ஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஆங்காங்கே சோதனைகள் செய்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு போதைப் பொருள் விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கி வருகின்றனர். கடந்த வாரம் புதுக்கோட்டையில் சிலரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனாலும் போதை விற்பனை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

dd

இந்நிலையில், கடந்த வாரம் புதனன்று இரவு, பேராவூரணி அருகேயுள்ள பின்னவாசல் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பருகே 2 வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் வாகன ஓட்டுநர்களிடம் விசாரிக்க, சரியான பதில் சொல்லாததால், பேராவூரணி காவல் நிலையத்தில் வாகனங்களையும் ஓட்டுநர் களையும் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், லாரி ஓட்டுநரான படையப்பா முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்ல, தொடர்ந்து விசாரித்ததில், பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் வீட்டில் கஞ்சா மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வரை செல்ல வேண்டுமென்பதற்காக வண்டி நிற்பது தெரியவந்தது. உடனே சிதம்பரத் தைப் பிடித்து விசாரித்ததில், அவரது வீட்டு வாசலில் புதைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குழாய்களுக்குள் 12 கஞ்சா பண்டல்கள் கைப்பற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில், மற்றொரு சரக்கு வாகனத்திற்கு கஞ்சா பண்டல்களை மாற்றத் தயாராக நின்ற ஆலங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ்குமாரையும் கைது செய்து, 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

போலீசாரின் தொடர் விசாரணை யில், எய்சர் லாரியின் அடியிலுள்ள ரகசியப் பகுதியில் கஞ்சா பண்டல் கள் இருப்பதாகக் கூற, அதிர்ச்சி யடைந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி உள்ளிட்ட போலீசார், தஞ்சை எஸ்.பி. ரவளிப் பிரியா கந்தபுனேனி, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. பிரித்விராஜ் சௌகான் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், எஸ்.பி., டி.எஸ்.பி. முன்னிலையில் எய்சர் லாரியிலுள்ள பிளாட்பாரத்தில் போடப்பட்டுள்ள போல்ட்களைக் கழற்றிவிட்டு பிளைவுட்டைத் தூக்கியபோது, பண்டல் பண்டல்களாக கஞ்சாவைக் கைப்பற்றினர். சுமார் 600 கிலோவுக்கு மேல் கஞ்சா இருந்தது. ஈரமாக இருந்ததால் 460 கிலோ எனக் கணக்கிடப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த குமார் மூலமாக ஆந்திராவில் இருந்து இதுபோல லாரிகளில் பிளாட்பாரத்தில் ரகசிய அறை அமைத்து கஞ்சா மூட்டைகள் கடத்தி வரப் பட்டு, சிதம்பரம் போன்ற மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும், சிதம் பரத்தின் பின்னவாசல் கிராமத்திலிருந்து எந்தச் சோதனைச்சாவடியும் இல்லாமல் முழுமையாக கிராமங்களுக்குள்ளேயே 15 கி.மீ. தூரத்திற்குள் கிழக்குக் கடற்கரை கிராமங்களுக்குக் கொண்டுசென்று இலங் கைக்கு கடத்துவதற்கு வசதியாகவே பின்னவாசல் கிராமத்தைத் தேர்ந் தெடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிகிறது.

Advertisment

dd

மேலும், தஞ்சாவூர், நாகபட்டிணம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு மொத்தமாகக் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், ஆந்திராவைச் சேர்ந்த ராம்பாபுவிடம் இருந்து திருச்சி குமார் (பிறகு தேனி மாவட்டம் குமார் என்று கூறியுள்ளனர்) மொத்த மாக வாங்கி லாரியில் அனுப்புவார். ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று சில்லறை வியாபாரிகளுக்குக் கொடுப் பதும் தெரியவந்தது.

இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக லாரி உரிமையாளரும் ஓனருமான தேனி மாவட்டம் உத்தம பாளையம் கருமாரிபுரம் படையப்பா, பேரா வூரணி பின்னவாசல் சிதம்பரம், மதுரை திரு மங்கலம் ஆலங்குளம் ரமேஷ்குமார், பேரா வூரணி பூக்கொல்லை எம்.ஜி.ஆர். நகர் செல்வராஜ், பேரா வூரணி அண்ணாநகர் கணேசன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் ஆந்திர மாநிலம் ராம் பாபு, தேனி மாவட்டம் குமார், பேராவூரணி அன்னக்கிளி, பூக்கொல்லை மங்களம் ஆகிய நான்கு பேர் உள்பட 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"இத்தோடு விசாரணையை முடக்கிவிடாமல் தொடர்ந்து விசாரணை செய்து இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மேலும் மேலும் கஞ்சா விற்பனையும் தொடரும், அதற்கு அடிமையாகும் இளைஞர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் எழும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

_________________

Advertisment

பைக் சீட்டுக்கு அடியில் கஞ்சா பொட்டலங்கள்!

மொத்தமாக பண்டல் பண்டலாகக் கட்டப்படும் கஞ்சா மூட்டைகளை லாரிகளில் ரகசிய அறை அமைத்து மறைத்துவைத்துக் கடத்துவதுபோல, சில்லறையாக 5 கிராம், 6 கிராம் பாக்கெட்களில் விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகள், மோட்டார் சைக்கிள்களின் சீட்டுகளைக் கழற்றி அதற்குள் வைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகின்றனர். போனில் தொடர்புகொண்டால் குறிப்பிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று கஞ்சா பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த சில்லறை விற்பனையில் பள்ளி மாணவர்களும் ஈடுபட்டுள்ளதுதான் வேதனையானது.

-செம்பருத்தி