்றுக்கொள்ள, ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த அமைப்பில் இணைக்கப்பட்டது. இதற்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டது ஆப்பிரிக்கா ஒன்றியம். இனி இந்த அமைப்பு அடுத்தாண்டு முதல் ஜி-21 என்று அழைக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து நடந்த அமர்வுகளில் ஜோ பைடன், ரிஷி சுனக், சிரில் ரமபோசா, அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். உலக அளவில் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் குறித்து அவர்கள் எடுத் துரைத்தனர். இதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. புதுடெல்லி பிரகடனம் என பெயரிடப்பட்ட அதில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்திருந்தன.
குறிப்பாக, பயங்கரவாதம், இனவாதம், இனவெறி மூலமாக நடக்கும் அனைத்து பயங்கரவாதங்களையும் கண்டிக்கிறோம்; சர்வதேச சட்டங்களின் முழுமையான அணுகுமுறைகள் மூலம் பயங்கரவாதத்தை திறம்பட எதிர்கொள்ள முடியும்; பயங்கரவாத குழுக்களுக்கான நிதி சேர்ப்பு, ஆள் சேர்ப்பு, அரசியல் ஆதரவு உள்ளிட்டவைகளை தடுப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பின் செயலாற்றலை மேலும் அதிகரித்து பலப்படுத்த வேண்டும், ஊழல் ஒழிப்பு, பொருளா தார மந்தநிலை, பருவநிலை மாற்றங்கள், பாலின சமத்துவம், எரிபொருளை கையாளுதல் ஆகியவை குறித்து பிரகடனத்தில் சொல்லப்பட்டது.
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று கடந்தாண்டு இந்தோ னேஷியாவில் நடந்த உச்சிமாநாட்டில் பேசப்பட்ட போது, அடுத்தாண்டு (2023) புதுடெல்லியில் விவா திக்கலாம் என்று முடிவானது. ஆனால், டெல்லியில் தற்போது நடந்த மாநாட்டில் இந்த போர் குறித்து அழுத்தமான பிரகடனம் செய்யப்பட வில்லை. மாறாக, சர்வதேச சட்டங்களின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், ஒத்துழைக்கவும் அனைத்து நாடுகளையும் அழைக்கிறோம். உக்ரைனில் நியாயமான, நீடித்த அமைதிக்கான அனைத்து ஆக்கப்பூர்வ முயற்சிகளையும் வரவேற்கிறோம். அணு ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பொத்தாம்பொதுவாக ஒரு கருத்தினை மட்டும் பதிவு செய்துள்ளது ஜி-20 மாநாடு பிரகடனம்.
டெல்லி பிரகடனத்தில் இடம்பெறக்கூடிய பிரச்சனைகள் குறித்து கடந்த ஓராண்டில் பலகட்ட விவாதங்கள், ஆலோசனைகள் நடந்தன. அதில், ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்குடையேயான போரினைக் கண்டிப்பது குறித்த எந்த ஒரு தீர்மானமும், கருத்தும் இடம்பெறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது ரஷ்யா. அதனால், இந்த அமர்வுகளில் உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ரஷ்யாவும் சீனாவும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புகளை தெரிவித்தபடியே இருந்தன. அதன் விளைவு, உக்ரைன் போர் குறித்த அழுத்தமான விசயங்கள் இடம்பெறவில்லை என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் உக்ரைன் அரசு, ”புது டெல்லியின் பிரகடனத்தால் பெருமைப்படு வதற்கு ஒன்றுமில்லை. ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி கடுமையான விவாதங்களை எதிர்பார்த்தோம். அது இல்லை என்கிறபோது, ஜி-20 மாநாடு சாதித்தது என்ன? எதுவும் கிடையாது. மாநாட்டிற்கு எங்களை அழைத்திருந்தால் ரஷ்யாவின் உண்மை முகமும் எங்களின் நியாயமும் உலகுக்கு தெரிந்திருக்கும்'’என்று தெரிவித்துள்ளது. இரண்டு நாள் மாநாட்டின் இறுதி யில் பேசிய பிரதமர் மோடி,”"உலக பொருளாதாரத்தில் வடக்கு -தெற்கு திசைகளில் உள்ள பிளவுகள், சிக்கல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்களில் பாதுகாப்பு, எரிசக்தி, உணவு, உர நிர்வாகம் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் நிகழும் சவால்களை எதிர்கொண்டு தீர்வு காண்பதில் நாம் இணைந்து செயலாற்று வோம்''’என்றார் தீர்க்கமாக.
மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த உலக தலைவர்களுக்காக பிரமாண்டமான விருந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. அந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாநில முதலமைச் சர்கள் அனைவரையும் அழைத்திருந்தார் திரௌபதி. இதில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், வேட்டி-சட்டையுடன் ஓவர் கோட் அணிந்து விருந்தில் பங்கேற்றார். அவரை உலகத்தலைவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகப்படுத்தும் போது, "தென்னிந்தியாவின் பவர்ஃபுல் லீடர்' என்று சொல்லியிருக்கிறார்.
இந்திய மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. அதனை ரசித்து ருசித்து சாப்பிட்டனர் உலகத் தலைவர்கள். இந்த விருந்து நிகழ்வினை, ஒடிசா, கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட சிலரிடம் மட்டும் பேசியிருக்கிறார் ஸ்டாலின். விருந்து நிகழ்வினை முடித்துவிட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய ஸ்டாலின், 10-ந்தேதி சென்னை திரும்பினார். முன்னதாக, இந்த விருந்தில் கலந்துகொள்வதை தவிர்க்கலாம் என ஸ்டாலினிடம் வலியுறுத்தப்பட்டிருக் கிறது. அதனை நிராகரித்துவிட்டார் முதல்வர்.
இம்மாநாட்டையொட்டி, மீண்டும் விளிம்பு நிலை மக்களின் வசிப்பிடங்களை திரை கட்டி மறைத்தது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இரண்டுநாள் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் பாரதம் பெருமை கொள்கிறது என உலகத்தலைவர்களிடம் பிரதமர் மோடி சிலாகித்துள்ள நிலையில், இத்தகைய மாநாடுகள் வெற்றியைத் தருகிறதா? என பொருளாதார ஆய் வாளர்கள் சிலரிடம் நாம் பேசியபோது,”"வல்லரசு நாடுகளும் வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவாதிக்கவே இந்த மாநாடுகள் நடக்கிறது. ஒவ்வொரு வருசமும் நடப்பதால் புதிய விசயங்கள் எதுவும் இருப்பதில்லை.
ஜி-20 அமைப்பின் முதல் மாநாடு 1999-ல் ஜெர்மனியில் நடந்தது. அன்றைக்கு என்னென்ன விசயங்கள் ஆராயப்பட்டனவோ அதேதான் 2023-ல் நடந்த மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக ஓரிரு பிரச்சனைகள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்குமே தவிர கவனித்தால் புதியவை எதுவும் இருக்காது. உலக மக்கள் தொகையில் 70 சதவீதம் இந்த 20 நாடுகளில் இருப்பார்கள். அதேபோல உலக பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் 85 சதவீதம் இந்த நாடுகளுக்கு சொந்தமானதுதான்.
சிறிய நாடுகளில் கிடைக்கும் எரிபொருளை எப்படி கொள்ளையடிப்பது? வல்லரசு நாடுகளின் திட்டங்களுக்கு மற்ற நாடுகளை எப்படி அடி பணிய வைப்பது? போன்றவைகளை குறிவைத்தே ரகசிய விவாதங்கள் நடக்கும். அதேசமயம், இந்த மாநாட்டில் போட்டுக்கொள்ளப்படும் ஒப்பந்தங் கள் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தும் என்பதற்கு எந்த சட்டங்களும் கிடையாது. ஐ.நா. சபையில் உறுப்பினராவதற்கு உள்ள ஓட்டிங் பேட்டர்ன் எதுவும் ஜி-20-க்கு இல்லை. தலைமையேற்று நடத்தும் நாடு விரும்பினால் எந்த ஒரு நாட்டை யும் இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ள முடியும். அதனால், இத்தகைய மாநாடுகளால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. வல்லாதிக்க சக்திகளின் எதேச்சதிகாரத்தை நிலைநிறுத்தவே இந்த மாநாடுகள் பயன்படுகின்றன''’என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்தியா தலைமையேற்று நடத்திய இந்த மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்திலும் இந்தியா என்ற சொல்லைத் தவிர்த்து, பாரத பிரதமர் மோடி என்கிற பெயர்ப் பலகையே இருந்தது. மாநாடு தொடர்பான அனைத்து ஆவண குறிப்புகளிலும் பாரதம் என்றே பயன்படுத்தப்பட்டது. இந்தியா வின் பெயரை பாரதம் என்று மாற்றுவதற்கு மோடி அரசு திட்டமிட்டிருப்பதை உறுதி செய்வதாக இருந்தது ஜி-20 உச்சி மாநாடு!