பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது கல்லூரிப் பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காக 13-ந் தேதி மாலை புறப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு, ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவுப் பெட்டியில், தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். அதே ரெயிலில் அந்த முன்பதிவுப் பெட்டியில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படை யில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயது பிரப்ஜோட் சிங் என்பவரும் பயணம் செய்தார்.
அப்போது பேராசிரியையிடம், பிரப்ஜோட்சிங் பேச்சு கொடுக்கத் தொடங்கியவர், திடீரென சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதில் அதிர்ந்துபோன பேராசிரியை அடுத்து என்ன செய்வது என்று திகைத்தார். நள்ளிரவு நேரம் என்பதால் ரெயிலில் மற்ற அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் வண்டி நிற்க... வேகமாக இறங்கி, ரயில்வே பொலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறினார் பேராசிரியை.
உடனே, அந்த பிரப்ஜோட்சிங்கை மடக்கிய போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவரோ, "’நான் சென்ட்ரல் கவர்மென்ட் ஆபீசர். ஸ்டேட் போலீஸ் கூப்பிட்டா வரமாட்டேன்'” என்று அடாவடி செய்ய, அவரை குண்டுக்கட்டாக ஸ்டேஷனுக்குத் தூக்கி வந்தனர். விசாரணையில் குற்றம் உறுதியாக... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கோபிச்செட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
"ராணுவ அதிகாரி என்ற பெயரில் பலபேர் தனியாக வரும் பெண்களிடம் அத்துமீறு கிறார்கள். சிலர் பாலியல் பலாத்காரத்துக்கும் ஆளாகிறார்கள். அவமானம் என்று அவர்கள் புகார் கொடுப்பதில்லை. அது அவர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது. இப்படிப் பட்டவர்களை விடக்கூடாது''’என்கிறார்கள் ரயில்வே போலீசார்.
பேராசிரியையின் அதிரடிப் புகாரால், அந்த அடாவடி அதிகாரி கம்பி எண்ணுகிறார். இதற்கு முன், விமானத்தில் பணிபுரியும் பெண்ணிடம் ஆண் அதிகாரி நடந்துகொண்ட விதமும் புகாராகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணவழி பாலியல் தொந்தரவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள் பெண்கள். அவர்களைக் குறி வைப்பவர்கள் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதுதான் அதிர்ச்சிகரம்.